
முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. அவ்வாறு அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் 2023 - 2024 கல்வியாண்டில் இந்த திட்டம் 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த திட்ட விரிவாக்கத்திற்காக ரூ. 33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அரசு அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் பள்ளிகள் தொடங்கி மூன்று மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். 4 நாள் பயணமாக டெல்டே மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் நாளை திருக்குவளை அரசு தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகள் பட்டியல் லிஸ்ட்:
திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் உப்புமா வகைகள் வழங்கப்படும்
செவ்வாய்க்கிழமை கிச்சடி வகைகள் வழங்கப்படும்
புதன்கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா, பொங்கல் அல்லது வெண் பொங்கல் வழங்கப்படும்
வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய உப்புமா
வெள்ளிக்கிழமை கிச்சடி வகைகளும் வழங்கப்படும்.