தென் கொரியாவில் நடைபெற்ற சர்வதேச, 'கிளைம்பிங்' சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு வீராங்கனை, 'ஹிஜாப்' அணியாதது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் பெண்கள் ஹிஜாப் அணிவது, அந்நாட்டில் கட்டாய சட்டமாக உள்ளது. அந்நாட்டு வீராங்கனையர் பிற நாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் போது ஹிஜாப் அணிவது கட்டாயம் என சட்டம் உள்ளது.
உள் அரங்கத்திற்குள் அமைக்கப்பட்ட செயற்கை சுவரில் ஏறும் போட்டியான, 'சர்வதேச கிளைம்பிங் ஆசிய சாம்பியன்ஷிப்' போட்டி கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்தது.
இதில் பல்வேறு நாட்டு வீரர் மற்றும் வீராங்கனையர் பங்கேற்றனர்.
மேற்காசிய நாடான ஈரானில் இருந்து 8 வீரர், வீராங்கனையர், மூன்று பயிற்சியாளர்கள் வந்திருந்தனர். இதில், அந்நாட்டின் தலைசிறந்த கிளைம்பிங் வீராங்கனை 'எல்னாஸ் ரெகாபி'யும் இடம் பெற்று இருந்தார். இவர் கிளைம்பிங் போட்டியில் சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார்.
கடந்த 16 ம் தேதி நடந்த போட்டியில், எல்னாஸ் ரெகாபி, 'ஹிஜாப்' எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை அணியாமல் பங்கேற்றார்.
ஈரானில் ஹிஜாப் சர்ச்சை ஏற்கனவே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக பெண்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கிளைம்பிங் வீராங்கனை எல்னாஸ் அணியாதது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஈரானில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் அதை ஈரான் அரசு மறுத்துள்ளது.
இதற்கிடையே, ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்றதற்கு, வீராங்கனை ரெகாபி தன் சமூகவலைதள பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.