கல்லூரி விழாவில் கண்கலங்கிய அண்ணாமலை - எழுந்து நின்று வணங்கிய பெற்றோர்

கல்லூரி விழாவில்    
கண்கலங்கிய அண்ணாமலை - எழுந்து நின்று வணங்கிய பெற்றோர்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவையில் தான் படித்த பிஎஸ்ஜி டெக்னாலஜி கல்லூரி விழாவில் தனது பெற்றோருடன் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை தனது பெற்றோரை குறித்தும், தான் இக்கல்லூரியில் சேர வந்தபோது தன்னுடைய குடும்பம் அப்போது இருந்த சூழ்நிலை குறித்தும், கல்லூரியில் சேர்ந்த நிகழ்வினை பற்றியும் மாணவர்களிடம் விவரித்தபோது கண்கலங்கியது உருக்கமாக இருந்தது. விழாவில் இதைக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணாமலையின் பெற்றோர் எழுந்து நின்று கும்பிட்டார்கள்.

தமிழகத்தின் கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய தந்தை குப்புசாமி. தாய் பரமேஸ்வரி, கோவையில் என்ஜினீயரிங் படித்த அண்ணாமலை, இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார். 2011ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்வாகி கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி கடந்த மே 2019 இல், போலீஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.  

 மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லுவோம். நான் இந்த மேடையில் நிற்பது என்னை குறித்து பேசுவதற்காக அல்ல. என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியவர்களை குறித்து பேசுவதற்காகத்தான். என்னுடைய தாய், தந்தை இங்கே வந்திருக்கிறார்கள், அவர்கள் வந்துள்ள முதல் மேடை இதுதான்.

2002 ஆம் ஆண்டில் இந்த கல்லூரியில் சேர என் தந்தையுடன் ஒரு டிரங்க் பெட்டியுடன் வந்து நின்றேன். எங்கு சென்றாலும்கூட இந்த கல்லூரி நாட்களை மறக்கமுடியாது. என்னை சமூகத்தில் மனிதனாக மாற்றியது இந்த கல்லூரிதான்.

என்னுடைய கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி மாறி இந்த கல்லூரிக்கு வந்து நின்றபோது என் தந்தையிடம் கேட்டேன், நாம் வந்த பாதை, நாம் எங்கிருந்து வந்தோம், நமக்கு இந்த கல்லூரி சரியாக இருக்குமா என்று நிறைய கேள்விகள் கேட்டேன்.

இந்த கல்லூரிக்கென்று ஒரு கொள்கை உள்ளது. எதைச் செய்தாலும் அது நாலு பேருக்கு நல்லதாக அமைய வேண்டும் என்பதுதான் இந்த கல்லூரியின் கொள்கை'' என அண்ணாமலை பேசி நெகிழ்ந்தார்.

 கரூரில் பிறந்த அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் ஒன்பது ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். கர்நாடக மாநிலம் கார்கலா நகரில் ஏசிபியாக பணியாற்றி வந்தார். பின்னர் 2015ல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். அதனை அடுத்து 2018 இல், தெற்கு பெங்களூரில் துணை போலீஸ் கமிஷனராக பதவி உயர்வு பெற்றார். பல முக்கிய சம்பவங்களில் அதிரடியான நடவடிக்கைகளால் அண்ணாமலை கர்நாடகாவின் சிங்கம் என்றும் அழைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த மே 2019 இல், போலீஸ் பணியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com