அறிமுகமில்லாத வாட்ஸ்அப் அழைப்புகளை தவிர்ப்பது எப்படி?
மெயில் பாக்ஸில் ஸ்பாம், லேப்டாப்பில் ஸ்பாம், மொபைலில் ஸ்பாம் என ஏகப்பட்ட ஸ்பாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். வாட்ஸ்அப் வழியாக ஸ்பாம் என்பது சமீபகாலத்தில் அதிகமாகி வருகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் வழியாக ஸ்பாம் கால் வருவதாகவும், ஏகப்பட்ட ஸ்பாம் மெசேஜ் அனுப்படுவதாகவும் புகார் எழுந்தது. அறிமுகமில்லாத அழைப்புகள், குறிப்பாக சர்வதேச அழைப்புகள் அடிக்கடி வருவதாகவும் சொல்லப்பட்டது.
இது குறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அமைச்சகத்தின் சார்பில் வாட்ஸ் அப்பை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இது குறித்து பதிலளித்த நிறுவனம், வாடிக்கையாளரின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டிருப்பதாகவும் இதுபோன்ற சர்வதேச ஸ்பாம் அழைப்புகளை கையாள ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI), மெஷின் லேர்னிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முறைகேடுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது.
எப்படி செய்யப்போகிறார்கள்? அதில்தான் ஏகப்பட்ட சிக்கல். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணைய வழி மோசடிகளை குறைந்தபட்சம் 50 சதவீதம் வரை குறைக்க திட்டமிருப்பதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
திடீரென்று வாட்ஸ்அப் ஸ்பாம் கால், மெசேஜ் அதிகமானதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்கிறார்கள். குறிப்பாக வாட்ஸ்அப் பிஸினெஸ் எண்களின் மூலமாக வரும் ஸ்பாம் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. வாட்ஸ்அப் பிளாட்பார்மில் புதிய ஆப்ஷன் அறிமுகப்பட்டதுதான் காரணம் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
2 பில்லியன் கணக்குகள் கொண்ட இடம் என்பதால் டேட்டாவை கைவசப்படுத்த முயற்சிகள் தொடரலாம். வாட்ஸ் அப் மட்டுமல்ல கூகிள் நிறுவனமும் இத்தகைய சவாலை எதிர்கொண்டிருக்கிறது. வாட்ஸ் அப் போல் டேலிகிராம் ஆப்பிலும் நிறைய ஸ்பாம் தாக்குதல்கள் இருந்திருக்கின்றன.
வாட்ஸ்அப்பில் ஏபிஐ சேவை இல்லாவிட்டால் வாடிக்கையாளர்கள் பற்றிய விபரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் பெற முடியாது. இதனால் விளம்பர வருவாய் பாதிக்கப்படும். ஆகவே, என்னதான் பாதுகாப்பை உறுதி செய்வதாக குறிப்பிட்டாலும், பெரும்பாலான சமூக வலைத்தள நிறுவனங்கள் நம்முடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள விஷயங்களை தெரிந்தே செய்கிறார்கள்.
விர்ச்சுவல் போன் நம்பர்கள் மூலமாக வாட்ஸ்அப் கணக்கு உருவாக்குவதை தடுத்தாக வேண்டும். இணையத்தளங்கள் நம்பர்களை உருவாக்கி அதன் மூலம் செய்திகளை அனுப்புவதை தடுக்க வேண்டும். இதை நிரந்தரமாக தடுக்க
வேண்டுமேன்றால் தெரிந்த நபர்களிடமிருந்து மட்டுமே அழைப்புகளும், மெசேஜ் வரும்படி செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால், வாட்ஸ்அப்பின் வீச்சு குறைந்துபோகும். அறிமுகமில்லாத எண்களிலிருந்து அழைப்பு என்பது சாதாரண விஷயம். அதை தடுக்கவே முடியாது. ஆனால், பிளாக் செய்துவிடலாம்.
பிளாக் செய்வதை எளிதாக்கி, ஏராளமான எண்களை உடனே தடை செய்துவிடும்படி செய்வதற்கான பணிகளை வாட்ஸ்அப் முடுக்கி விட்டிருக்கிறது. இனி அறிமுகமில்லாத வாட்ஸ்அப் கால் வந்தால், பிளாக் செய்யட்டுமா என்று அலெர்ட் வருவதற்கு வாய்ப்புண்டு. வாட்ஸ்அப் காலை ரிஜெக்ட் செய்யாமல் அப்படியே பிளாக் செய்துவிட முடியும்.