Samsung, Google மற்றும் Vivo போன்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து?

Samsung, Google மற்றும் Vivo போன்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து?

ஸ்மார்ட்போன் பயனர்களே கொஞ்சம் உஷாராக இருங்கள். சாம்சங், கூகுள் மற்றும் விவோ போன்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்க்கும் பாதுகாப்புக் குறைபாடு சவாலான ஒன்றாகத்தான் இருக்கிறது. தாங்கள் தயாரித்த ஸ்மார்ட்ஃபோனில் பாதுகாப்புக் குறைபாடு இருப்பதை யாரேனும் உறுதி செய்தால், அதை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு நிறுவனமும் கடினமாக உழைக்கிறது என்பது உண்மை. சமீபத்தில் கூகுள் பிக்சல் சாம்சங் மற்றும் விவோ சீரிஸ் மாடல்களில் செக்யூரிட்டி குறைபாடு இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள். 

குறிப்பாக இந்த போன்களில் பயன்படுத்தப்படும் எக்ஸினோஸ் சிப்செட் காரணமாக மோசமான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதையும், இதனால் அந்த ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சாம்சங் எக்ஸினோ சிப்செட்டுகளில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை 'ப்ராஜெக்ட் ஜீரோ' என்ற கூகுளின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது. 

இதைப் பற்றி அவர்கள் வலைப்பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், இந்த எக்ஸினோஸ் சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போனுக்கு பலவித பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், அவை பயனர்களுக்கு தெரியாமலேயே மூன்றாம் நபர் ஒரு போனை தொலைவிலிருந்தே அணுக அனுமதிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் இந்த பிரச்னையை அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு விதமான துஷ்பிரயோக செயல்களிலும் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுவரை  18 பாதிப்புகள் இருப்பதாக ப்ராஜெக்ட் ஜீரோ குழு கண்டறிந்துள்ளது. அவற்றுள் நான்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் தெரிவித்துள்ளது. இன்டர்நெட் டு பேஸ்பேண்ட் ரிமோட் கோட் செயல் படுத்துதல், மூன்றாம் நபர் அணுக்களை வழங்கும் சிக்கல், மொபைல் நெட்வொர்க் சார்ந்த பிரச்சினை, இதுபோல் மேலும் பல கோளாறுகளை இந்த எக்சினோஸ் சிப்செட் கொண்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளார்கள். 

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது சாம்சங் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தான். இதை தவிர VIVO நிறுவனத்தின் சில ஸ்மார்ட்போன்களும் இந்த பிரச்சினையை கொண்டிருப்பதாகவும், எக்ஸினோ சிப்செட் பயன்படுத்தும் எவ்வித சாதனமும் இந்த பாதிப்புக்கு உட்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. கூகுள் பிக்சல் 6 மற்றும் 7 ஸ்மார்ட் ஃபோன்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான அப்டேட்டுகளை நிறுவனங்கள் விரைவில் வழங்க வேண்டும். அதுவரை பயனர்கள் வைஃபை அழைப்பு மற்றும் VoLTE ஆகியவற்றை அணைத்து வைத்திருப்பது பாதுகாப்பானது. செக்யூரிட்டி அப்டேட் வரும் வரை இதை மட்டும்தான் பயனர்களால் செய்ய முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com