கர்நாடகம், ராஜஸ்தான் உள்பட நான்கு மாநில தேர்தலில் குதிக்கிறது ஆம் ஆத்மி!
இந்த ஆண்டு கர்நாடகம், ராஜஸ்தான் உள்பட 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. மேலும் அடுத்த ஆண்டு மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 9 மாநில தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கு அரையிறுதியாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த தேர்தலை முக்கிய அரசியல் களமாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கருதுகிறது.
தேசிய கட்சியாக உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
தில்லியில் மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி யாரும் எதிர்பாராத விதமாக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, இந்த
ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள 9 மாநிலங்களில் நான்கில் போட்டியிட தயாராகி வருகிறது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மார்ச் மாதத்தில் கர்நாடகம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தமது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவைக்க திட்டமிட்டுள்ளார்.
ஒரு கட்சி, மாநில கட்சிக்கான அந்தஸ்து பெறவேண்டுமானால், அந்த மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் 3 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் அல்லது 6 சதவீத வாக்குகள் மற்றும் இரண்டு தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும் மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கும்.
இந்த நிலையில் தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சி, குஜராத் தேர்தலில் 13 சதவீத வாக்குகள் பெற்றது. மேலும் கோவாவிலும் அக்கட்சி மாநில அந்தஸ்தை பெற்றதால் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஆம் ஆத்மி கட்சி தமிழகம் உள்பட நாடு முழுவதிலும் போட்டியிட்டது. ஆனால், படுதோல்வி அடைந்தது. அப்போது பின்வாங்கிய ஆம் ஆத்மி கட்சி இப்போது மெல்ல மெல்ல எழுச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.