எம்பிசி உள்ஒதுக்கீடுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

எம்பிசி உள்ஒதுக்கீடுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அக் கட்சியின் கெளரவ தலைவர் ஜி கே மணி உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். வன்னியர் சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து முதல்வரை வலியுறுத்தியதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியபோது 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான தரவுகளை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முன்னதாகவே அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது எம்பிசி பிரிவில் உள் ஒதுக்கீடு தொடர்பாக தற்போது முதல்வரை சந்தித்துள்ளோம். இந்த உள் ஒதுக்கீட்டை மார்ச் மாதம் 2022 ல் சரியான தரவுகள் இல்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எம்பிசி தொடர்பான தரவுகளை 3 மாதத்தில் அரசுக்கு அளிக்க அரசாணை வெளியிட்டிருந்தார்கள். கல்வி, வேலைவாய்ப்பிற்காக இதனை முன்னதாகவே கொண்டு வர கேட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் தலித், வன்னியர் சமுதாயம் மிகவும் பின்தங்கியுள்ளனர் . பின்தங்கிய மக்களுக்கு சமூகநீதி வழங்க வலியுறுத்தியுள்ளோம். அரியலூர் மாவட்டத்தில் சோழர்கள் காலத்திலிருந்த பாசனத் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளோம். போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் மாதம்தோறும் கூட்டத்தை கூட்டி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள் ஒதுக்கீடு கணக்கெடுப்பு என்பது இருக்கும் தரவுகளில் யார் அதிகம் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளார்கள், மக்கள்தொகை எவ்வளவு என்று தான் கேட்கப்பட்டுள்ளது. பீஹாரைப் போல ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடத்த வேண்டும். சமூக நீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

சித்திரை முழு நிலவு நாள் நிகழ்வுக்கு அனுமதி கேட்டுள்ளோம். எங்களின் கொள்கை, எந்த சமுதாயத்தினர் எவ்வளவு இருக்கிறார்களோ. அந்த அளவுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன அப்போது பார்த்துக் கொள்ளலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com