பிப்ரவரி 24 - பிராணிகள் கருத்தடை தினம்!
தற்போதெல்லாம் ஒன்றை நீங்கள் கவனித்திருக்கலாம். தெருக்களில் நாய்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதுதான் அது! முன்பெல்லாம் ‘நாய் வண்டி’ ஒன்றில் நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வலம் வருவார்கள். தெரு நாய்களைப் பிடித்துக்கொண்டுபோய் விஷ ஊசி போட்டுக் கொன்றுவிடுவார்கள். ஆனால் இப்போது அவ்விதம் கொல்வதில்லை. அதற்குப் பதிலாக நாய்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தெருவிலேயே விட்டுவிடுகிறார்கள். இது எந்த அளவுக்குப் பயன் அளிக்கிறது என்று தெரியவில்லை. ஏனெனில் முன்காலத்தைவிட ஏராளமான நாய்கள் தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் வெறி நாய் கடித்தால் உயிருக்கே ஆபத்தான ‘ரேபிஸ்’ என்ற நோய் தாக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும் தெரு நாய்களில் பல உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும், ஒதுங்க இடமும் இல்லாமல் படும் வேதனைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே தெருநாய்களால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படாமல் இருக்கவும், காருண்ய அடிப்படையில் அந்த நாய்களின் வாழ்வாதாரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வது பற்றியும் இந்த நாளில் யோசிக்கிறார்கள்.
தெரு நாய்களுக்கு மட்டும் அல்ல... பல விதமான காரணங்களுக்காக வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கும் கருத்தடை செய்வதை இந்த தினத்தில் மேற்கொள்கிறார்கள். இதையெல்லாம் உணர்ந்துதானோ என்னவோ இந்தத் தினம் - நாய்களுக்கு மட்டும் அல்ல – பொதுவாகப் பல பிராணிகளுக்கும் - கருத்தடை தினமாக அனுசரிக்கப்படுகிறது. டோரிஸ் டே என்பவரால் ஸ்பே (கருத்தடை) தினம் அமெரிக்காவில் 1995ல் தோற்றுவிக்கப்பட்டது. இப்போது பல நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது.
எப்படியோ தெரு நாய்ப் பிரச்னைக்கு நல்லதொரு முடிவு கிடைத்தால் போதும் என்கிறார்கள் பொதுமக்கள்!