செஸ் கொண்டாடும் மகாபலிபுரம்!

செஸ் கொண்டாடும் மகாபலிபுரம்!

-சிறப்பு கட்டுரை: காயத்ரி.

லகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது மகாபலிபுரம்..

 ஏற்கனவே சரித்திர பிரசித்தி பெற்ற பல்லவர்கள் பார்த்து பார்த்து உருவாக்கிய நகரம்அழகிய கடற்கரை.. குடைவரை சிற்பங்கள் என சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்.. காதலர்களின் ஹாட் ஸ்பாட்.. 

இப்படி மகாபலிபுரம் எப்பவுமே ஸ்பெஷல்! அதிலும் சீன அதிபரின் வருகைக்கு பிறகு உலகின் கவனத்தை கூடுதலாக ஈர்த்த மகாபலிபுரம், இப்போது செஸ் ஒலிம்பியாட் மூலம்  மீண்டும் கவனம் ஈர்ப்பதில் உள்ளூர் மக்கள் ஹேப்பியோ ஹேப்பி..

கல்கி ஆன்லைன் கவரேஜுக்காக நகருக்குள் ஒரு ரவுண்ட்-அப் போய் வந்தோம். 

மொத்த நகரமே மெல்ல மெல்ல சிங்கப்பூராக மாறி வருகிறது.. இரண்டு மாதங்களாகவே அமைச்சர்கள்ற்றும் அதிகாரிகள் படை எடுப்பால் திமிலோகப்பட்டுக் கொண்டு இருக்கிறது கடல் மல்லை..

மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ம்தேதி முதல் ஆகஸ்டு 10-ம்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.. இப்போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து  187 நாடுகளை சேர்ந்த 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்

சர்வதேச அளவில் இந்தியாவுக்கு – குறிப்பாக தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கப் போகும் இப்போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் இருப்பதால் அரசு இயந்திரம் முழு வீச்சில் களமிறங்கியுள்ளது.

போட்டி நடைபெறும் Four points.. சொகுசு விடுதியின் உள்ளேயும்.. வெளியேயும் பிரம்மாண்டமான ஆடுகளம்கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நாற்காலிகளும் மேஜைகளும் தான்! போட்டி நேரத்தில்  மின்சாரம் கண்ணாமூச்சி காட்டி விடக் கூடாது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டிகள் ஜெனரேட்டர் மின்சாரத்தில் தங்கு தடையின்றி இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீரர்கள் தங்குவதற்கு ஏதுவாக சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் உள்ள ஹோட்டல்கள், சொகுசு தங்கும் விடுதிகள் என்று அனைத்தும் 3 மாதங்களுக்கு முன்பாகவே ரிசர்வ் செய்யப்பட்டு விட்டனவாம். 

வெளிநாட்டு வீரர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து மகாபலிபுரம் செல்வதற்கான பல்லாவரம்துரைப்பாக்கம் ரேடியல் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை என மூன்று சாலைகளும்.. திருவிழாக் கோலம் பூண்டுள்ளது..பிரம்மாண்ட பேனர்கள்.. பத்தடிக்கு ஒரு தம்பி பொம்மை.. பதாகைகள் என ஏரியாவே களைகட்டியுள்ளது.

தம்பி பொம்மையா?! ஆமாம்.. இந்த ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சின்னம்.. செஸ் போட்டியில் உள்ள குதிரைப் படை வீரனின் உருவத்துக்கு 'தம்பி' எனப் பெயரிடப்பட்டு உருவாக்கப்பட்ட லோகோ!  பாரம்பரிய வேஷ்டி கட்டிக்கொண்டு கம்பீரமாக நிற்கும் இந்த சின்னம் இப்போது தமிழகம் முழுவதும் பேமஸ். .எல்லா ஊரிலும் இதனை வைத்து கொண்டாடி வருகின்றனர்..

கிராமங்கள்..நகரங்கள்..என்று தமிழகம் முழுவதுமே இந்த ஒலிம்பியாட் போட்டியை ஆட்டம் பாட்டம் என அமர்க்களப் படுத்தி வருகின்றனர்.. பள்ளிகளில் மாரத்தான் செஸ்..ஸ்கேட்டிங் போட்டி என்று போட்டா போட்டி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

சென்னை நகர சாலைகளும்.. பாலங்களும்.. சதுரங்க மேடைகளாக மாறியுள்ளன..கறுப்பு வெள்ளை கட்டங்களுடன்.. காட்சியளிக்கும்..நேப்பியர் பாலம்....டி..மேம்பாலங்கள் ஆகியவை திடீர் சுற்றுலா மையங்களாக மாறியதில்.. செல்பி எடுக்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 'தம்பி' பொம்மையுடன் பயணிகள் செல்ஃபி எடுக்கத் தவறுவதில்லை.

பொதுமக்கள் மகாபலிபுரத்திற்கு இலவசமாக சென்று வரவும்.. தமிழக சுற்றுலா போக்குவரத்து கழகம் இலவச பேருந்துகளை இயக்குகிறது..அடையாறு மத்திய கைலாஷ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 5 சிறப்பு பேருந்துகளில் இலவசமாக சென்று வரலாம்.

மெட்ரோ ரயில்களுக்கும்..ஒலிம்பியாட் அரிதாரம் பூச..வண்ண மயமாக காட்சி தருகின்றன ரயில்கள்.

இவற்றுக்கு எல்லாம்  முத்தாய்ப்பாக தீம் பாடல்.. பஞ்ச கச்சம் கட்டி கொண்டு ரஹ்மான் பாடமுதலமைச்சர். எல்லோரையும் அழகாக வரவேற்கிறார்..பின்னணியில் பரத நாட்டியம்! மேலும் அழகுக்கு அழகு சேர்க்க மின்னல் வேகத்தில் காட்சி தந்து மறைந்து செல்கின்றனர் வீரர்கள்.. கதாநாயகர்களான வீரர்களுக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருக்கலாம்.என்ற அங்கலாய்ப்புகள்..ஒரு பக்கம் இருக்கிறதுதான்! 

சரி.. அரங்கினுள் வசதிகள் எப்படி?! 

''இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 700 டிஜிட்டல் செஸ் போர்டுகள் வரவழைக்கப் பட்டுள்ளன. டேபிள்  வாரியாக கேபிள் வழியாக கணினி மூலம் இணைக்கப்பட்டு நம்பர் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன'' என்றார், அங்கு பணியிலிருந்த இன்ஜினியர்.

''இங்கு 22 ஆயிரம் சதுரஅடியில் ஒரு அரங்கமும், 52 ஆயிரம் சதுர அடியில் 2-வது அரங்கம் என இரண்டு அரங்கத்தில் செஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அரங்கம் (ஹால்) 1-ல் 196 டேபிள்கள் போடப்பட்டு அதில் 49 அணிகள் பங்கேற்க உள்ளன. அரங்கம்(ஹால்) இரண்டில் 512 டேபிள்கள் போடப்பட்டு 49 அணிகள் அதில் பங்கேற்க உள்ளன. இதில் ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 700 டிஜிட்டல் செஸ் போர்டுகள் பொருத்தப் பட்டுள்ளன'' என்ற மென்பொருள் பொறியாளர், மேலும் தொடர்ந்தார். 

''அனைத்து செஸ் போர்டுகளையும் கணினி மூலம் இணைக்கும் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் ஒவ்வொரு டேபிளிலும் எந்த நாட்டு வீரர்கள் அமர்கின்றனர். அவர்களுக்கான  டிஜிட்டல் செஸ் போர்டுகள் எவை என்பது குறித்து சரிபார்க்கப்பட்டு, கேபிள் மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. வருகிற 24-ம் தேதி பரிசோதனைக்காக ஒரு மாடல் விளையாட்டு நடத்தி, செஸ் போர்டுகள் சரியாக இயங்குகின்றதா என சரிபார்ப்போம்'' என்றனர் செஸ் போர்டு பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மென்பொருள் பணியாளர்கள் சிலர் தெரிவித்தனர்

அதேபோல் இப்போட்டியில் எந்தந்த நாடுகள் கலந்து கொள்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் அந்தந்த நாடுகளின் தேசிய கொடிகள் அரங்கத்தின் சுவர்களில் வரிசை கிரகமாக ஸ்டிக்கர் வடிவில் ஒட்டப்பட்டுள்ளது காண்போரைக் கவர்கிறது.

சர்வதேச செஸ் சாம்பியன்களே.. ரசிகர்களே.. வெல்கம் டு மகாபலிபுரம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com