“இந்திய ஒற்றுமை பயணம்” என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை கடந்து ஸ்ரீநகரை எட்டியுள்ளது. 4000 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை கடந்துள்ள இந்த நடை பயணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுனர்கள், அறிவியல் அறிஞர்கள், திரைத்துறை, விளையாட்டுத்துறை சாதனையாளர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்று வரும் ராகுல் காந்தியின் நடை பயணம் காங்கிரஸ் இழந்த வாக்கு வங்கியை மீட்டுக் கொடுக்கும் என்றும், பொது வாக்காளர்களை காங்கிரஸ் நோக்கி திருப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ராகுல் காந்தியுடன் தினந்தோறும் நடை பயணத்தில் கலந்து கொண்டனர்.
சுமார் ஐந்து மாதங்களாக நாடு முழுவதும் கவனம் பெற்ற நடை பயணம் இன்று (ஜனவரி 30) நிறைவடைந்தது. ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து தனது யாத்திரையை ராகுல் காந்தி நிறைவு செய்தார்.
இந்த நிறைவு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இதில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி, தேஜஸ்வி யாநல் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நிதிஷ் குமாரின் ஜனதா தளம் (ஐக்கிய), உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சிபிஐஎம், சி.பி.ஐ விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிகே); கேரள காங்கிரஸ், பரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு, மெஹபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) மற்றும் எதிபு சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) ஆகிய கட்சிகள் விழாவில் கலந்து கொள்கின்றன.
அதேநேரம் இவ்விழாவை திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளன.