பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 4

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 4

ஒரு அரிசோனன்

கருவூரார் குடில், தஞ்சை

சாதாரண, ஆனி 29 – ஜூலை 14, 1010

வைப் பாட்டியார் மாதிரி திருமணமே செய்துகொள்ளாமல் காலம்முழுதும் கன்னியாகவே இருக்கப்போகிறாயா?" என்று பஞ்சவன் மகாதேவி அருள்மொழிநங்கையை அதட்டியதையும், அதற்கு அவள், "அன்னையே!

"உன்னைப் பிரானாகப் பெற்ற உன்சீர் அடியோம்

உன் அடியார் தாள் பணிவோம்

ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம் கணவராவார் அவருகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்

இன்னவகையே எமக்கொங்கொன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம்" 27

என்று திருவாதவூரார்28 சொல்லியிருக்கிறாரே! மார்கழி மாதத்தில் நாம் அதைப் பாடி மகிழ்வதில்லையா? நான் ஒரு நல்ல சிவனடியாரைத் திருமணம் செய்துகொள்வேன்!" என்று வாயாடியதையும் நினைவுகூர்ந்து மகிழ்கிறான், இராஜேந்திரன்.

———————————————————-

[27 திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையின் ஒன்பதாவது பாட்டில், '(சிவ பெருமானே!) உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்கள் உன் சிறப்பு வாய்ந்த திருவடிக்கே உரியவர் ஆகின்றோம். உன் அடியார்களின் பாதங்களை வணங்குவோம். அவர்கள் சொல்லைப் பின்பற்றி நடப்போம். அத்தகையவரே (சிவனடியார்களே) எங்களுக்குக் கணவர் ஆவார்கள். எங்கள் (சிவ)பெருமானே! இப்படிப்பட்ட அருளை எங்களுக்கு நல்குவாயானால் எந்தவிதமான குறையும் இல்லாமல் இருப்போம்!'என்று தங்களுக்கு கணவன்மார்கள் எப்படி வாய்க்கவேண்டும் என்று பெண்கள் சொல்லிப் பாடுவதாக உருவகப்படுத்தியிருப்பதையே அருள்மொழிநங்கை தன் தாயிடம் சொல்கிறாள்.

28 எட்டாம் திருமுறையான திருவாசகத்தின் ஆசிரியர் மாணிக்கவாசகர். இவரைத் திருவாதவூரார் என்று அவர் பிறந்த ஊரைச் சொல்லிக் குறிப்பிடுவதும் உண்டு.]

ரண்மனையிலிருந்து பெருவுடையார் கோவில் மண்டபத்திற்குச் செல்லும் சுரங்கவழியை29 நோக்கி நடக்கிறான்.

————————————————

[29 பண்டைய தமிழ்நாட்டில் அரசு அரண்மனையிலிருந்து பெரிய கோவில்களுக்குச் செல்லும் சுரங்கங்கள் உண்டு. இவை கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து மண்மூடிப் போனதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் கோவிலில் மலைக்கோட்டைக்கு வெளியில் செல்லும் சுரங்கப்பாதை ஒன்று இருக்கிறது. இதுதவிர திருமயக் கோட்டையிலும், இன்னும் பலப்பல கோவில்களிலும் சுரங்கப்பாதைகள் உள்ளன. கோவில்களுக்கு அடியிலும் இரகசிய அறைகளில் அரசுப் பொக்கிஷங்கள் இருக்கக்கூடும். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலிலும் இம்மாதிரி இரகசிய அறைகளில் விலைமதிப்பில்லாச் செல்வங்களுள்ள பொக்கிஷ அறைகளை பொது ஆண்டு 2011ல் கண்டுபிடித்திருக்கிறார்கள்.]

அவனுக்கு அருள்மொழிநங்கையை நினைத்தால் கொஞ்சம் மனவருத்தம் ஏற்படுகிறது. அவளின் போக்கு ஒரு அரசகுமாரியைப்போலவே இல்லை. அவள் வயதுக்குரிய பெண்களைப்போல ஆட்டம், பாட்டம், பொன் நகைகள், புத்தாடைகள், எதிலும் அவள் விருப்பத்தை செலுத்தவில்லை.

சிவ பூசையிலும், திருமுறைகளைக் கற்றுக்கொள்வதிலுமே காலத்தைக் கழித்துவருகிறாள். அவளது தமிழறிவு அனைவரையும் வியக்கச்செய்கிறது. அவள் சைவ உணவை மட்டுமே உண்ண ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. சிவபூசை செய்யும் தான், உயிர்க்கொலைசெய்து வயிற்றை வளர்க்கக்கூடாது என்று அசைவை உணவை விட்டுவிட்டாள்.

"கருவூர்த்தேவர் செய்த கைங்கரியம் இது!" என்று மனதிற்குள் எண்ணிக்கொள்கிறான் இராஜேந்திரன்.

அருள்மொழிநங்கைக்கு சிவபெருமான்மீதும், திருமுறைகள் மீதும் பற்றுவரச் செய்தவரே அவர்தான். கொஞ்சமும் சளைக்காமல் அவளுக்கு சிவபோதம் செய்வார். சில சமயம் மணிக்கணக்கில் அவர்கள் பேச்சு தொடரும்.

அவளுக்கு நேர் எதிர், அம்மங்கை. இறைவன்மேல் பற்று உண்டு. ஆனால் அருள்மொழிநங்கை மாதிரி அதிகப்பற்று கிடையாது. அக்காளுக்கும் சேர்த்துவைத்து அவளுக்குப் பொன் அணிகலன்கள்மேல் கொள்ளை ஆசை. எனவே, தனக்கு வரும் நகைகளையெல்லாம் தங்கைக்கே அளித்துவிடுவாள் அருள்மொழிநங்கை.

சுரங்கப் பாதையின் வாசல் இராஜராஜரின் வளாகத்தின் மையத்தில் இருக்கிறது. அங்கு தன் தமக்கையாருடனும், சோழமகாதேவியாருடனும் அவன் வரவை எதிர்நோக்கி அமர்ந்திருக்கிறார்.

நேற்று சந்தித்த தந்தையா இவர் என்று எண்ணும் அளவுக்கு அரச உடையில் ஜொலிக்கிறார், இராஜராஜர். தூக்கிக்கட்டி முடிந்த தலைமயிரின்மேல் சொருகப்பட்ட மணிமகுடம், உடல் முழுவதும் பொன்னாலும் மணியாலும் செய்யப்பட்ட ஆபரணங்கள், இடுப்பில் உறையிலிட்ட வீரவாள் – கம்பீரமாக – சோழ மண்டலம் மட்டுமின்றி; பாண்டிய, சேர, கீழைச்சாளுக்கிய, கருநாடுகளின் பேரரசராக விளங்குகிறார்.

இராஜேந்திரனுக்கே தன்னையும் அறியாமல் அவர்மீது ஒரு மரியாதைகலந்த மதிப்பு -. தந்தை என்று எண்ணாமல் தரணி ஆளும் பேரரசர் என்றே மதிக்கத் தோன்றுகிறது.

"வணக்கம் தந்தை… சக்கரவர்த்தியாரே!" என்று தலைவணங்கினான் இராஜேந்திரன்.

புன்னகையுடன் அவனைத் தழுவிக் கொள்கிறார் இராஜராஜர்.

"வழக்கம் போலத் தந்தையாரே என்று விளித்தால் போதும் மதுராந்தகா!" என்று புன்னகைத்த அவர் "செல்லலாமா?" என்று வினவுகிறார்.

அவரது தலைமை மெய்காப்பாளன் அங்கிருந்த புலியின் சிலையின் வாயில் கையைவிட்டு எதையோ முடுக்குகிறான். உடனே அங்கு ஆளுயரத்திற்கு வரையப்பட்டிருந்த தஞ்சைப் பெருவுடையார் கோவில் ஓவியம் அதன் சட்டங்களுடன் விலகிச் சுரங்கப் பாதையின் வாசலை வெளிப்படுத்துகிறது.

உள்ளே தீவட்டியுடன் மெய்காப்பாளர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர்.

தலைமை மெய்காப்பாளன் தலைசாய்த்து, "சக்கரவர்த்திகளே! செல்லலாமே!" என்று கையைக் காட்டுகிறான். முதலில் இராஜராஜர் சுரங்கத்தில் நுழைகிறார்.

அவரைப் பின்பற்றி இராஜேந்திரன், சோழமகாதேவி, குந்தவைப் பிராட்டியார் நுழைகின்றனர். கடைசியாகத் தலைமை மெய்காப்பாளனும், இதர காப்பாளர்கள் பத்துப் பேரும் உள்ளே செல்கின்றனர். ஓவியம் திரும்பச் சுரங்கவாசலை மூடிக்கொள்கிறது.

சுரங்கம் கிட்டத்தட்ட ஏழடி உயரமும் ஐந்தடி அகலமாகவும் இருக்கிறது. இந்தச் சுரங்கப்பாதை வழியாகத்தான் அரச குடும்பத்தினர் பெருவுடையார் கோவிலுக்கு ரகசியமாகச் செல்வது வழக்கம். பெரும்பாலும் இராஜராஜரும், இராஜேந்திரனும்தான் அந்தச் சுரங்கப்பாதையை உபயோகப்படுத்துவார்கள். ஈரக்கசிவு கால்களைத் தாக்காத வண்ணம் தேக்குமரப் பலகைகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. உள்ளே ஒரு பல்லக்கு இருக்கிறது. அதில் சோழ மகாதேவியும், குந்தவைப் பிராட்டியும் அமர்ந்துகொள்கின்றனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள் அப்பல்லக்கைத் தூக்கிக்கொள்கிறார்கள். முன்னே இருவர் தீப்பந்தங்களைப் பிடித்துக்கொண்டு நடக்கின்றனர்.

அவர்களை நான்கு மெய்காப்பாளர்கள் உருவிய வாளுடன் பின்தொடர்கின்றனர். அவர்கள் பின்னால் இராஜராஜரும், இராஜேந்திரனும் செல்கின்றனர். பல்லக்கு அவர்களைப் பின்தொடர்கிறது. அவர்கள் பின்னால் நான்கு மெய்காப்பாளர்களும், அவர்களைத் தொடர்ந்து இருவர் தீப்பந்தங்களைப் பிடித்துக்கொண்டு வந்த வழியில் யாராவது வருகிறார்களா என்று அடிக்கொரு தடவை திரும்பிப் பார்த்தவாறே செல்கிறார்கள்.

இவர்களின் அணிவரிசை பெரிய இரும்புக்கதவுகளாலான ஒரு பெரிய கருங்கல் அறையைத் தாண்டுகிறது. சோழ அரசின் இரகசியக் கருவூலம் அந்தச் சுரங்கத்தில் உள்ள கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த அறையில்தான் வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த அறையைக் காத்துநிற்கும் எஃகுக் கதவின் நான்கு பூட்டுகளின் சாவிகள் இராஜராஜர், இராஜேந்திரன், சோழப் பேரரசுக் கருவூல அதிகாரி, மகாராணி சோழமகாதேவி மற்றும் குந்தவைப் பிராட்டியாரிடமும் உள்ளன.

ஒவ்வொரு பூட்டும் இந்த ஐந்து சாவிகளைக்கொண்டு குறிப்பிட்ட முறைப்படி திறந்தால்தான் திறக்கும். அந்த வரிசையின் இரகசியம் கருவூல அதிகாரிக்கு மட்டுமே தெரியும். அந்த வரிசையின் முறை ஒரு ஓலையில் எழுதப்பட்டு சோழமகாதேவியின் அந்தப்புரத்தில், அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியமான இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது.

இராஜராஜர் கடைக்கண்ணால் அந்த அறையின் நான்கு பூட்டுகளைத் துணியினால் சுற்றி வைக்கப்பட்ட அரக்கு முத்திரை அப்படியே இருக்கிறதா என்று பார்த்துக்கொள்கிறார். அந்த அறைக்குப் பாதுகாவலாக கருங்கல் திண்ணையின் அருகில் நிற்கும் ஆறு காவலர்கள் அரச ஊர்வலத்தைக் கண்டதும், உருவிய வாளை உறையில் இட்டு, மண்டியிட்டுத் தலைவணங்குகிறார்கள். இவர்கள் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை மாறுவார்கள். தாங்கள் செய்யும் வேலையைக் கனவில்கூட யாரிடமும் சொல்லாமல் இருக்கும் அளவுக்கு விசுவாசமான ஊழியர்கள், இவர்கள். இவர்களுக்காக நிறைய மானியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கையை உயர்த்தி, அவர்களை நோக்கிப் புன்னகை செய்தவாறு இராஜராஜர் மேலே நடக்கிறார். இராஜேந்திரன் ஒருகணம் அவர்களை நெருங்கி அவர்கள் முதுகில் தட்டிக்கொடுத்துச் செல்கிறான். அவர்களின் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத நிகழ்ச்சியாக அது விளங்கும்.

இருபது நிமிஷங்களில் அந்தச் சுரங்கம் முடிவடைகிறது. இதற்குள் மூன்று நான்கு இடங்களில் அந்தச் சுரங்கத்திலிருந்து வேறுசில சிறிய பாதைகள் பிரிந்து செல்கின்றன. அவை எங்கு செல்லும் என்பது இராஜராஜர், இராஜேந்திரன் மற்றும் மெய்காப்பாளர்கள் இன்னும் முக்கியமான ஊழியர்கள் சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

தீவட்டியைப் பிடித்த காவலர்கள் அவர்களுக்கே தெரிந்த குறியீட்டு முறைப்படி கதவில் தட்டுகின்றனர். அதற்குப் பதிலைப்போல, வெளியிலிருந்து மற்றொரு குறியீட்டு முறைப்படி தட்டும் சத்தம் கேட்கிறது. அதற்குப் பதில் தெரிவிக்கும் வகையில் காவலர்கள் மீண்டும் கதவைத் தட்டியதும் கதவு திறக்கப்படுகிறது. அனைவரும் அக்கதவைத் தாண்டி ஒரு கருங்கல் அறையில் நுழைகின்றனர்.

அவர்கள் சுரங்கத்திலிருந்து வெளிவந்ததும், அந்தக் கதவு சாத்தப்படுகிறது. தீவட்டியைப் பிடித்த காவலர்கள் சுரங்கத்தினுள்ளேயே சென்று உட்பக்கமாகத் தாளிட்டுக்கொள்கின்றனர். உடனே ஒரு பெரிய மரத்தட்டி சுரங்கக் கதவை மறைத்து வைக்கப்படுகிறது. அது கோவிலின் பூசைச் சாதனங்கள் வைக்கப்படும் அறை. வெள்ளி நந்தி, திருக்கைலாயம், தங்கக் குதிரை, வெள்ளி அன்னம், தாமரை இவைகளோடு பஞ்சலோகத் திருஉருவங்களை அலங்கரிக்கும் சாதனங்கள் என்று பெரிய மேடையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இரும்புக் கம்பிகளால் ஆன சுவர் அவைகளையும், சுரங்கச் சுவரையும் பிரிக்கிறது. காவலர் அந்த இரும்புக் கதவைத் திறந்து விடுகின்றனர்.

இராஜராஜர் உட்பட அனைவரும் அந்த அறையின் திறக்கப்பட்ட வெளிக்கதவின் மூலம் ஒரு பெரிய மண்டபத்திற்குள் நுழைகின்றனர்.

மண்டபத்தில் அரசப் பிரதிநிதிகள் காத்திருக்கின்றனர். அரசியாரின் பணிப்பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி நிற்கின்றனர். அரச குடும்பத்தினர் நடந்துவரக் கால்விரிப்பு விரிக்கப்படுகிறது. பெருவுடையார் கோவிலுக்கு மண்டபத்திலிருந்து இறங்கி நடக்கிறார்கள். அரசகுடும்பம் வருகிறது என்பதால் மற்றவர்களை கோவில் பெரிய நந்தி அருகிலேயே நிறுத்தி விட்டிருக்கின்றனர். இது இராஜராஜருக்குப் பிடிக்காவிட்டாலும், தனது பாதுகாப்பிற்காகவே செய்யப்பட்டிருக்கிறது என்று அந்த ஏற்பாட்டிற்குக் கட்டுப்படுகிறார்.

பூரணகும்ப வரவேற்பு நடக்கிறது. வேதகோஷங்கள் விண்ணைத் துளைக்கின்றன. இராஜராஜரும், இராஜேந்திரனும் தங்கள் மகுடங்களையும், உடைவாள்களையும் தங்கள் மெய்காப்பாளர்களிடம் கொடுத்துவிட்டு, பூரணகும்ப வரவேற்பை ஏற்றுக்கொண்டு பெருவுடையார் சன்னிதிக்கு நடக்கின்றனர்.

சிறப்பு நன்னீராட்டலும், அலங்காரமும் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் நடந்த அந்த வழிபாடு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. பூசை முடிந்ததும் தேவாரம் ஓதப்படுகிறது.

கண்மூடி இறைவனைத் தொழுத இராஜராஜர், தன் தமிழ்த் திருப்பணி இனிது நிறைவேற இறைஞ்சி வேண்டுகிறார். கோவிலின் தலைமை அர்ச்சகர் அவருக்கு திருநீறும், குங்குமமும் இறைவனின் நீராட்டுப் பிரசாதமும் வழங்குகிறார். பயபக்தியுடன் அவற்றைப் பெற்றுக்கொள்கிறார், இராஜராஜர்.

"சக்கரவர்த்திகளே! மகாராணியாரே! இளவரசே! பிராட்டியாரே! உங்கள் அனைவரையும் ஒருங்கே பார்ப்பது, எம்பெருமானும் பெருமாட்டியும் குமரக்கடவுளுடனும், திருமகளுடனும் இங்கு வந்தாற்போல இருக்கிறது!" என்று புகழாரம் சூட்டுகிறார், தலைமை அர்ச்சகர்.

"இப்புகழ்ச்சிக்கு நான் தகுதியற்றவன். இறைவனின் தொண்டன், நான்" என்று பணிவாகப் பதில் அளித்துவிட்டு சோழமகாதேவியைப் பார்க்கிறார் இராஜராஜர். அவர் பார்வையின் பொருளை உணர்ந்துகொண்ட மகாராணி, தன் கழுத்திலிருந்து ஒரு தங்கச்சங்கிலியை எடுத்து அர்ச்சகரின் தட்டில் இடுகிறாள்.

அர்ச்சகரின் வாயெல்லாம் பல்லாக மலர்கிறது. மீண்டும் பெரிதாக அரச குடும்பத்தை வாழ்த்துகிறார்.

அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு கோவில் தோட்டத்திலிருக்கும் கருவூராரின் குடிலை நோக்கி நடக்கிறார் இராஜராஜர். குடில் கண்ணில் பட்டதும் கையை அசைத்து சைகைசெய்கிறார். அவர்களின் முக்கிய மெய்காப்பாளர்கள் அறுவரைத் தவிர மற்றவர்கள் வரிசையாக அணிவகுத்து நின்றுவிடுகிறார்கள்.

குடிலின் வாயிலில் சிவாச்சாரி அவர்களை எதிர்நோக்கி நிற்கிறான். குடிலுக்கு ஐம்பது தப்படி தொலைவிலேயே குடிலைச் சுற்றிக் காவலாக மெய்காப்பாளர்கள் நின்றுவிடுகிறார்கள். நால்வரையும் வரவேற்கிறான், சிவாச்சாரி.

குடில் பதினைந்தடிக்குப் பதினைந்தடி சதுரமாக இருக்கிறது. மூங்கில் தூண்களாலும், விட்டங்களாலும் கட்டப்பட்ட அந்தக் குடிலுக்கு இரட்டை வரிசையாகத் தென்னையோலைக் கூரை வேயப்பட்டிருக்கிறது. சுவர்களும் தென்னை ஓலைகளே. வெளிச்சத்திற்காக நான்கு பக்கத்திலும் மூங்கில்சட்டச் சாளரங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட தரையில் தேக்குமரப் பலகைகளும், சிறிய சாய்வுமேசைகளும் இருக்கின்றன. அந்தச் சாய்வு மேசைகளில் நிறைய ஓலைச்சுவடிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. மேற்குப் பக்கத்தில் சிறிய சிவலிங்கம், அதன் பக்கத்தில் உமையவள், வடக்கே சிறிய நடராஜர் பஞ்சலோகச் சிலையும், சமய குரவர்கள் நால்வரின் பதுமங்களும் தெற்கே பார்த்தவண்ணம் இருக்கின்றன. சிலைகளின் கீழே மலர்க்குவியல். நந்தாவிளக்கு சிறியதாக எரிந்துகொண்டிருக்கிறது. அறையின் ஒருமூலையில் ஒரு கோரைப்பாய் சுருட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

அரசகுருவான கருவூரார் எவ்வளவு எளிமையாக வாழ்ந்துவருகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது அக்குடில்.

"வா அருள்மொழி! மதுராந்தகா, அருள்மொழிநங்கை எப்படி இருக்கிறாள்? அவள் சிவபுராணம் ஓதிக் கேட்கவேண்டும் என்று இந்தக் கட்டைக்கு மட்டில்லா ஆவல். அவளைச் சந்திக்க விரும்புகிறது இக்கட்டை. இரவு அனைவரும் நன்றாக உறங்கினீர்களா?" என்று அன்புடன் வரவேற்கிறார் கருவூரார்.

"சிவனே! அனைவருக்கும் இருக்கைகளை எடுத்துப் போடுவாயாக. மெத்தென்ற இருக்கைகள் இங்கில்லை மகாராணி, பொறுத்தருளவேண்டும்!" என்று சோழமகாதேவியை மட்டும் நோக்கிக் கருவூரார் சொன்னதற்குக் காரணம் மகாராணியின் பதிலில் தெரிந்தது.

"தேவர் பெருமானே! தாங்கள் அளித்த அஞ்சனத்தால் எனது மூட்டுவலி குணமாகிவிட்டது. என்னால் பஞ்சணையில்லாத இருக்கையில் அமர முடிகிறது!" என்று நன்றி கலந்த குரலில் சொல்லிவிட்டு ஒரு பலகையில் அமர்ந்துகொள்கிறாள்.

"நாம் ஒரு இனிய திருப்பணியைப் பற்றிப் பேசப்போகிறோம். ஆகவே, இனிப்பாக அதைத் தொடங்குவோம்!" என்று சிவாச்சாரியை நோக்குகிறார் கருவூரார்.

சிவாச்சாரி ஒரு சம்புடத்தை எடுத்துத் திறந்து, அதிலிருக்கும் ஊறவைத்த நெல்லிக்கனிகளை பூவரச இலைகளில் ஒவ்வொன்றாக வைத்து அனைவருக்கும் கொடுக்கிறான்.

"இவை உடலையும் மனதையும் குளிரவைக்கக் கூடியவை. பழங்காலச் சித்த மருத்துவத்தில் குறிப்பிட்ட மூலிகைச் சாற்றில் தேனைக் கலந்து ஊற வைக்கப்பட்டவை. களைப்பை நீக்கும்" என்று கனிவுடன் கூறுகிறார் கருவூரார்.

நெல்லிக்கனி மிகவும் சுவையாக இருக்கிறது. மூலிகைச் சாறின் சுவை தெரியாதவாறு கனியின் புளிப்பும், தேனின் இனிப்பும் மறைக்கின்றன. கனி உள்ளேசென்ற சில விநாடிகளிலேயே அதை உண்டவர்களின் மனதில் இனம் தெரியாத அமைதி பிறக்கிறது.

"சிவனே! திருப்பணிக் குழலை அருள்மொழியிடம் கொடுத்துவிட்டு, நீயும் அமர்ந்துகொள்!" என்று பணிக்கிறார் கருவூரார்.

"மதுராந்தகன் நேற்று கேட்ட கேள்வி மிகவும் சரியான ஒன்று. அதற்குப் பதிலைச் சொல்லிவிட்டு மேலே தொடருவோம்." என்று இலேசாகப் புன்னகை செய்த கருவூரார், "மதுராந்தகா! வாளெடுத்துப் போர்புரிந்து சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பரப்புவதுபோல மக்களைக் கத்தியைக் காட்டி, மிரட்டி, தமிழ் பேசவைக்க முடியுமா என்றும், உனது மருமகன் நரேந்திரனே தமிழைச் சரியாகப் பேசுவதில்லை என்று தங்கை குந்தவி புகார் அனுப்பியிருக்கிறாள் என்றும் நீ கேட்டது ஒரு நல்ல கேள்விதான்! கத்தியைக் காட்டி, மிரட்டிக் கைப்பற்றிய நாடுகள் அந்தக் கத்தி வேறுபக்கம் திரும்பியவுடன் நமக்கு எதிராக வேலைசெய்ய ஆரம்பித்துவிடும். ஆகவே, எப்பொழுதுமே ஓங்கிய வாள் உறைக்குள் வரவே முடியாது.

"இது மொழியைப் பரப்புவதற்கும் பொருந்தும். குந்தவி புகார்செய்தாளே தவிர, தன் மகனுக்கு தமிழ்ப்பற்று வருவதற்கு என்ன செய்தாள்? விமலாதித்தன் தெலுங்கு கற்றுக் கொடுக்க நன்னய்யரை ஏற்பாடு செய்தானே, அந்த மாதிரி தமிழாசிரியர் யாரையும் ஏற்பாடு செய்தாளா? இல்லையே! கொட்டிய பாலின் கீழ் கூவியழுவதால் ஏற்படப் போவதென்ன?

"ஆகவே, வேறுவிதமாகத்தான் திருப்பணியைத் துவக்க வேண்டும். உங்களைப் பெருவுடையார் கோவிலுக்கு மதியபூசைக்கு அனுப்பியதும் ஒரு காரணமாகத்தான். பூசை எந்த மொழியில் நடந்தது?" என்று இராஜேந்திரனைக் கேட்கிறார் கருவூரார்.

"வடமொழியில்தான்!"

"வடமொழியை யார் பேசுகிறார்கள்? அது வழக்கிலிருக்கிறதா?" கேள்வி பிறக்கிறது.

"தங்களுக்கு தெரியாததா தேவரே! வடமொழிதான் வழக்கொழிந்து நெடுங்காலமாகிவிட்டதே!"

"இருப்பினும் அதைச் சாகவிடாமல் உயிருடன் வைத்திருப்பது எது?"

சிறிதுநேரம் யோசித்து, "தேவரே! நான் போர்வீரன், மொழி ஆராய்ச்சியாளன் அல்ல!" என்று பதில் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டான் இராஜேந்திரன்.

"அந்த மொழியின் மீது பற்று வைத்திருப்பவரின் உற்சாகம்தான் அது, மதுராந்தகா! நாம் தமிழ்ச்சங்க இலக்கியங்களையும், திருமுறைகளையும் ஓலைச்சுவடியில் எழுதி வைத்துவிட்டு, மறந்துவிடுகிறோம். ஆனால் வேதங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, உச்சரிப்புகூடப் பிறழாமல் இன்னும் ஓதப்பட்டுவருவது எதனால்? கேரளத்தில் நம்பூதிரி அந்தணர்கள் தமிழையே வேறுமொழியாக மாற்ற முயல்வது எதனால்? வடமொழியின் மீது இருக்கும் பற்றால்தான்! இமயம் முதல் குமரி வரை கற்றவர்கள் உரையாடத் தேர்ந்தெடுத்திருக்கும் மொழி எது? வடமொழிதானே! அத்தகைய பற்று தமிழின்மீது இருந்தால் போதுமானது, மதுராந்தகா. அப்படி இருப்பின் தமிழ் மொழியானது இந்தப் பரந்த பாரத நாட்டில் என்றென்றும் அனைவரின் வாயிலும் ஒலித்துக் கொண்டிருக்கும்."

"தமிழை மனுஷ்ய பாஷை என்றும், வடமொழியை தேவபாஷை என்று சொல்லித்தான் கோவிலில் வடமொழியில் பூசைசெய்கிறார்கள், தேவரே! அதில்தான் சாத்திரங்களையும், தத்துவங்களையும் எழுதுகிறார்கள்! கேரளத்தில் தமிழராகப் பிறந்த நம்பூதிரி வேதியரான சங்கரர் வடமொழியில்தானே வேதங்களில் தத்துவ விளக்கத்தை எழுதினார்!" குந்தவைப் பிராட்டியாரிடமிருந்து ஒரு கணிப்பு புறப்படுகிறது.

"தேவபாஷை, தேவபாஷை என்று வடமொழி பரப்பப்பட்டு வருகிறது. நான் மறுக்கவில்லை. ஆனால் மனிதமொழி என்று தமிழை இளக்காரமாகச் சொல்வதை நாம் நமக்கு ஆதரவாக எளிதில் பயன்படுத்திக்கொள்ள இயலுமம்மா. கடவுளர் இயம்பும் மொழி வடமொழி, அவர்களுக்குச் செய்யும் அருச்சனை வடமொழியில் இருக்கவேண்டும் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டால், மனிதர்கள் பேசவேண்டிய மொழி தமிழ் என்பதால் மாந்தர்கள் அனைவரும் தமிழில்தான் பேசவேண்டும் என்ற வாதத்தை நாம் ஏன் முன்வைக்கக்கூடாது? வேத பாடசாலைகள்போல தமிழ்ப்பள்ளிகள் ஏன் திறக்கப்படக்கூடாது? தமிழில் சாத்திரங்களை எழுதுபவார்க்கு மானியங்கள் ஏன் அளிக்கக்கூடாது?" என்று குந்தவைப்பிராட்டிக்கு பதிலிருத்த கருவூரார் இராஜராஜரை நோக்கினார்.

"அருள்மொழி! நீ ஏன் அமைதியாகிவிட்டாய்? உன் மனதில் எந்தவிதமான கேள்விகளும் பிறக்கவில்லையா?"

"ஐயா! இத்தனை நேரமும் நீங்கள் கொடுத்த விளக்கம் எனக்குள் எழும் கேள்விகளுக்கும் விடை அளித்துக்கொண்டுதான் இருக்கிறது. என் மனம் இந்தக் குழலின் உள்ளே இருக்கும் திருப்பணித் திட்டத்தையே சுற்றிச்சுற்றி வட்டமிடுகிறது. இனிப்பான தின்பண்டம் தன்முன் இருந்தும், அதைத் தின்ன இயலாதவாறு கைகள் கட்டிப்போடப்பட்ட குழந்தையின் நிலையில்தான் நான் இருக்கிறேன்." என்று தன் மனதில் பட்டதை அப்படியே எடுத்துரைக்கிறார் இராஜராஜர்.

"அருள்மொழி! நீங்கள் அனைவரும் இந்தக் கட்டையின் குழந்தைகள். உங்கள் அனைவரையும் வழிநடத்திச் செல்லும்போது எல்லோரையும் ஒன்றாக அழைத்துச்செல்வது எனது தலையாய கடமையல்லவா? அதனால்தான் அனைவரின் மனதில் எழும் ஐயங்களையும் நீக்கவேண்டியுள்ளது. தேவியாரே! உங்கள் மனதில் ஏதாவது…?" என்று சோழமகாதேவியை வினவுகிறார் கருவூரார்.

"தேவர்பெருமானே! நீங்கள் என்ன செய்தாலும் அது இந்தச் சோணாட்டின் நன்மைக்குத்தான் என்று தெரிந்துமா என் மனதில் ஐயம் எழும்? நான் இந்தத் திருப்பணிக்கு ஒரு சாட்சிதான். என் இறைவனைத் தொடர்ந்து பணிபுரிவதுதான் என் தலையாய கடமை!" அடக்கத்திற்கே உருவமான சோழமகாதேவியிடமிருந்து பதில் வருகிறது.

"ஒரு ஆணின் வெற்றிக்குப் பின் இருப்பது ஒரு பெண் என்ற பழமொழிக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டம்மா!" என்று கனிவுடன் சொல்கிறார் கருவூரார்.

அனைவரையும் ஒருமையில் விளித்தாலும், சோழமகாதேவியை மட்டும் பன்மையிலேயே விளிப்பார். ஏனென்று கேட்டால், மகாராணியார் உமையவளின் அம்சம் என்று சொல்லிவிடுவார்.

"அப்படியென்றால் உடனே விஷயத்திற்கு வருவோம். அருள்மொழி! இந்தக் குழலுக்குள் இருக்கும் தங்கச்சுருளில் இருப்பது இந்த ஓலைக் கட்டிலும் எழுதப்பட்டுள்ளது" என்று தன் முன்னால் சாய்வுமேசையில் இருக்கும் ஓலைச்சுவடிக் கட்டை எடுக்கிறார் கருவூரார். சிறிது நேரம் கண்களை மூடி சிவபெருமானை வணங்கிவிட்டு, சிவாச்சாரியிடம் ஓலைச்சுவடிக் கட்டைக் கொடுத்து கண்களால் சைகை செய்கிறார்.

தென்திசையை நோக்கும் நடராஜரின் காலில் வைத்து வணங்கி, அவரிடமே திரும்பக்கொடுத்துவிட்டு, அருகில் அமர்ந்துகொள்கிறான் சிவாச்சாரி.

"மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி. ஆகையால், மன்னர்கள் மக்களை வழிநடத்திச் செல்லவேண்டிய பெரும்பொறுப்பைச் சுமக்கவேண்டும். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் இரண்டுவிதமான எழுத்துக்கள் உள்ளன. ஒன்று நாம் எழுதும் கிரந்த எழுத்து, இரண்டாவது பாண்டியர்களும், சேரர்களும் எழுதும் வட்படழுத்து,30 ஆகத் தமிழ்கூறும் நல்லுலகத்திலேயே இரண்டு விதமான எழுத்துக்கள் நம்மைப் பிரிக்கின்றன. சீனத்தில் பலமொழிகளும் ஒரேவிதமான ஓவிய எழுத்துக்களையே பயன்படுத்துவதால், சீன ஒற்றுமை ஓங்கியிருப்பதாக சீனப்பயணி ஒருவர் விட்டுச்சென்ற ஆதாரம் நமக்குத் தெரிவிக்கிறது. இந்த உண்மை நமக்கு விளக்குவது என்ன? மக்களை இணைக்க எழுத்துகளும் ஒருவழி என்பதுதானே? எனவே, முதல் திருப்பணி தமிழகத்தில் ஒரேவிதமான எழுத்துக்களே புழங்கப்படவேண்டும் என்ற உத்திரவைப் பிறப்பித்து அதை நிறைவேற்றுவதாகும். அருள்மொழி! நீதான் அதைச் செய்யவேண்டும்!" என்ற கருவூரார்க்குத் தலையசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவிக்கிறார் இராஜராஜர்.

——————————————–

[30 பல்லவர்களும் சோழர்களும் எட்டாம் நூற்றாண்டில் தமிழைக் கிரந்த எழுத்துக்களில் எழுதத் தொடங்கினர் (தற்காலத் தமிழெழுத்துகளின் முன்னோடி). இதில் சில வடமொழி எழுத்துகளான, ', , , ,' முதலியவை சேர்க்கப்பட்டன. பாண்டி நாட்டிலும், சேர நாட்டிலும் வட்டெழுத்துக்களே புழக்கத்தில் இருந்தன. — ஐராவதம் மகாதேவன், "Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D." – 2003]

"இன்னொன்று, நாம் மற்ற மன்னர்களுடன் மண உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற போர்கள் தவிர்க்கப்படும். தமிழ் பரப்பப்படும். உதாரணமாக, கீழைச் சாளுக்கியனான விமலாதித்தனுக்கு குந்தவியை மணமுடித்தது ஒரு நல்ல இராஜதந்திரமான செயல். இதனால் சாளுக்கியர்களுடன் போர் தவிர்க்கப்பட்டது" என்று தன்னுடைய திட்டத்தை விளக்க ஆரம்பிக்கிறார் கருவூரார்.

"மதுராந்தகா! நீ என்னைக் கேட்பதற்கு முன்னரே பதிலளிக்கிறேன். எந்த ஒரு மொழியும் தாய்மூலமாகவே சிசுவிற்குச் செல்கிறது. எனவே பேசும்மொழியைத் தாய்மொழி என ஆன்றோர் அழைக்கிறார்கள். இருப்பினும், தாயின் செல்வாக்கு குறையும்பொழுதோ, மற்றமொழியினர் இடையில் வளர்ந்தாலோ, தாய்மொழியைப் பேசும் பழக்கம் குறைந்து, பேசிவரும் மற்றமொழி கட்டாயத்தால் தன்மொழியாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்குத் தலையாய காரணம் தாயின் கவனக்குறைவு என்றே சொல்லலாம். அது பலவிதத்தால் ஏற்படலாம். உன் தங்கை குந்தவிக்கு அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டதால்தான் நரேந்திரன் தெலுங்கில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டான். குந்தவியுடன் தமிழ்பேசும் தாதியரையும் செவிலியர் பலரையும் அனுப்பித் தமிழ்கற்பிக்க தமிழ் ஆசிரியரையும் அனுப்பியிருந்தால் இந்நிலைமை வந்திருக்காது. ஆகவே, நரேந்திரனின் சந்ததிகள் தமிழில் பற்றுவைக்கும்படியான சூழ்நிலையை நாம் உருவாக்கவேண்டும்!" என்று பொருட்செறிந்த பார்வையுடன் இராஜேந்திரனை நோக்குகிறார் கருவூரார்.

"தேவரே, நான் என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?"

"மதுராந்தகா! அம்மங்கை உன்னைப்போல் மிகவும் உறுதியான மனம்படைத்தவள். அவளுக்கு தமிழ்ப்பற்றை வளர்த்து, அவளை நரேந்திரனுக்கு மணமுடித்து, வேங்கை நாட்டின் வருங்காலப் பட்டத்துராணி ஆக்கு. அது மட்டுமின்றி, அவளுடன் நிறையத் தமிழ் ஆசிரியர்களை அனுப்பு. அவளது சந்ததிகள், உன்னுடைய பேரன் பேத்திகள், தமிழையே தம் தாய்மொழியாக வரிக்கும்படி செய்யவேண்டியது உன் பொறுப்பு" கருவூரார் அன்புக் கட்டளையிடுகிறார்.

"அது நடக்கும் என்று உறுதியளிக்கிறேனய்யா!" என்று தன் சம்மதத்தைத் தெரிவிக்கிறான் இராஜேந்திரன்.

"நமது அரசகுமாரிகளைச் சேரர், பாண்டியர்களுக்கு மணமுடித்து அவர்களையும் நம் உறவாக்கிக் கொள்ளவேண்டும். இது தமிழகத்தில் உள்நாட்டுப் போரைத் தவிர்க்கும். அவர்களும்…"

அவர் மேலே தொடர்வதற்குள், "தேவரே! என் பெரிய தகப்பனைக் குரூரமான முறையில் கொன்ற பாண்டியப் பதர்ளுடன் மண உறவா? நீங்கள் என்ன சொன்னாலும் நான் அமைதி காப்பேனா என்று என்னை விளையாட்டாகச் சோதிக்கும் முறையா இது?" இராஜேந்திரன் தன்னுடைய ஆத்திரத்தை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு சொல்லையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லித் தன் விருப்பமின்மையைத் தெரிவிக்கிறான்.

"நானும் இதில் என் மகன் பக்கம்தான் ஐயா!" என்று இராஜராஜர் கூறியது, இராஜேந்திரனுக்கு வியப்பை அளிக்கிறது. தன் கருத்தை அப்படியே அவர் ஒப்புக்கொள்வது இதுதான் முதல்முறையாகும். அவரிடம் மதிப்பு பெருகுகிறது.

"அருள்மொழி, மதுராந்தகா! உங்களிடமிருந்து இப்படிப்பட்ட குறுக்கீடு வரும் என்று தெரிந்தேதான் இதைச் சொல்லவேண்டியிருந்தது. காழிப் பிள்ளையாரான திருஞானசம்பந்தர் தனது ஆலவாய்ப் பதிகத்தில்,

'மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை
வரிவளர்க் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாயாவதும் இதுவே!'

என்று இயம்பியுள்ளாரே! பாண்டிநாடே சமணர்கள் பிடியில் சிக்கிச் சைவம் தவியாய்த் தவித்தபோது ஆளுடைய பிள்ளையாரை மதுரைக்கு வரவழைத்து, சைவத்தைத் தழைக்கச்செய்த செல்வியான மங்கையர்க்கரசி சோழநாட்டு இளவரசி என்பதை என்ன அருமையாக வளவர்கோன் பாவை என்றதோடு மட்டுமல்லாமல், பாண்டிமாதேவி என்றும் அழைத்திருக்கிறாரே! சிவபெருமானையும், உமையவளையும் தவிர யாரையும் பாடாத தமிழ்ஞான முனிவர் மனிதப் பிறவிகளான மங்கையர்கரசியாரையும், அவரது அமைச்சர் குலச்சிறையையும் பற்றி ஒரு பதிகமே பாடியுள்ளார் என்றால் அவர்கள் மீது அவர் எந்த அளவுக்கு மதிப்பு வைத்திருக்கவேண்டும்! பாண்டிநாட்டை சமணர்கள் வசமிருந்து ஒரு சோழநாட்டு இளவரசிதானே மீட்டாள்? அப்படியிருக்க தமிழை வளர்க்கச் சோழ இளவரசிகளால் இயலாது என்றா நினைக்க வேண்டும்?

"தவிர, பாண்டியர்கள் யார்? சங்கம் மூன்று அமைத்துத் தமிழை வளர்த்தவர்கள். களப்பிரர்கள் கையில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டில் பாதியை மீட்டுத் தந்தவர்கள் அல்லவா? அதுமட்டுமா? மதுரைப் பாண்டிய இளவரசியான அங்கயற்கண்ணியை சொக்கநாதரான சிவபெருமான் மணந்து பாண்டியநாட்டையே சீதனமாகப் பெறவில்லையா? அவரை வணங்கும் நாம், பாண்டியருடன் ஏன் பகைமை பாராட்ட வேண்டும்?

"இப்பொழுது இருக்கும் மனநிலையில் இந்தக் கட்டையின் கூச்சல் உங்கள் மனதில் பதிவது எளிதில்லைதான். இதை மேற்கொண்டு வளர்த்து உங்கள் கருத்தைத் தடிகொண்டு கனியவைக்க இந்தக் கட்டை விரும்பவில்லை. வேறு திட்டங்களுக்குச் செல்வோம்.

"தமிழ்ப் பள்ளிகள் ஊர்கள்தோறும் திறக்கவேண்டும். முதலில் சேரநாட்டிற்கும், பின்னர் சாளுக்கிய நாட்டிற்கும் தமிழ் ஆசிரியர்களை அனுப்பி குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத்தர ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் அறிந்தால் மட்டுமே அரசில் பணி கிடைக்கும் என்று அறிவிக்க வேண்டும். இந்த சட்டத்தைச் சோழப்பேரரசின் தலைசிறந்த சட்டமாக்கவேண்டும். தவிர வைணவர்களிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. வைணவக் கோவில்களில் வடமொழியில் பூசைகள் நடந்தாலும், தமிழ்ப் பிரபந்தங்களைப் பட்டாச்சாரியர்களே ஓதுகிறார்கள். சாற்றுமுறை என்று அதை மதிக்கிறார்கள். ஆக, தமிழ் திருமாலுக்கு கருவறையில் அர்ப்பணமாகிறது. அப்படியிருக்க, சிவன்கோவில்களில் நாம் தமிழை கருவறைக்கு வெளியில் அனுப்பிவிட்டோம். ஓதுவார்கள் கருவறைக்கு வெளியில் நின்று தமிழ் வேதமாம் தேவாரத்தை ஓதத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவும், நீ ஆணையிட்ட பின்னர். இது ஏன்? சிவாச்சாரியர்களே ஏன் தேவாரத்தை ஓதக்கூடாது? திருமால் ஏற்றுக்கொள்ளும் தமிழைத் தென்னாடு மற்றுமின்றி என்னாட்டவர்க்கும் இறைவனான முக்கண்ணன் ஏற்கமாட்டாரா? யோசித்துப் பாருங்கள்."

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டுக் கருவூர்த்தேவர் மீண்டும் பேசத் துவங்குகிறார்.

"இதுவரை கருநாட்டார் மூலமாகத்தான் நமக்கு நிறைய இடையூறு வந்திருக்கிறது. காவிரியின் போக்கை அடைக்க முற்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு எதிரிகளாக இருந்து வருகிறார்கள். அவர்களை இப்பொழுது சோழநாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கிறீர்கள். அவர்களைத் தமிழை ஏற்றுக்கொள்ளும்படி செய்தால் கருநாடும் தமிழ்நாடாகும் அல்லவா? உன் பேரரசில் அமைதி பரவுமே!

"இதற்காக உடனே தமிழ் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் பயிற்சி பெற வேண்டும். சாளுக்கிய நாட்டிற்கும், கருநாட்டிற்கும் நிறையப்பேர் அனுப்பப்பட வேண்டும். தமிழ் கற்றுக்கொள்வோருக்கு மானியம், வரிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும். இதைக் கண்காணிக்க உங்களுக்கு நம்பகமான ஒற்றர்கள், அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமிழ்க்கல்வி கட்டாயம் என்று அறிவிக்கப்பட வேண்டும். சோழப்பேரரசின் அரசுமொழியாகத் தமிழ் ஆக்கப்பட வேண்டும். வடமொழியில் உங்களுக்குத் திருமுகம் வருவதை நிறுத்த வேண்டும்…"

ஓலைச் சுவடிகளில் தாம் எழுதியிருந்த திட்டத்தை விவரித்துச்சொல்கிறார் கருவூரார்.

இராஜராஜருக்கே அவரது திட்டங்களை முழுவதும் நிறைவேற்றச் சற்று மலைப்பாக இருக்கிறது.

"ஐயா! சாளுக்கியர்களையும், கருநாட்டவரையும், அவர்கள் மொழியை விட்டுவிடச் சொல்லுவது எப்படி? இது உள்நாட்டுக் குழப்பத்தையும், கலவரத்தையும் விளைவிக்காதா? வாளெடுத்து எதிரிகளை வீழ்த்த வேண்டிய நமது வீரர்கள் உள்நாட்டுக் குழப்பத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்டால் மக்களுக்கு அரசுமீது வெறுப்பு வளராதா? ஆகவே, சற்று விளக்கமாகச் சொல்லுங்கள். மாற்றார் படைகளை வீழ்த்துவதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆயினும் மக்களைச் சர்வாதிகாரியாக அடக்கிவைப்பது பற்றித்தான்…" மேலே பேசாமல் நிறுத்துகிறார், இராஜராஜர்.

"அருள்மொழி, உன் மனத்தயக்கம் எனக்கு நன்றாகப் புரிகிறது. நான் நாற்பது ஆண்டுகள் கேட்டதை நினைவில் நிறுத்துவாயாக. வயதுக்கு வந்தவர்களை விட்டுவிடு. உன் மருமகன் விமலாதித்தன் என்ன செய்கிறான் என்பதை நினைவுக்குக் கொண்டுவா. தமிழ்நாட்டின் தலைவன் நீ! உனது பேரனைத் தெலுங்கனாக அவன் மாற்றியிருப்பதைக் கவனித்தாயா? அவன் குந்தவியைத் தெலுங்கில் உரையாடும்படி வற்புறுத்தவில்லை. அப்படிச் செய்திருந்தால் சாளுக்கிய அரண்மனையில் பெருங்குழப்பம் விளைந்திருக்கும். அதற்குப் பதிலாக பால்மணம் மாறாத பாலகனுக்கு வடமொழிக் கல்வியும், தெலுங்குக் கல்வியும் கற்பிக்க ஏற்பாடு செய்தான். அதன் பலன் – தாய் தமிழில் பேசினாலும், தனயன் வேற்றுமொழியில் பேசுகிறான். எனவே, விமலாதித்தனின் திட்டத்தை மேற்கொண்டு, தமிழைப் பரப்புவதில் என்ன பிழை இருக்கிறது?

"தமிழ்க் கல்வியைச் சிறார்களுக்குத்தான் கற்பிக்கவேண்டும். பேரரசின் மொழி, இதை அனைத்துச் சிறுவரும் கற்றுக்கொள்ள வேண்டும், அப்படிக் கற்றுக்கொண்டால் சன்மானம் உண்டு என்று ஆணையிடு. தானாகத் திருப்பணி கனிந்துவிடும். போர்வீரன் என்ற கண்ணோட்டத்தை விட்டு, தந்தையின் கண்ணோட்டத்துடன் இந்தத் திட்டத்தை அணுகுவாயாக. இன்னும் ஏதேனும் ஐயங்கள் இருந்தாலும் கேட்டுத் தெளிவு பெறுவாயாக." என்று மிகவும் பொறுமையுடனும், கனிந்த குரலிலும் விளக்குகிறார், கருவூரார்.

அவர் பேசப்பேச, மகுடியில் கட்டுண்ட நாகங்கள்போல அனைவரும் அவர் வசமாகிறார்கள். அனைவருக்கும் அவர் விளக்கும் தமிழ்த்திருப்பணித் திட்டத்தில் ஆர்வம் பிறக்கிறது.

"இன்னும் தலையாய நிபந்தனை ஒன்று இருக்கிறது. இத்திட்டம் செயல்படுகிறதா என்று கண்காணிக்கவும் உங்களுக்கு ஆலோசனை சொல்லவும் ஒருவர் தேவை. இப்பொழுது அந்தப் பணிக்கு யாரை நியமிப்பது என்று உங்களுக்கு கருத்துக்குத் தோன்றுகிறதா?" என்று இராஜராஜரையும், இராஜேந்திரனையும் பொதுவாகக் கேட்கிறார் கருவூரார்.

சிறிது நேரம் யாருமே அங்கு ஒன்றும் பேசவில்லை.

"இது மிகவும் பொறுப்புள்ள பதவியாயிற்றே! அந்த ஆலோசகருக்கு எவ்வளவு தூரம் அதிகாரம் தரவேண்டும் ஐயா?" என்று கேட்கிறார் இராஜராஜர்.

"அது உங்களைப் பொறுத்தது அருள்மொழி. அதை இனிமேல்தான் தங்கச் சுருளில் பதிவுசெய்ய வேண்டும் திருப்பணிக் குழலையும், தங்கச்சுருளையும், ஆலோசகர் தன் உயிருக்கும் மேலாகக் காத்து வரவேண்டும். திருப்பணியின் நிறைவேறுதலை ஆண்டுதோறும் பதிவுசெய்து, உங்கள் இலச்சினை அதில் பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கு விருப்பமில்லாது போனாலும், விடாது திருப்பணியை நினைவுபடுத்த வேண்டும். அவர் சொல்லும் சொற்களால் உங்களுக்கு எரிச்சல் வந்தாலும் அதையும் தாங்கிக் கொள்ள வேண்டும்."

"தேவரே! கடைசி முடிவை யார் எடுப்பது?" இராஜேந்திரனிடமிருந்து கேள்வி பிறக்கிறது.

"அரசன்தான்!" என்று பளிச்சென்று பதில்சொல்கிறார் கருவூரார்.

"சிவாச்சாரியரை நியமித்தால் நல்லது என்று ஆலோசனை கூறுகிறேன்." தயக்கமில்லாமல் அறிவிக்கிறான் இராஜேந்திரன்.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com