தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மக்கள் வரிப் பணத்தில் பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
-இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது;
திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, வேலைவாய்ப்பின்மை என தமிழக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் 134 அடி உயரத்தில் ரூ.80 கோடி செலவில் பிரம்மாண்ட பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை அமைக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் மக்களுக்கு என்ன லாபம்? மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பதற்குப் பதிலாக அந்த பணத்தை கொண்டு மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதி, சாலை வசதி, கல்வி வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சிக்கு பயன்படுத்தி தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றால் மக்கள் அதை வரவேற்பார்கள்.
ஏற்கெனவே தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற பல நினைவுச் சின்னங்கள் இருக்கும் நிலையில், ரூ.80 கோடியில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அவசியமற்றது.
அப்படியும் நினைவுச் சின்னம் அமைக்க விரும்பினால், மக்கள் வரிப் பணத்தை வீணடிக்காமல், திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தின் மூலம் அமைத்துக் கொள்ளட்டும்.
–இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.