98 வயதான தேவ் என்ற மூதாட்டி எந்தவித தயக்கமும், உடல் நடுக்கமும் இல்லாமல் சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்த சம்பவம், அங்கு வந்த ஐயப்ப பக்தர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
தற்போது சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடந்து வருவதால் நவம்பர் 16ம் தேதி முதல் நடை திறக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டு வருகிறது. தினசரி சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஓரிரு நாட்களில் ஒரு லட்சத்தை தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கேரளா, கண்ணூர் மாவட்டம் இருட்டி பகுதியை சேர்ந்த 98 வயதான தேவ் என்ற மூதாட்டி நேற்று அதிகாலை வேளையில் சபரிமலை சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தார். வயது முதிர்வு, உடல் தளர்ச்சி போன்ற எந்தவொரு தடங்கலையும் பொருட்படுத்தாமல் தேவ் என்ற மூதாட்டி அதிகாலை சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்தது அங்கு வந்திருந்த ஐயப்ப பக்தர்களை பெரிதும் வியப்படையச் செய்துள்ளது.
மூதாட்டியின் ஐயப்ப பக்தியைக் கண்ட போலீசாரும், தேவஸ்வம் போர்டும் அவருக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்துகொடுத்தனர். அதேபோல் கூட்ட நெரிசலில் அவர் தடுமாறக்கூடாது என்பதற்காக அவருக்கு வீல் சேர் கொடுக்கப்பட்டு அதில் அவரை சன்னிதானம் வரை அழைத்து வந்தனர்.
தேவ் மூதாட்டி ஐயப்பனை தரிசிக்க, தொடர்ந்து 25வது ஆண்டாக சபரிமலைக்கு வந்துள்ளார். இம்முறை தனது உறவினர்கள் உதவியோடு அவர் ஐயப்பனை தரிசனம் செய்ய வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அங்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உட்பட பலரும் அவரைக் கண்டு வியந்ததோடு மட்டுமல்லாமல், அந்த மூதாட்டியுடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.