கோப்பையை தட்டியது இந்திய அணி!

தென் ஆப்ரிக்கா ஆறுதல் வெற்றி!
இந்திய- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்
இந்திய- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது. இப்போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இடையே மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் நேற்று மூன்றாவது போட்டி இந்தூரில் நடைபெற்றது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்து தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இந்திய அணி
இந்திய அணி

தொடக்க வீரர்களாக கேப்டன் பவுமா மற்றும் டி காக் களமிறங்கினர். இந்த தொடரில் முதல் இரு போட்டிகளில் சோபிக்காத பவுமா இந்த போட்டியிலும் தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அவர் 3 ரன்களில் உமேஷ் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்கடுத்து டி காக் உடன் ரைலி ரூசோவ் சேர்ந்து ரன்கள் குவிக்க தொடங்கினர். இந்த ஜோடி பவர்பிளே முடிந்த பிறகு பவுண்டரி மழைகளை பொழிந்தனர். சிறப்பாக ஆடிய டி காக் 33 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

தென் ஆப்பிரிக்க அணி 12.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்திருந்த போது ஷ்ரேயஸ் ஐயரின் சிறப்பான பீல்டிங்கால் டி காக் ரன் அவுட்டானார். அவர் 42 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஸ்டப்ஸ் களம் புகுந்தார். அதிரடியை தொடர்ந்து வந்த ரைலி ரூசோவ் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

ஒருமுனையில் ஸ்டப்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ரூசோவ் இமாலய சிக்சர்களை விளாசி வந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் கணக்கு வெகுவாக உயர்ந்தது. கடைசி ஓவரில் ரூசோவ் 48 பந்துகளில் சதம் கடந்தார்.

இன்றைய போட்டியில் கோலி, கே.எல்.ராகுல், ஆகியோர் விளையாடவில்லை. ஷ்ரேயஸ் ஐயர், உமேஷ் யாதவ், சிராஜ் ஆகியோர் புதியதாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

கிரிக்கெட் அணி
கிரிக்கெட் அணி

அடுத்து ஆடிய இந்திய அணி பேட்டிங்கில் சோபிக்க தவறியது. தென் ஆஃப்ரிக்காவின் பந்துவீச்சில் தொடக்க விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டகாரர்கள் மளமளவென விக்கெட்டுக்களை இழந்தனர்.

சூர்யகுமார் யாதவ் (8 ரன்கள்), அக்சர் படேல் (9 ரன்கள்) ரவிச்சந்திரன் அஸ்வின் (2 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் மற்றும் உமேஷ் யாதவ் அதிரடியாக விளையாடினர் . இறுதியில் இந்திய அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பிரிடோரிஸ் 3 விக்கெட்களும், மகாராஜ், நிகிடி, பார்னெல் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றியுடன் டி20 தொடரை நிறைவு செய்துள்ளது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றுள்ளது. இறுதியாக ஏற்கனவே இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி கோப்பையை தட்டி சென்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com