சென்னை டூ பெங்களூரு 25 நிமிடப் பயணம்: ஹைப்பர் லூப் ரயில் திட்ட ஆய்வு!

சென்னை டூ பெங்களூரு 25 நிமிடப் பயணம்: ஹைப்பர் லூப் ரயில் திட்ட ஆய்வு!

போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் வந்தே பாரத் ரயில், புல்லட் ரயில் உள்ளிட்ட அதிவேக போக்குவரத்து வசதிகள் அமல்படுத்தப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக ஹைப்பர் லூப் போக்குவரத்தும் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகளை இந்திய ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.

வெற்றிடமான குழாய்க்குள் ஒரு கேப்சூல் மூலம் பயணிப்பது மற்றும் காந்த அலைகள் மூலம் இந்த கேப்சூலை நகர்த்தும் தொழில்நுட்பம்தான் ஹைப்பர் லூப் (Hyperloop) எனப்படும். ரயில் பாலங்கள் போலவே, இதற்கென பிரத்யேக தூண்கள் அமைக்கப்பட்டு, அதன் மேல் குழாய்கள் நிறுவப்படும். அந்த குழாய்க்குள் பயணத்துக்கான கேப்சூல்கள் இருக்கும். கேப்சூலின் உள்ளே பயணிகள் அமர்ந்திருப்பர். காந்த அலைகள் மூலம் கேப்சூலை நகர்த்தும்போது, ரயில் தண்டவாளத்தில் செல்வதுபோலவே கேப்சூல் குழாய்கள் பயணிக்கும்.

2012ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் மணிக்கு 1,200 கி.மீ. வேகத்திலும் செல்லும் புதிய போக்குவரத்து முறையை ஆய்வு செய்து வருவதாகக் கூறி இருந்தார். இதன் பிறகு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து ஹைப்பர் லூப் என்ற தொழில் நுட்பத்தை உருவாக்கியது. அதன் பிறகு 2020ம் ஆண்டு, ‘விர்ஜின் ஹைப்பர் லூப்’ நிறுவனம் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் ஹைப்பர் லூப் பாட்களை இயக்கி சோதனை செய்தது. இந்நிலையில் மும்பைக்கும் புனேவுக்கும் இடையே ஹைப்பர் லூப் போக்குவரத்து பாதையை அமைப்பதற்காக, ‘ஹைப்பர் லூப் டிரான்ஸ்போர்டேஷன் டெக்னாலஜீஸ்’ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஹைப்பர் லூப் போக்குவரத்து கொண்டுவரப்பட்டால் மும்பையில் இருந்து புனேவுக்கு 35 நிமிட நேரத்தில் செல்லலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்கான பணிகளை மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னை, ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை மாணவர்கள் ஹைப்பர் லூப் போக்குவரத்து முறையை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கு ரயில்வே துறை 8.50 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. ஹைப்பர் லூப் மூலம் 2025ம் ஆண்டு சரக்கு போக்குவரத்தும், 2030ம் ஆண்டு பணிகள் போக்குவரத்தும் தொடங்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. மேலும், இதன்மூலம் 25 நிமிடத்தில் சென்னையில் இருந்து பெங்களுரூவுக்குச் செல்லலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் ஹைப்பர் லூப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு ஆய்வை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது. இந்த ஆய்வை மேற்கொள்வதற்கான ஆலோசகரை தேர்வு செய்வதற்கான டெண்டரை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் சாத்தியக் கூறு ஆய்வு, சோதனை முறையில் செயல்படுத்துவது, நிதி ஆதாரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில நாட்களுக்கு முன்பு பேசுகையில், 'இந்தியாவில் 2026ம் ஆண்டு புல்லட் ரயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அடுத்த சுமார் எட்டு ஆண்டுகளில் ஹைப்பர் லூப் போக்குவரத்துத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்து இருந்தது குறிப்பித்தக்கது. இதன்படி பார்த்தால், சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஹைப்பர் லூப்பில் வெகு விரைவில் பயணிக்கலாம் என்றே தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com