கணித மேதை ராமானுஜன்!

கணித மேதை ராமானுஜன்!

பிறந்த தினம் டிசம்பர் 22.

சிறுவயதில் இருந்து யாருடைய உதவிகளும் இன்றி கணித துறையில் பல சாதனைகளைப் புரிந்த கணித மேதை ராமானுஜன் பற்றி அவரது பிறந்த தினமான இன்று நினைவு கூர்வோம்!

கணிதத்தின் மீது கொண்ட தீராத காதலால் கணித துறையில் பல சாதனைகளைச் செய்தவர். வறுமை இவரை ஆட்கொண்ட போதும் கணிதத்தை இவர் கைவிடவில்லை.

தமிழனின் புகழை உலகுக்கு உணர்த்திய உன்னத மனிதர். 20ஆம் நூற்றாண்டில் உலகத்தையே வியக்கச் செய்த ஒப்பற்றக் கணித மேதையாகத் திகழ்ந்தவர்.
மிகவும் சிக்கலான கணித தேற்றங்கள் 4000 மேற்பட்ட வற்றினை உலகுக்கு வழங்கிய ஒப்பற்ற திறமை சாலியாவார். தனது வாழ்நாள் முழுவதையும் கணிதத்திற்காகச் செலவழித்தவராவார்.
ராமானுஜன் இந்த உலகை விட்டு மறைந்து நூற்றாண்டுகள் கடந்தும் உலகிலுள்ள கணிதவியலாளர் களுக்கு ஓர் உத்வேகமாக இன்றும் திகழ்கின்றார்.

இவரது தந்தை கும்பகோணத்தில் உள்ள ஒரு துணிக்கடை வியாபாரியின் கடையில் குமாஸ்தாவாக பணியாற்றினார்.

தனது ஐந்தாவது வயதில் கும்பகோணத்திலுள்ள ஆரம்பப் பள்ளிக்குச் சென்று பயின்றார். பத்தாவது வயதில் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
இந்நிலையில் எஸ்.எல்.லோனி அவர்கள் எழுதிய மேம்பட்ட கோணவியல் புத்தகத்தை தனது வீட்டில் குடியிருந்த கல்லூரி மாணவரிடம் வாங்கிப் படித்தார். அப்போது அவருக்கு வயது 11 ஆகும். தனது 13வது வயதில் அந்த புத்தகத்தை முழுவதும் கற்று தேர்ச்சி பெற்றார்.

கோயில் மண்டபங்களின் சுவர்களில் சாக்பீஸ்களால் கணக்குகளைப் போட்டு அதற்குப் பதில்களைக் கண்டுபிடிப்பார். விழித்திருந்தபோது கண்டுபிடிக்காத கண்டுபிடிப்புகளைத் தூக்கத்தில் கனவில் விடை கண்டுபிடித்து கணிதத்தின் மேல் அவர் கொண்ட தீராக் காதலை மெய்ப்பித்தார்.

1909 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தன் குடும்ப வறுமை காரணமாக 20 ரூபாய் சம்பளத்துக்கு சென்னை துறைமுகத்தில் எழுத்தாளர் பணியில் சேர்ந்தார். எனினும் தவறாமல் கணிதத்தைப் பயிற்சி செய்துகொள்வார்.

கணிதத்தில் ராமானுஜனின் சாதனைகள்;
பெர்நெவுவியன் எண்கள் என்ற கணிதத்துறை பற்றிய சிறப்புக் கட்டுரையை ராமானுஜர் வெளியிட்ட பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு ஆங்கிலேயர் ஒருவர் அனுப்பி வைத்தார்.

ராமானுஜரின் கணக்கு சூத்திரங்கள் மற்றும் குறிப்புகளைப் பார்த்து பல்கலைக்கழக வல்லுனர்கள் வியந்தனர். அதன் பின் இங்கிலாந்து வர அழைப்பு விடுத்தனர். இதன்காரணமாக 1914ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார் ராமானுஜர்.

பல கணித மேதைகளுக்கு மத்தியில் தனது கணக்குத் திறமையை நிரூபித்தார். இங்கிலாந்து அரசு இவரது திறமையைக் கண்டு வியந்தது அவரை ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு செய்து பெருமைப்படுத்தியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெல்லோஷிப் பதவியும் இவருக்குக் கிடைத்தது.
மூன்று ஆண்டுகளில் 32 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். 1911இல் முதன்முறையாக இந்தியக் கணிதக் கலை ஆய்விதழில் ராமானுஜரின் கணிதப் புதிர்கள் வெளியாகின.

சிறப்பு இயல்புகளைக் கொண்ட எண்களைப் பற்றிய அவரின் முதல் ஆய்வுக் கட்டுரையும் அதே ஆண்டு வெளிவந்தது. லண்டன் கணிதக் கழகத்தின் கௌரவ உறுப்பினர், கேம்பிரிட்ஜ் தத்துவக் கழகத்தின் கௌரவ உறுப்பினர் போன்ற பதவிகளோடு 1918 மே மாதம் சிறப்புவாய்ந்த எஃப்.ஆர்.எஸ் பட்டமும் கிடைத்தது.
இவரின் ஆவணங்களை கொண்ட உயர் கலப்பு எண்களின் [Highly Composite numbers] விளக்கவுரை இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ராமானுஜரின் பசிவு சூத்திரம் போன்றன அணுக்களைத் துகள்களாக பிரிக்கும் தன்மையைப் பற்றி ஆராயப் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு முன் எந்த ஒரு இந்தியருக்கும் இத்தகையப் பாராட்டும் கௌரவமும் இங்கிலாந்தில் கிடைத்ததில்லை.


1919 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி கடல் வழி பயணம் செய்து மும்பைத் துறைமுகம் வந்து சேர்ந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘கணித மேதை சீனிவாச ராமானுஜரே வருக வருக’ என பதாகைகளுடன் பெரியவர்கள் பூங்கொத்துக்கள் கொடுத்து வரவேற்றனர்.

1919 ஏப்ரல் 2ஆம் தேதி சென்னை வந்தார். ராமானுஜரின் இந்திய வருகை பற்றி பத்திரிகைகளில் பெருமை பேசி செய்திகள் வெளியாகின. உடல் நலம் குன்றிவரும் செய்தியைக் கேட்டதும் சென்னையில் அவர் தங்கி சிகிச்சை பெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

ஆதிநாராயண செட்டியார் பங்களாவில் வைத்து டாக்டர் நஞ்சுண்டராவ் தனிப்பட்ட அன்போடு சிகிச்சை அளித்தார். ஆனால் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.

இதன்பின் 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி இவர் உயிர் பிரிந்தது. 100 ஆண்டுகள் கடந்தும் கணித உலகம் நிரூபிக்கப் போராடி வரும் ஆயிரக்கணக்கான சூத்திரங்களைத் தந்த மேதை தனது 32வது வயதில் உலகை விட்டுப் பிரிந்தார்.

ராமானுஜரின் முழு வாழ்க்கை நூலை முதன் முதலாக இந்திய நூலகத் தந்தை எஸ். ஆர். ரங்கநாதன் எழுதினார். ராமானுஜர் பெயர்களில் கணித விருதுகளும் சங்கங்களும் கண்காட்சிகளும் நிறுவப்பட்டன. இவர் பயின்ற பள்ளி, வேலை பார்த்த துறை என ஏராளமான இடங்களில் இவரது சிலைகள் உள்ளன. கும்பகோணத்தில் இவர் வாழ்ந்த வீடு தேசிய அருங்காட்சியகமாக உள்ளது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் கணிதத் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com