விலை மலிவான நாப்கின்; 100 கோடி பட்ஜெட்டில் 120 கோடி மக்களின் பாராட்டை பெற்ற மகாராஷ்டிரா அரசு!
தமிழகத்தில் அடுத்த வாரம் பட்ஜெட் அறிக்கை வெளியாக இருக்கிறது. கடந்த ஓரு வாரத்தில் எத்தனையோ மாநிலங்களில் பட்ஜெட் அறிவிப்புகள் வந்துள்ளன. அதில் மகராஷ்டிரா மாநில அரசின் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் தேசிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
அஸ்மிதா திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கும் குறைவான விலையில் நாப்கின் தருவதை உறுதி செய்கிறது. மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை எடுத்துச் செல்வதற்காக மகளிர் சுய உதவி குழுக்களின் உதவியை நாடியிருக்கிறது.
மகராஷ்டிரா சட்டமன்றத்தில் ஏகப்பட்ட கைதட்டல்களுக்கு நடுவே அஸ்மிதா திட்டத்தை ஷிண்டே அரசு அறிவித்தது. மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக விலை மலிவான நாப்கின் கிராமப்புற பெண்களுக்கும், மாணவிகளுக்கும் விநியோகிக்கப்படும். பட்ஜெட், அதிகமில்லை. வெறும் 100 கோடி ரூபாய்தான்.
எட்டு நாப்கின் அடங்கிய பேக், 5 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்படுகிறது. கூடிய விரைவில் விலை குறைக்கப்பட்டு 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். ஆனால், இலவச நாப்கின்களுக்கு வாய்ப்பில்லை என்பதையும் தெளிவாக அறிவித்திருக்கிறது. இலவசமாக வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்ததை அரசு நிராகரித்திருக்கிறது.
இலவசமாக கிடைக்கும்போது அதை வீணடிக்கும் வாய்ப்பு உருவாகிவிடும். தற்போது ஐந்து ரூபாய்க்கு மாநிலமெங்கும் தங்கு தடையின்றி விநியோகிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டே அதன் விலையை குறைக்கும் திட்டமிருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரிரு மாதங்களில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு இதே நாப்கின் பேக் 1 ரூபாய்க்கு விற்பதற்கான ஏற்பாடுகளையும் செய்யவிருப்பதாக மகராஷ்டிரா மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் அடுத்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பெண்களுக்கான உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட இருக்கிறது. கூடவே 100 கோடி பட்ஜெட்டில் விலை மலிவான நாப்கின் திட்டத்தை தமிழ்நாட்டிலும் கொண்ட வரலாம். பா.ஜ.க ஆதரவுடன் நடைபெறும் அரசின்
திட்டம் என்று இடது கையால் ஒதுக்காமல் தி.மு.க அரசு இதையும் செய்ய வேண்டும என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.