பெண் பயிற்சியாளரிடம் ரூ.1 கோடி பேரம்!

சந்தீப் சிங்
சந்தீப் சிங்

பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் ஹரியாணா மாநிலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வரும் சந்தீப் சிங் மீது கடந்த டிசம்பர் மாதம் பெண் தடகளப் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்திய தேசிய லோகதளம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அந்த பெண் பயிற்சியாளர், அமைச்சர் சந்தீப் சிங்கின் பாலியல் அத்துமீறலை அம்பலப்படுத்தினார்.

“அமைச்சர் என்னை முதலில் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டார். என்னுடைய விளையாட்டுச் சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும். இது தொடர்பாக நேரில் சந்திக்குமாறும் கூறினார். நான் சில ஆவணங்களுடன் அமைச்சரை சந்திக்க அவரின் வீட்டுக்குச் சென்றபோது பாலியல் ரீதியில் அத்துமீறினார். தொடர்ந்து எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் ஹரியாணா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சண்டீகர் காவல்துறையினர் சந்தீப் சிங் மீது பாலியல் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சிங், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் அப்பெண் சண்டீகர் போலீஸாரின் சிறப்பு விசாரணைக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது புகார் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் நடந்த அனைத்தையும் விவரமாக தெரிவித்துள்ளேன். ஆனாலும் இந்த விசாரணையில் ஹரியாணா முதல்வர் தனது செல்வாக்கை செலுத்துகிறார்.

எனக்கு பல்வேறு வகையில் அழுத்தம் கொடுக்கின்றனர். சண்டீகர் போலீஸாரிடமிருந்து எனக்கு எந்த அழுத்தமும் வரவில்லை. ஆனால், ஹரியாணா போலீஸார் எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். வெளிநாட்டுக்கு சென்றுவிடுமாறும். அதற்காக ரூ.1 கோடி தருவதாகவும் பேரம் பேசுகின்றனர். சந்தீப் சிங் மீது வழக்கு போடப்பட்டுள்ளதே தவிர அவர் கைது செய்யப்படவில்லை. இது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு. என்னிடம் இதுவரை நான்கு முறை விசாரணை நடத்திவிட்டனர். ஆனால், ஒரு முறைகூட சந்தீப் சிங்கை விசாரணைக்கு அழைக்கவில்லை என்றும்" தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com