பொன்னியின் செல்வன் படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் அடுத்த வாரம் செப்.30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் மொத்த படக்குழுவும் ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முதல் பாகமானது 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.
அமரர் எழுத்தாளர் கல்கி அவர்கள் எழுதிய வரலாற்றுப் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையை தான் திரைப் படமாக்கியுள்ளார் டைரக்டர் மணி ரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளார்கள்.
படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி.