‘இலவச பயணம் என்று கூறிவிட்டு பேருந்துகளைக் குறைத்திருக்கும் திமுக அரசு’ எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

‘இலவச பயணம் என்று கூறிவிட்டு பேருந்துகளைக் குறைத்திருக்கும் திமுக அரசு’ எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

‘அரசு போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்’ என்று அறிவித்த திமுக அரசு, தமிழகம் முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…

“அரசு போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் பொன்முடி மகளிரை, ‘ஓசியில் பயணம் செய்பவர்கள்’ என்று பொருள்படும்படி கேலி பேசினார். போக்குவரத்துக் கழகங்கள் மக்களுக்காக இயங்கி வரும் ஒரு சேவைத் துறை. நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடுகட்ட அரசு நிதியை வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு பல்வேறு துறைகளின் மூலம் வருமானம் வரும் நிலையில், அரசு பேருந்துத் துறை நஷ்டத்தில் நடப்பதாகக் காரணம் காட்டி, கிராமப்புற பேருந்துகளை நிறுத்தும் இந்த மக்கள் விரோத அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையிலும், இதுவரை ஒரு புதிய பேருந்தைக் கூட திமுக அரசு வாங்கவில்லை. கடந்த 29.4.2023 சனிக்கிழமை, தமிழகத்தின் தலைநகராம் சென்னை கோயம்பேட்டில், சென்னையில் இருந்து தங்களது ஊர்களுக்குச் செல்வதற்காக மக்கள் பேருந்துக்காக விடிய விடிய காத்திருந்ததை ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. இந்நிலையில், 3.5.2023 அன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளிப்படையாகவே, ‘மகளிரின் இலவச பயணத்தால் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, தமிழகத்தில் பெரும்பாலான கிராமப்புறங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன’ என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே சென்னையில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த முறையில் இயக்கப்படும் என்று கூறிய இந்த அரசு, ‘தற்போது ஓட்டுநர்கள் குறைவாக உள்ளனர்; எனவே, நடத்துநர்களுக்கு வேலையில்லை என்று கடந்த சில நாட்களாக அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு பணி வழங்காமல் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையைப் பார்க்கும்போது, பேருந்து சேவையை தனியாருக்கு தாரை வார்க்க இது போன்ற சித்து விளையாட்டுகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக, ஏதேனும் மறைமுகத் திட்டத்தோடு இந்த அரசு செயல்பட்டால், அதை அண்ணா திமுக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. எனவே, உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கி, மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக நகரப் பேருந்துகளின் செயல்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com