கப்பலில் பயணிக்கப்போகும் ஈர்க்கு குச்சிகள்!

கப்பலில் பயணிக்கப்போகும் ஈர்க்கு குச்சிகள்!

ன்னியாகுமரி மாவட்டம் என்றவுடனே பலருக்கும் நினைவுக்கு வருவது, எங்கு நோக்கினாலும் பச்சைப் பசேலென காட்சி தரும் தென்னை மரங்கள்தான். இந்த மாவட்டத்தில் சுமார் நாற்பது ஆயிரம் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஏறக்குறைய ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

இந்த தென்னை விவசாயத்தின் மூலம் தேங்காய் மட்டுமின்றி, இளநீர், தென்னை ஓலை மூலம் கிடைக்கும் ஈர்க்கு, தேங்காய் ஓடு (சிரட்டை), எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் தென்னை மட்டை போன்றவற்றின் மூலம் இம்மாவட்ட விவசாயிகள் பெரும் வருவாய் பெற்று வருகிறார்கள். தற்போது தென்னை ஓலை மூலம் கிடைக்கும் ஈர்க்கு குச்சிகளின் தேவை இந்தியா மட்டுமின்றி, சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் மிகவும் தேவையாக இருக்கிறது.

அந்நாடுகளில் வீட்டை சுத்தப்படுத்த மட்டுமின்றி, வீட்டு அறைகளில் இயற்கையான தோற்றம் மற்றும் தட்ப வெப்பத்தை சீராக வைக்க தென்னை ஈர்க்கு குச்சிகளை சுவர்களில் பதிக்கும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் பல டன் கணக்கில் ஈர்க்குகள் கப்பல் மூலம் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த ஈர்க்குக் குச்சிகள் தேவைப்படும் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட குமரி மாவட்ட கிராமங்களுக்கு நேரடியாக வந்து டன் கணக்கில் கொள்முதல் செய்து செல்கின்றனர். தற்போது சீசன் இல்லாததால் தென்னை ஓலைகள் விழுவது மிகவும் குறைவாக உள்ளதால் ஈர்க்கு விலை மிகவும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தென்னை ஈர்க்கு 25 ரூபாய்க்கு தற்போது கொள்முதல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் தேங்காய் கொள்முதல் விலை 23 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது அனைவராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த தீபாவளி முதல் பொங்கல் விழா, சபரிமலை சீசன்களின்போது தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வந்த நிலையில், தற்போது தென்னங்குச்சிகளின் விலையை விட தேங்காய் விலை குறைந்துள்ளது தென்னை விவசாயிகளை மிகவும் கவலை அடையச் செய்துள்ளபோதிலும், ஈர்க்கு குச்சிகளின் விலை ஏற்றம் அவர்களை சற்று ஆறுதல் அடையச் செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com