மர்மங்கள் சூழ் நந்தினி!   

மர்மங்கள் சூழ் நந்தினி!   
பொன்னியின் செல்வன் – வாசகர் பங்களிப்பு!

வி.ஜி. ஜெயஸ்ரீ, சென்னை

ஓவியம்: பத்மவாசன்

சிறுவயதிலிருந்தே ஆதித்த கரிகாலனால் நேசிக்கப்படும் நந்தினி, வீரபாண்டியனைக் காதலித்து, திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையி்ல், ஆதித்த கரிகாலன்,  வீரபாண்டியனை, அவன் மறைந்திருந்த இடத்தை தேடிக் கண்டுப்பிடித்து கொல்லப் பார்க்க, நந்தினி, "அவரைக் கொல்லாதீர்கள், அவரைதான், நான் மணம் முடிக்க இருக்கிறேன்" என்று கதறக் கதற, அவள் கெஞ்சுவதைப் பொருட்படுத்தாமல் வீரபாண்டியனைக் கொன்று விடுகிறான் ஆதித்த கரிகாலன். அந்த ஆதித்த கரிகாலனின் சோழப் பேரரசையே பூண்டோடு அழிக்க வேண்டுமென்று சபதமேற்று அதற்கு திட்டமிட்ட நந்தினியின் செயல்கள் என்னை பிரமிக்க வைத்தன.

  •  சோழப் பேரரசில் பெரும் செல்வாக்கு மிகுந்த, சோழர்களின் விஸ்வாசியான பெரிய பழுவேட்டயரை, தன் அழகால் மயக்கி,  திருமணம் செய்துக் கொள்வது,
  •  சோழப் பேரரசின் வாரிசுகளான சுந்தர சோழரையும், அவர்தம் குழந்தைகளான ஆதித்த கரிகாலனையும், அருள்மொழி வர்மனையும், குந்தவை தேவியையும், தனித்தனியாக கொல்வதற்காக பாண்டிய ஆபத்துதவிகளுடன் இணைந்துக் கொண்டு, செயல்படுவது,
  •  சிவ கைங்கரியத்தில் ஈடுபட்டு, பதவி ஆசை இல்லாமல் இருந்த, கண்டராதித்தரின் மகனான மதுராந்தக தேவனின் மனதில் பதவி ஆசையை மூட்டி, அவரை சுந்தர சோழர்களின் வாரிசுகளுக்கு எதிராக திருப்பி விடுவது,
  •  ஆதித்த கரிகாலனை,  தந்திரமாக கடம்பூர் மாளிகைக்கு வரச்செய்து, வேட்டை மண்டபத்தில் வைத்து, அவரைக் கொலை செய்வது, (அதற்கு முன் வந்தியத்தேவனையும், மணிமேகலையையும் அங்கே மறைந்திருக்க வைப்பது), ஆதித்த கரிகாலனை கொல்லப் போகிறார்கள் என்பதை அறிந்து தடுக்க முற்பட்ட பெரிய பழுவேட்டரையர்,  மயங்கி விழ, பாண்டிய ஆபத்துதவிகளை கொண்டு, அவரை தூக்கி வரச் செய்து, மூன்று நாட்கள் உணவளித்து மயக்கமாக இருந்தவரை தெளிவித்து, அவர் காலில் விழுந்து வணங்கி, அவரிடமிருந்து விடைப்பெற்று, எங்கேயோ மறைந்து விடுவது… என மர்மங்கள் நிறைந்த கதாபாத்திரம் நந்தினி;

டைசி வரை அவளது தந்தை யார் என்பதை பூடகமாகவே சொல்லியிருக்கிறார் அமரர் கல்கி. அது சுந்தர சோழனா அல்லது வீரபாண்டியனா? வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் கொல்ல வரும் போது, தான் அவனை மணம் புரிய போவதாக கூறுகிறாள் நந்தினி. ஆனால், ஆதித்த கரிகாலனின் மறைவிற்குப் பின், வீரபாண்டியன்தான் அவளுடைய தந்தை என்கிறார் பெரிய பழுவேட்டரையர். ஆனால் வேட்டை மண்டபத்தில் தன்னுடைய தந்தையாக சுந்தரசோழரை நந்தினி சொன்னதாகவும், அதனாலேயே தங்கை முறையுடைய ஒருவளை தான் விரும்பியதால்தான், ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்ததாகவும் ஒரு மர்ம செய்தியும் உண்டு.

கடைசியில், நந்தினி எங்கே போனாள் என்பதும் மர்மமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com