மூன்று முறை அதிபராகத் தேர்வு பெற்ற ஜி ஜின்பிங்!

மூன்று முறை அதிபராகத் தேர்வு பெற்ற ஜி ஜின்பிங்!

சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். சீன நாடாளுமன்றத்தில் உள்ள 2,952 வாக்குகளும் ஜி ஜின்பிங்குக்கு ஆதரவாகவே விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, ஜி ஜின்பிங் பதவி பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார். அவருக்குப் போட்டியாக வேறு யாரும் எதிர்த்து நிற்கவில்லை என்ற செய்தியும் தற்போது வெளியாகி உள்ளது. அதிபர் பதவி தவிர, சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீன நாடாளுமன்றத்தின் தலைவராக ஜாவோ லெஜியும், புதிய துணை அதிபராக ஹான் ஜெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பதவியேற்கும் நிகழ்வும் அந்த நாட்டு டிவிக்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. கடந்த 2012ம் ஆண்டு ஜி ஜின்பிங் முதல் முறையாக சீனாவின் அதிபரானார். அப்போது முதலே அதிபர் பதவியில் தாமே தொடர அவர் காய்களை நகர்த்தி வந்தார். அதற்காக அவர் ஊழல் ஒழிப்பு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து, எதிர்ப்பாளர்களைக் கட்சியில் இருந்தே நீக்கினார்.

அதேபோல், ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது என்ற சீன நாட்டின் விதிமுறையையும் 2018ல் அவர் சத்தமில்லாமல் நீக்கி விட்டார். இதன் மூலம் சாகும் வரை தாமே அதிபர் பதவியில் இருக்கவும் அவர் திட்டமிட்டு உள்ளார். இதன் மூலம் அவர் ஓய்வு பெறும் வரை அல்லது இறக்கும் வரை அவரே சீனாவின் அதிபராக விளங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் வெற்றிகளினால் சீனாவின் மிகப்பெரும் சக்தி வாய்ந்த தலைவராக ஜி ஜின்பிங் மாறி விட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com