பாகிஸ்தானில் மீண்டும் உணவு தட்டுப்பாடு எச்சரிக்கும் ஐ.நா. சபை!

பாகிஸ்தானில் மீண்டும் உணவு தட்டுப்பாடு எச்சரிக்கும் ஐ.நா. சபை!

பாகிஸ்தானில் வரும் நாட்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது

ஏற்கனவே பாகிஸ்தான் அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு குறைந்து கொண்டே வருவதால் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. பாகிஸ்தான் மக்கள் உணவு பொருட்கள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடுகளால் ஏற்கனவே கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மீண்டும் ஐ.நா. சபை எச்சரிக்கை அங்குள்ளவர்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.

அவ்வப்போது பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பும் நிலவி வருவது அந்நாட்டை மேலும் சிக்கலில் தள்ளி உள்ளது. இந்த நிலையில் தான் ஐ.நா. சபை பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாகிஸ்தானில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு தீவிரமடைந்துள்ளதால் கடுமையான உணவு பாதுகாப்பின்மை அடுத்த மாதங்களில் உயரக் கூடும்.கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகளால் நிலைமை மோசமாசி உள்ளது.

இது விவசாய துறையில் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. உணவு உற்பத்தி, உணவு கிடைப்பது, வாழ்வாதார சாத்தியக் கூறுகளை பாதித்தது. பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் பிற முக்கிய பொருட்களை குடும்பங்கள் வாங்கும் சக்தி குறைந்து இருக்கின்றன. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை, பணத்தின் மதிப்பு குறைந்து வருவது ஆகியவை நாட்டின் முக்கிய உணவு மற்றும் எரிசக்தி விநியோகங்களை இறக்குமதி செய்வதற்கான திறனை குறைக்கின்றன.

ஏற்கனவே பாகிஸ்தானில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று ஐ.நா. சபை தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதே போல் ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், ஏமன், ஹைட்டி, சூடான் புர்கினா பாசோ, மாலி உள்பட 22 நாடுகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com