கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை ஆழ்ந்து ரசித்துப் படித்தவர் களுக்கு மிகவும் சிக்கலான பணி, இந்நாவலில் எந்தக் கதாபாத்திரம் சிறந்தது என்று தீர்ப்பு சொல்வது. காரணம் இதில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையும், சிறப்பம்சமும் கொண்டதாகும். ஆனாலும், ஏதாவது ஒருவரை தேர்வு செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போது, கடினமான தேர்வுக்குப் பின் போட்டியில் கடைசியில் நிலைத்து நிற்பவர்கள் வந்தியத்தேவனும், நந்தினியும்தான். மீண்டும் ஒரு முறை மனதிற்குள் நடந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கம்பீரமாக நிற்பவர் நந்தினிதான்.
ஒரு வில்லி பாத்திரம் எப்படி நாயக, நாயகிகளை எல்லாம் ஓரம் கட்டி முன்ணணியில் நிற்கிறார் என்பதை உணர ஒரு பெரிய, விரிவான கதாபாத்திரங்களின் அலசல் தேவைப்படுகிறது. சரித்திரத்தைக் கடந்து, இன்றைய கால கட்டத்தில் நந்தினி பாத்திரத்தை நினைத்துப் பார்க்கும்போது, நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஒரு பெண் முதலமைச்சர் தன் வாழ்வில் பல இன்னல்களைக் கடந்து வந்து அரியணை ஏறிய வரலாறு ஞாபகத்தில் வராமல் போகாது. நந்தினியால் அரியணை வரை வர முடியவில்லை என்றாலும் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள், சூழ்ச்சிகள் அனைத்தும் ஒரு ராஜ தந்திரமாகத் தோன்றுகிறதே அல்லாமல் எந்த ஒரு சமயத்திலும் அவரது கதாபாத்திரத்தின் மீது நமக்கு வெறுப்பு தோன்றவில்லை. மாறாக அவரின் பிறப்பின் ரகசியம் (சுந்தரசோழரின் பழங்கதை) தெரிந்த பிறகு, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவரின் வில்லத்தனமான செயல்கள் வாசகர்களுக்கு நியாயமானதாகவே தோன்றுகிறது.
தன் இலட்சியத்திற்காக வயது முதிர்ந்த பெரிய பழுவேட்டரையரை மணந்தாலும், தன் கற்பிற்கு பங்கம் வராமல் அனைத்து ஆண்களையும் கையாண்ட விதம் சாணக்கியத்தனமானது. முடிவில், அவருக்கு ஏற்பட்ட முடிவு அவரது கதாபாத்திரத்தின் புனிதத்தைக் காப்பாற்றுவதாகவே வடிக்கப்பட்டுள்ளது. நந்தினியின் அழகும், அறிவும் ஒரு நல்ல பாதையில் பயணப்பட்டிருந்தால், அவர் ஒரு மகாராணியாக வாழ்ந்து புகழ் பெற்றிருப்பார் என்பதில் ஐயமில்லை.