உத்தரப் பிரதேசத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு டிரிப்ஸ் ஏற்றும்போது ரத்தத்துக்கு பதில் சாத்துக்குடி' ஜூஸ் ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 10 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், குற்றத்தில் வேறு யாரேனும் சம்பந்தப் பட்டிருக்கிறார்களா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் உள்ள ஒரு மருத்துவமனையில் டிரிப்ஸ் ஏற்றும்போது டெங்கு நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அந்த மருத்துவமனைமீது விசாரணை நடத்தியதில், டெங்கு நோயால் பாதிக்கப் பட்ட நேயாளிகளுக்கு டிரிப்ஸ் ஏற்றும்போது ரத்தத்தில் உள்ள 'பிளாஸ்மா' வழங்கப்படுவதற்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்ட அதிர்ச்சித் தகவல் தெரிய வந்தது.
இது தொடர்பாக ஆதாரத்துடன் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட, இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அம்மாநில அரசு சம்பவம் தொடர்பாக உண்மையை கண்டறிய ஒரு குழு அமைத்து, அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அம்மருத்துவமனையில் பணியாற்றிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநிலை காவல்துறை உயர் அதிகாரி ஷைலேஷ் பாண்டே கூறும்போது "சமீப நாட்களாக இங்கு டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு உடலில் ஏற்ற ரத்த பிளாஸ்மாவின் தேவையும் அதிகரித்துள்ளது. ரத்தத்தின் பிளாஸ்மாவும் சாத்துக்குடி ஜூஸும் ஒரே நிறத்தில் இருப்பதால் இத்தகைய மோசடி நடந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது’’ என்றார்.