-நேர்காணல்: காயத்ரி.
சிலரைப் பார்த்ததுமே அவர்களின் மென்மையான சிரிப்பும் அமைதியான தோற்றமுமாக மனதில் பச்சென்று பதிந்து போவார்கள். சன் டிவி செய்தி வாசிப்பாளரான சுஜாதா பாபு அதே ரகம்!
இன்றைய தேதியில் செய்தி சேனல்கள், யூடியூப் என்று எக்கசக்கமாக சேனல்கள் பெருகியுள்ள நிலையில் தமிழ் உச்சரிப்பு என்பது கிட்டத்தட்ட நகைச்சுவையாகவே மாறிவிட்டது.. தமிங்கிலிஷ் என்று ஒரு புதிய பாஷையையே உருவாக்கி விட்டனர்.. அப்படிப்பட்டவர்கள்..மத்தியில், தமிழ் மொழியை அட்சர சுத்தமாக அழகாக வாசிக்கும் வெகுசிலரில் சுஜாதா பாபுவும் ஒருவர். ஒரு செய்தியை அதன் இயல்பு மாறாமல் அப்படியே நேயர்களுக்கு கடத்துவது இவருக்கு கைவந்த கலை!
நியூஸ் சேனல் சின்னத் திரை, சினிமா பெரியத் திரை என்று பிஸியாக இருக்கும் சுஜாதா பாபுவை கல்கி ஆன்லைனுக்காக பிரத்தியேகமாகச் சந்தித்துப் பேசிய தருணம் நெகிழ்வானவை..இதோ உங்கள் சுஜாதா பாபு…
செய்தி வாசிப்பாளர் ஆனது எப்படி?
(கேள்வியை உள்வாங்கிக் கொண்டு அழகாக சிரிக்கிறார்). திருமணம் ஆன புதிதில், வீட்டில் இருந்தபோது சன் டிவியில் ஒரு விளம்பரம் கவனித்தேன். அதில் சன் நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளருக்கான விண்ணப்பம் கோரி விளம்பரம் செய்திருந்தார்கள். உடனே அதற்கு நான் விண்ணப்பிக்க விரும்பி, என் கணவரிடம் சொன்னதும், அவரே அதை தயார் செய்து அனுப்பி விட்டார். என்னைப் போலவே ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர்...ஆனால் நேர்காணலில் வெகு சிலரே தேர்வானோம்..அதில் நானும் ஒருத்தி! மனதிற்குள் பட்டாம்பூச்சி படபடக்க..2000–ம் ஆண்டு ஆகஸ்ட் 29..சன் நியூஸ் சேனலில் செய்தி படிக்கும் முதல் வாய்ப்பு அமைந்தது. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. வான் அலைகளில்..என் குரல் கலந்தபோது, பொதுத்தேர்வு எழுதி விட்டு..முடிவுக்காக..காத்திருக்கும் மாணவியைப் போல படபடப்பாகக் காத்திருந்தேன்.. சேனலில் இருந்தவர்கள் ‘’சூப்பர் மேடம்..மிக அழகாக வந்திருக்கிறது’’ என்று கைகளைத் தட்டி ஊக்கப்படுத்தியதும்தான் உயிரே வந்தது. அன்று தொடங்கிய பயணம் இன்று வரை தொடர்கிறது’’ என்றவர் தொடர்ந்தார்.
‘’சில நாட்களிலேயே..சன் டிவியில் மெயின் நியூஸ் படிக்க அழைப்பு வந்தது. அது மிகப்பெரிய அங்கீகாரம்…இன்றும் செய்திகள் என்றால்.. மக்களின் முதல் சாய்ஸ் சன் டிவி–தான்! அரைமணி நேர தொகுப்பில் அகிலத்தையே கரைத்து குடித்து விடலாம்! முதல்நாள் எப்படி வாசித்தேனோ..அதே மாதிரிதான் இன்றுவரை செய்தி வாசிக்கும்போது முக்கியத்துவம் கொடுத்துப் படிக்கிறேன். செய்தியின் தன்மை மாறக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்’’
நேரலையில் செய்தி படிக்கும்போது, செய்தி வாசிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?
உண்மையிலேயே செய்தி வாசிப்பது மிகவும் சவாலானது! செய்தி வாசிக்கும்போது இருமல் வரக்கூடாது.. செருமக் கூடாது..உணர்வுகளை வெளிக்காட்டக் கூடாது. சில செய்திகள் படிக்கும்போதே சிரிப்பு பொத்துகொண்டு வரும். ஆனால் சிரிக்காமல் கண்ட்ரோல் செய்ய வேண்டும். சில செய்திகள் கண்ணீர் வரவழைக்கும்.. ஆனால் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் படிக்க வேண்டும். படிக்கும்போது எச்சில் விழுங்குவதில் கூட நுட்பம் இருக்கிறது’’
‘’உங்கள் மனதை பாதித்த செய்தி?’’
(கேட்கும் போதே சுஜாதா பாபுவின் விழியோரங்களில் கண்ணீர்) கும்பகோணம் தீ விபத்து! அப்பள்ளிக் குழந்தைகளின் மரணச் செய்தியைப் படித்தபோது மனது கனத்துப் போனது. முதலில்.. இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டு, மூன்று என வந்து கொண்டு இருந்தது.. ஆனால் நேரம் செல்லச் செல்ல அந்த எண்ணிக்கை 80 என்று உயர்ந்த போது என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.’’ என்றவர், சில நிமிட மவுனத்துக்குப்பின் தொடர்ந்தார்.
‘’அழுகை எப்படியோ… அதே மாதிரிதான் சிரிப்பும்! ஸ்டுடியோவில் சுற்றிலும் நடக்கும் சில நிகழ்வுகள் சிரிப்பை வரவழைக்கும்..மற்றபடி செய்தி வாசிப்பளர்களுக்கு வேறு பல சவால்களும் உண்டு. நேரந்தவறாமை மிகவும் முக்கியம்.. மழை..வெள்ளம்..புயல் என்று எத்தனை இடையூறுகள் வந்தாலும், அதனை எதிர்கொண்டு சரியான நேரத்திற்கு சென்று விட வேண்டும். சென்னையில்.2015–ம் வருட புயல் மழையை மறக்கவே முடியாது.. அடாத மழையிலும் விடாமல்.. அலுவலகம் சென்றதில் மன நிறைவு”” – சுஜாதாவின் முகத்தில் மலர்ச்சி.
செய்தி வாசிப்பாளர்களிடம் ஆயிரம் புடவைகள் இருக்குமாமே..அப்படியா?
‘’அச்சச்சோ… அப்படி எல்லாம் கிடையாது.. பொதுவாகவே பெண்களுக்கு உடைகள்..விஷயத்தில் கொஞ்சம் ஆர்வம் இருக்கும்.. எனக்கும் அப்படித்தான்! எனக்கு ரொம்ப பிடித்த உடை சேலைதான்! அதிலும் எளிமையான காட்டன் சாரீஸ் எனது சாய்ஸ்.. அது தரும் கம்பீரம் .வேற லெவல்!
அப்போ..சல்வார்.. சுடிதார்.. ஜீன்ஸ்?
அதெல்லாம் இல்லாமலா?! அது ஒரு தனி கலக்க்ஷன் உண்டு! அதை அடிக்கடி அப்டேட் செய்து லேட்டஸ்ட் டிரெண்டுக்கு ஏத்த மாதிரி வாங்குவேன்.
பிடித்த… உணவு?
‘’தயிர் சாதம்.. மாவடு! .இதற்கு ஈடு இணை இல்லை’’ சிரிக்கும் சுஜாதா பாபு சமையலிலும் அசத்துபவராம். ‘’அதிலும் இவரின் காபி வேற லெவல் டேஸ்ட்’’ என்று சிலாக்கிறார்கள்..சன் டிவி சேனலில்!
ஓஎம்ஆர்..சாலையில் உள்ள உங்கள் வீட்டில் ஒரு பூங்காவே இருக்கிறதாமே?
யெஸ்.. பசுமை எனக்கு பிடிக்கும்… அதுதான் வீட்டையே நந்தவனமாக்கிவிட்டேன். அதிலும் வீட்டுத் தோட்டத்தில் பூத்த மல்லிகைப் பூவைக் கட்டி தழைய.தழைய தலையில் சூடுவதும் பிடிக்கும்
கணவர்.. குடும்பம்..பற்றி சொல்லுங்களேன்?
‘’என் கணவர் பாபு ரமேஷ், தூர்தர்ஷனில் சீனியர் கேமரா கலைஞர்.. அவருடைய ஊக்கம்தான் நான் இந்தளவு முன்னேறக் காரணம்! எங்களின் ஒரே மகன் விகாஷ்..அகமதாபாத்தில் நிர்வாகவியல்.படிக்கிறார்.
கணவர் மற்றும் மகனுடன்..
பெரிய திரையிலும் கலக்க ஆரம்பித்து விட்டீர்கள் போல?!
(மெல்ல புன்னகைக்கிறார்) ‘’எங்கள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் சங்க நிகழ்ச்சி ஒன்றுக்காக ‘மனோகரி’ என்ற ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்தேன், அதாவது, பெற்ற தாயாலேயே..ஒதுக்கப்படும் ஒரு திருநங்கையின் உணர்வுகளை பதிவு செய்த நாடகம் அது! மிக அழகாக வந்ததுடன் யூ டியூபிலும் குறும்படமாக வெளியாகி லைக்குகளை..அள்ளியது. அதுதான் கோடம்பாக்கம் கதவை எனக்குத் திறந்தது. என் முதல் படம் ‘ஓ..மை..கடவுள்”தான்! அதன்பின் வரிசையாக பல படங்கள்!’’ என்றவரிடம்,
‘’உலகமே எதிர்பார்க்கும்…அந்த படத்தில். ?’’ நாம் கேள்வியை முடிக்கவில்லை..
‘’அதைப் பற்றி இப்போது வேண்டாமே. படம் வெளியானதும் உங்களுக்கே தெரியவரும். அதுவரை சஸ்பென்ஸ்.’’ – மிகவும் நாசூக்காக வருகிறது பதில்…
‘’அப்போ உங்கள் அடுத்த சாய்ஸ் பெரிய திரையா?
‘’நிச்சயம் காலம் இதற்கு பதில் சொல்லும். இப்போதைக்கு சன் டிவியில் 21 ஆண்டு பயணம்.. அது எனக்கு இன்னொரு தாய்வீடு’’
உங்கள் மேக்கப், தினப்படி உடற்பயிற்சி டிப்ஸ்.. ப்ளீஸ்?
..சிம்பிள் மேக்கப்தான் பிடிக்கும். செய்திகள் படிக்கும்போது மட்டும் விளக்கு வெளிச்சத்தில் சற்று அதிகமாக மேக்கப் தேவைப்படும்… மற்றப்படி எங்கு செல்கிறோமோ..அதற்கு ஏற்றபடி..போட்டு கொள்வேன்.. மாதம் ஒருமுறை.. பியூட்டி பார்லர் சென்று வருவேன்’’
–சுஜாதா பாபு, கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக விடியோவில் தெரிவித்த கூடுதல் டிப்ஸ்களை கீழ்க்காணும் காணொலியில் பார்க்கலாம்..