இனி ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியா?

ரேஷன் கடை
ரேஷன் கடை

நமது நாட்டில், இரண்டில் ஒரு பெண் இரத்த சோகையால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், மூன்றில் ஒரு குழந்தை வளர்ச்சி குன்றி இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறும் நிலையில், அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க செறிவூட்டப்பட்ட அரிசி உதவிடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் போதிய அளவுக்கு இரும்புச் சத்து இல்லாமல் இருப்பதை மத்திய அரசு கண்டறிந்து இத்தகைய நடவடிக்கையை எடுத்தது. இரும்புச் சத்து இல்லாததால், அவர்கள் ரத்த சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர். தற்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் புழுங்கல் அரிசி, பச்சரிசியில் மாவுச் சத்து, புரதச் சத்துக்கள் உள்ளன. எனவே, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இரும்புச் சத்து கிடைக்க, ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்து, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

rice
rice

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?

பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கும் வகையில் உணவின் தரத்தை மேம்படுத்த, அத்தியாவசிய சத்துக்களுடன் அரிசியை செறிவூட்டுவதே செறிவூட்டப்பட்ட அரிசியாகும். வழக்கமான அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இரும்புச்சத்து, வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்களைச் சேர்த்துச் நுண்ணூட்டச் சத்து கலவையை உண்டாக்கி செயற்கையாக அரிசி தயாரிக்கப் படுகிறது. அதன்படி, உலர்ந்த அரிசி மாவை நுண்ணூட்டச் சத்துடன் கூடிய கலவையுடன் சேர்த்து, அதில் தண்ணீர் சேர்த்து எக்ஸ்ட்ரூடர் இயந்திரம் மூலம் அரிசி மணிகளை போல தயாரித்து அதனை உலரவைத்து தயாரிக்கப்படுவதே செறிவூட்டப்பட்ட அரிசி என்பதாகும்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட செறிவூட்டப் பட்ட அரிசியை 12 மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். செறிவூட்டப் பட்ட அரிசியில், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், துத்த நாகம் போன்ற சத்துக்களுடன், வைட்டபின் ஏ, மற்றும் பி1, பி2, பி6 உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் இருக்கும்.

எப்போது கிடைக்கும் ?

இந்த செறிவூட்டப் பட்ட அரிசி இனி ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும். அடுத்த ஆண்டு 23 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப் பட்ட அரிசியை விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக சென்னை கலைவாணர் அரங்கில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இரும்புச் சத்து உடைய செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com