சென்னை தீவுத்திடலில் 47வது சுற்றுலா மற்றும் வர்த்தக பொருட்காட்சியை வரும் 28ம் தேதி முதல் துவங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் 47வது சுற்றுலா பொருட்காட்சி மற்றும் வர்த்தக நடத்துவதற்கான டெண்டரில் பங்கேற்க பெங்களூருவைச் சேர்ந்த ஃபன் வேர்ல்ட் அளித்த விண்ணப்பித்தை தமிழக அரசு நிராகரித்தது. அதனை எதிர்த்து பெங்களூருவைச் சேர்ந்த ஃபன் வேர்ல்ட் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கடந்த 2017ம் ஆண்டு சுற்றுலா பொருட்காட்சியின் போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு செலுத்த வேண்டிய மூன்று லட்சம் ரூபாய் பாக்கி தொகையை செலுத்தாததால் டென்டரில் கலந்து கொள்ளும் தகுதியை அந்த நிறுவனம் இழந்து விட்டதால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட தனி நீதிபதி வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பன் வேர்ல்டு நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பொருட்காட்சி அமைப்பதற்கான பணிகள் துவங்கி விட்டதாகவும், டிசம்பர் 28ம் தேதி முதல் பொருட்காட்சி துவங்க உள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு, பொருட்காட்சியை திட்டமிட்டபடி துவங்க அனுமதியளித்த நீதிபதிகள், 50 ஆயிரம் ரூபாய் அபராததுக்கு மட்டும் தடை விதித்து, மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.