
இரும்பு என்றாலே துருப்பிடிக்கத் தானே செய்யும். மரம் என்றாலே கரையான் அரிக்கத்தானே செய்யும். அது போல வாழ்க்கை என்றாலே இன்பமும், துன்பமும் இரண்டரக் கலந்துதானே இருக்கும்.
சக்கரம் போல சுழன்று, மாறி,மாறி வருவதுதான் வாழ்க்கை என்ற சூட்சுமம் தெரிந்து கொண்டால், துன்பங்கள் நம்மைத் துரத்தாது.
ஞானி ஒருவரிடம் குடும்ப வாழ்க்கை வாழ்க்கையை மேற்கொண்ட ஒருவர் வந்தார். தான் ஞானம் பெற விரும்புவதாகவும், தாங்களே குருவாக இருந்து ஞானத்தில் சிறந்த ''ஞானம்'' எதுவோ அதை கற்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அறிவுரைகள் மூலம் ''ஞானத்தை'' புரிய வைக்க முடியாது என அறிவார் அந்த ஞானி.. 'ஞானத்தை'' புரிய வைக்க அவரிடம்,
''தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்து இருக்கும்படியும், அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றி வரும் போதும், மாலையில் திரும்பும் போதும் அதனை கவனிக்கும்படியும் கூறினார்.
மறுதினம் பொழுது புலர்ந்தது. திண்ணையில் அமர்ந்தார் ஞானியிடம் வந்தவர். சலவைத் தொழிலாளி அழுக்கு பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றி சென்றார்.
மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் சொன்னது போல் காலையிலும், மாலையிலும் கழுதைகள் சென்றதையும், திரும்பியதையும் கவனித்தேன்.
ஆனால், அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பது போல் தெரிய வில்லையே எனக் கூறினான்.
"அன்பனே... காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்து சென்றன. அப்போது "அழுக்கு துணிகளை சுமக்கிறோம் என்று துன்பம் இல்லை."
அதே போல் 'மாலையில் "சலவை செய்த சுத்தமான துணியை சுமக்கிறோம் என்ற இன்பம் இல்லை"...
துன்பம் வரும் போது, அதிக துன்பமின்மையும், இன்பம் வரும்போது அதிக மகிழ்ச்சி இல்லாமலும், இன்பம், துன்பம் இரண்டையும் நடுநிலையான மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற செய்தி, அந்த கழுதைகள் மூலம் தரும் ''ஞானம்'' என்றார் அந்த ஞானி.
இன்பமும் துன்பமும் நம் இடையே தங்கி விடுவது இல்லை. இன்பம் வரும் போது மனசு மகிழ்ச்சியில் அடைகிறது. ஆனால் துன்பம் வரும்போது நம் இதயம் அதை ஏற்க்க மறுக்கிறது
இன்பம் வரும் வேலையில் நாம் அதை வரவேற்பதைப் போல, துன்பத்தையும் நாம் வரவேற்க வேண்டும். அப்போதுதான் நம் இதயம் இரண்டையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளும் .