மங்கையர் மலர் பெண்களுக்கான பத்திரிகை என்றதுமே, நானும் என் அம்மா மற்றும் சகோதரிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து முதன் முதலில் இரண்டு ரூபாய் விலையில் 1972 என்று நினைக்கிறேன் வாங்கிப் படித்து மகிழ்ந்தோம். மாதம் ஒருமுறை தான் மலர் மலரும். அந்த நாளுக்காக ஒவ்வொரு மாதமும் காத்திருந்தோம். அதன் பிறகு எவ்வளவோ மாற்றங்கள்.
பெண்களுக்கான புடவை பரிசுப் போட்டியில் கலந்து கொண்டு புடவை பரிசு பெற்றேன். நான் மட்டுமா எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பலரும் இதனால் புடவைப் பரிசை பெற்றார்கள். மங்கையர் மலர் வாசகிகளாகவும் ஆனார்கள். என்ன ஒரு பெருமை.
பரிசு பெற்ற எனக்கு உறவினர்களிடமிருந்து பாராட்டுக்கள் வேறு. மேலும், நகைச்சுவை டயலாக் போட்டியில் வெற்றி பெற்று நடிகை குமாரி சச்சுவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு மங்கையர் மலர் மூலமாகக் கிட்டியது. என்ன ஒரு சந்தோஷம். நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. என்னுடைய குறிப்புகள் அவ்வப்போது மங்கையர் மலரில் வெளியாகி நான் ஒரு எழுத்தாளர் என்று உணர்ந்த தருணங்கள் உன்னத மானவை எண்பத்தைந்து வயதாகும் என் தாயும் மங்கையர் மலர் வாசகி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.