புதிய நாடாளுமன்றக் கட்டடம்; பிரதமர் திறந்து வைப்பு!

புதிய நாடாளுமன்றக் கட்டடம்; பிரதமர் திறந்து வைப்பு!

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி நேற்று மாலையில் திறந்து வைத்தார்.

டெல்லியில் இந்தியா கேட் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரையிலான ராஜ்பாத் பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டடம், பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் இல்லங்கள் ஆகியவை உள்ளடக்கிய 'சென்ட்ரல் விஸ்டா' கட்டுமானப் பணி திட்டம் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது.

இதில், இந்தியா கேட் முதல் விஜய் சவுக் வரையிலான மூன்று கிலோ மீட்டர் தூரப் பகுதி சென்ட்ரல் விஸ்டா அவென்யூ என்று அழைக்கப்படுகிறது. இதனுள் புதிய நாடாளுமன்றக் கட்டடம், பிரதமா் இல்லம், குடியரசுத் துணைத் தலைவா் இல்லம், மத்திய அமைச்சகங்களின் செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணியை ரூ. 13,450 கோடி  செலவில் மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை மேற்கொண்டது.

கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் பணிகள் முடிந்து, நேற்று மாலை சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையையும் திறந்து வைத்தார். இத்துடன் இந்தியா கேட் முதல் விஜய் சவுக் வரையிலான ராஜ பாதை பெயர் மாற்றப்பட்டு  'கர்தவ்யா பாத்' என்று புதுப் பெயர் சூட்டப் பட்டது.

சென்ட்ரல் விஸ்டா திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த புதிய வளாகத் திறப்பு விழாவின் மூலம், இந்தியாவில்  காலனித்துவத்தின் சின்னம் அழிக்கப்பட்டு விட்டது. கர்தவ்யா பாதை வடிவத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.

மேலும் இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை நிறுவப்பட்டதன் மூலம், அதிகாரம் பெற்ற இந்தியாவுக்கான புதிய பாதை தொடங்கியுள்ளது.

-இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com