ஓய்வு பெற்று ஓய்ந்துபோன கணவனுக்கு
ஓட்ஸ் கஞ்சியும் மருந்தும் கொடுக்கும்
சம்பளமில்லா தாதி!
பொறுப்பற்றுத் தாய்தனை பேசுவாரை
பொறுத்துப் போகும் தலைமகனுக்கோ
அவளோர் அன்புத்தாய்!
பிள்ளைகளுக்குக் கேட்கும் நேரத்தில்
இட்லியும், சட்டினியும் சாப்பாடும்
கொடுக்கின்ற சுரணையில்லா சர்வர்!
வீட்டு வேலை செய்யாமல் நேரத்தை வீணடிக்கும்
பெண்டிர் வாழும் வீட்டினில்
அவள் ஒரு வேலைக்காரி!
வெறுப்புற்று வெந்நீராய் சுடுசொல் பேசி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்
மருமகளுக்கோர் எதிரி!
தாதியாய் - தாயாய் - சர்வராய் - வேலைக்காரியாய் -
எதிரியாய் - வாழ்வோர் நடுவே
அவள் ஓர் சக்தி!
வீட்டுக்குள்ளே வாழும் பெண்களை சக்தியென
வீதிதனில் வாய் கிழியப் பேசுகின்றோம்
ஆனால் அந்தச் சக்திகள் சகதியில் உழல்கின்றனவோ?