இந்திய அரசியல் பற்றி வெளிநாட்டில் பேச இந்திரா காந்தி மறுத்தது ராகுலுக்கு தெரியுமா? அமித்ஷா!
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியே வெளிநாட்டில் இந்தியாவின் அரசியல் பற்றி விவாதிக்க மறுத்துவிட்டார். இது ராகுலுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள தேக்கநிலையை போக்க பேச்சுவார்த்தை நடத்துவதுதான் சரியான வழியாகும். எதிர்க்கட்சியினர் இரண்டு அடி முன்னே எடுத்துவைத்தால் நாங்களும் இரண்டு அடி முன்னே எடுத்துவைக்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தில்லியில் இந்தியா டுடே சார்பில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “சில விஷயங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. முன்னாள் பிரதமர் இந்திராகாந்திகூட வெளிநாட்டு மண்ணில் இந்திய அரசியலை விவாதிக்க மறுத்துவிட்டார்.
மக்களவைத் தலைவர் முன் இரு தரப்பினரும் உட்கார்ந்து பேச வேண்டும். எதிர்க்கட்சியினர் பேச முன்வந்தால் நாங்களும் அதற்கு தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்தி
தீர்வுகண்டால்தான் நாடாளுமன்றம் செயல்படும். நாடாளுமன்றத்துக்கு வெளியே பேட்டிகள் அளிப்பதால் எந்த பயனும் இல்லை.
நாடாளுமன்ற நடைமுறை என்பது ஒருபக்கம் சார்ந்த்து அல்ல. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இருதரப்பினரும் பேச்சு நடத்த வேண்டும். நாங்கள் பேசுவதற்கு தயாராக இருந்தபோதிலும் எதிர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் வேண்டும் என்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பேச எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. யாரும் உங்களை பேசவேண்டாம் என்று சொல்லவில்லை.
எனினும் நாடாளுமன்றத்துக்கு என தனி விதிமுறைகள் உள்ளன. அதை எல்லோரும் பின்பற்ற வேண்டும். விதிகளின்படி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம். ஆனால், அதற்காக உங்கள் இஷ்டம்போல் பேசமுடியாது.
“நெருக்கடி நிலைக்குப் பிறகு இந்திராகாந்தி இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது ஷா கமிஷன் விசாரணை நடந்து வந்தது. ஏறக்குறைய அவரை சிறைக்கு அனுப்ப முயற்சிகள் நடந்தன. அப்போது ஒரு நிருபர், “உங்கள் நாட்டில் நிலைமை எப்படி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு இந்திரா காந்தி, எங்களுக்குள் சில பிரச்னைகள் உள்ளன. ஆனால், அவை பற்றி நான் இங்கு பேசவிரும்பவில்லை. எங்கள் அரசு நன்றாகவே செயல்படுகிறது. நான் வேறு எதுவும் கூறவிரும்பவில்லை. இப்போது நான் ஒரு
இந்தியன்” என்று பதில் கூறியிருந்தார். இதை அமித்ஷா சுட்டிக்காட்டினார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜபேயி எதிர்க்கட்சியில் இருந்தபோது காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் விவாதம் நடக்க இருந்தது. காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கும்போது இந்திய குழுவிற்கு தலைமையேற்று வந்துள்ள நான் இதுகுறித்து பேசவிரும்பவில்லை என்று கூறிவிட்டார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், எல்லோரும் ஒருவிதமான மரபை கடைப்பிடிக்க வேண்டும்.
வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவை இழிவுபடுத்தி பேசுவது, வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் இந்தியா பற்றி தவறாக பேசுவது இவையெல்லாம் எந்த விதத்தில் நியாயமானது. இதற்கெல்லாம் காங்கிரஸ் பதில் சொல்லியாக வேண்டும் என்றார் அமித்ஷா.
சமீபத்தில் லண்டன் சென்றிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ஒரு கூட்டத்தில் பேசுகையில், “இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே பேசமுற்பட்டாலும் மைக்குகள் அணைக்கப்படுகின்றன” என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வெளிநாட்டில் இந்தியாவை இழிவுபடுத்தி பேசிய ராகுல் காந்தி, மன்னிப்பு
கேட்க வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர்.
ஏன் பிரதமர் நரேந்திர மோடியும் வெளிநாடுகளில் இந்தியாவை அவமதித்து பேசியுள்ளார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்கத் தயாரா என்று காங்கிரஸார் பதிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பா.ஜ.கவினரிடையே எழுந்துள்ள மோதலால் நாடாளுமன்றம் கடந்த ஐந்து நாட்களாக செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.