பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 6

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 6

ஒரு அரிசோனன்

வேங்கைநாடு

விரோதிகிருது, கார்த்திகை 22 – டிசம்பர் 7, 1011

ங், ங், ங் என்று ஒலித்தவாறு இராஜேந்திரனுடைய யானையின் இருபுறமும் மணிகள் ஆடி அசைகின்றன.  வேங்கை நாட்டின் தலைநகரை அடைய இன்னும் பத்து காதங்களே உள்ளன.

கிட்டத்தட்டத் தொள்ளாயிரம் காதங்கள்32 பயணித்து வந்த களைப்பு இராஜேந்திரனின் முகத்தில் சிறிதும் தென்படவில்லை.  மாறாக, தங்கை குந்தவியையும், மருமகன் இராஜராஜ நரேந்திரனையும் விரைவிலேயே சந்திக்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும்தான் அவன் முகத்தில் தெரிகின்றது.

அவனது யானைக்கு முன் குதிரை வீரர்கள் மெதுவாக அணிவகுத்துச் செல்கிறார்கள்.  அவர்களுக்கு முன்னே தாரை, தப்பட்டை இவற்றை முழங்கியவாறு காலாட் படையினர் பெருமிதத்துடன் நடக்கின்றனர். தங்குவதற்கு கூடாரம் அமைத்து மற்ற வசதிகள் செய்து கொடுப்பதற்காக இவர்களுக்கு ஒருநாள் முன்னதாகவே, நூற்றுக்கணக்கில் மாட்டு வண்டிகளும், அவற்றுக்குப் பாதுகாப்பாகவும் துணையாகவும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களும் வேங்கை நாட்டுத் தலைநகருக்கு வெளியில் முகாமிட்டு இருக்கின்றனர். அவர்கள் தற்பொழுது வேங்கை நாட்டுக்குப் பாதுகாப்பாக இருக்கும் சோழநாட்டு வீரர்களுக்கு நிவாரணமாகச் சென்றிருக்கின்றனர்.

எனவே, இவர்களைக் கண்டதும், வீடு திரும்புவோம் என்ற மகிழ்வுடன் அங்கிருக்கும் வீரர்கள் புதிதாக வந்திருப்பவர்களுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துத் தங்கள் வேங்கை நாட்டு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

இராஜேந்திரனின் யானையை முப்பது யானைகள் தொடர்கின்றன.  குதிரை வீரர் ஆயிரம் பேரும், காலாட்கள் நாலாயிரமும் தொடர்ந்து வருகின்றனர். இதுபோக, வில்லாளர்கள், சமைத்துப்போட தவசுப்பிள்ளைகள், அவர்களது உதவியாளர்கள், மளிகைச் சாமான்களை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டிகள், அடித்துச் சாப்பிட நூற்றுக்கணக்கான ஆடுகள், கூடைகள் நிறையக் கோழிகள், பால் கொடுக்கும் பசுக்கள், உற்சாகமாகப் பொழுது கழியும்படி உற்சாகப்படுத்த ஆடற்கலையில் வல்லவர்கள், கூத்தர்கள், கோமாளிகள், விரலியர்கள் என நூற்றுக்கணக்கானவர் – ஒரு சிறிய பட்டணமே வேங்கை நாட்டுக்கு அணிதிரண்டுச் செல்கிறது.

இருபதாவது யானை மீது மிகவும் அழகாக, நன்கு அலங்கரிக்கப்பட்ட அம்பாரி ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அது மெல்லிய திரைகளால் மூடப்பட்டிருக்கிறது. அதனுள்ளே மூன்று பெண்கள் அமர்ந்துள்ளனர். 

இராஜேந்திரனின் மூத்த மனைவி திரிபுவனமாதேவி தனியாக ஓர் இருக்கையில் அமர்ந்திருக்கிறாள். அவளுக்கு எதிரான இருக்கையில் அவளது மகள் அம்மங்கை மிகவும் அழகான ஒரு பெண்ணின் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

—————————-

[32 ஒரு காதம் என்பது கிட்டத்தட்ட 1.17 கிலோ மீட்டர் (0.73 மைல்) தொலைவு ஆகும்.]

கருப்பாக இருந்தாலும், அப்பெண்ணின் முகம் நிலவு போல வட்டமாகவும், குறுகுறுவென்று மிகவும் களையாகவும் இருக்கிறது.  வெள்ளை வெளேரென்ற பற்கள் அவள் சிரிக்கும்பொழுது ஒளிருகின்றன. கொஞ்சம் தடித்த உதடுகள் அவளுக்கு அழகாகவே உள்ளது. கருகருவென்று சுருள்சுருளாக வளர்ந்த கூந்தலைத் தூக்கி இடதுபக்கம் கொண்டையாக முடிந்திருக்கிறாள். மார்புக் கச்சையும், வழக்கமான கீழாடையும் அணிந்திருக்கிறாளே தவிர, அதிக அணிகலன்கள் இல்லையாதலால், பதினைந்து வயதான அவள் ஒரு பணிப்பெண் என்று தோன்றுகிறது. ஒரு நாழிகை33 முன்னர்தான், "நிலவுமொழி, எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது.  உன்மீது கொஞ்சம் சாய்ந்துகொள்கிறேன்" என்று உடலைக் குறுக்கிக்கொண்டு அவள் தோளில் தலையை வைத்துச் சாய்ந்துள்ளாள் அம்மங்கை.

அவர்கள் தஞ்சையிலிருந்து கிளம்பிக் கிட்டத்தட்ட இரண்டு திங்கள்கள்34 ஆகின்றன.  காஞ்சியில் நான்கு நாள்களும், நடுவில் கிருஷ்ணா நதியைக் கடப்தற்கு முன் ஓரிரு நாள் ஓய்வெடுத்துக் கொண்டது தவிர மற்ற நாட்களெல்லாம் பயணம்தான். 

கிருஷ்ணா ஆற்றின் அகலத்தைக் கண்ட அம்மங்கை வியந்துபோனாள். அவளுக்குத் தெரிந்தவரை காவிரிதான் பெரிய ஆறு. அதைவிட மிகவும் அகலமான கிருஷ்ணாவில் கரைபுரண்டு சென்ற நீரின் அளவு, அதைப் படகில் கடக்கும்போது அச்சத்தை வரவழைத்தது.

இரவு ஏதாவது சத்திரம், அதுவும் கிடைக்காவிட்டால் கூடாரத்தில் கட்டிலில்தான் படுக்கை.

தந்தை இராஜேந்திரன் இருபதே நாட்களில் குதிரையில் வேங்கை நாட்டை அடைந்து விடுவார் என்று அறிந்தபோது அம்மங்கையால் அதை நம்பவே முடியவில்லை. யானை மேல் சுகமாக சவாரி செய்வதே தனக்கு அசதியாக இருக்கும்பொழுது, இருபது நாட்கள் தொடர்ந்து எப்படித்தான் குதிரையில் சவாரி செய்ய இயலுமோ என வியந்தாள்.

இந்தப் பயணத்திலேயே, நடுநடுவில் தனது தந்தை யானையை விட்டு இறங்கி, குதிரையில் முன்னே சென்றுவிட்டு, இரண்டு மூன்று நாட்கள் கழித்துத் தங்களுடன் மீண்டும் சேர்ந்துகொள்வதையும் கவனித்திருக்கிறாள்.

எத்தனையோ அரசு அலுவல் இருக்கக்கூடும். அதற்காகச் செல்லவேண்டிய தேவை இருந்திருக்கும் என்று நினைத்துக்கொள்வாள். அப்படிச் சென்றபொழுதெல்லாம் தங்களுக்கு பலத்த துணைகள் இருப்பதையும் கவனித்திருக்கிறாள்.

யானை ஒரு குலுக்கலுடன் நிற்கிறது. திடுக்கிட்டு எழுந்துகொள்கிறாள் அம்மங்கை. 

"என்ன ஆயிற்று?" என்று கேட்டவுடன், திரையைத் திறந்து விசாரிக்கிறாள், நிலவுமொழி.

 "இன்றைய பயணம் முடிந்துவிட்டது. நாளைதான் நகருக்குள் நுழையவேண்டும்" என்று பதில் கிடைக்கிறது.

———————————–

[33 ஒரு நாழிகை என்பது இருபத்தி நான்கு நிமிடங்களைக் குறிக்கும் கால அளவு.

34 பண்டைத் தமிழ்நாட்டில் மாதங்களைத் திங்கள் என்று சொல்வது வழக்கு.]

ஒரு குலுக்கலுடன் யானை அமர்ந்துகொள்கிறது.

தனது பிரியமான கருப்புக் குதிரையின் மீது அமர்ந்து அங்கு வருகிறான் இராஜேந்திரன். அவனுடன் பத்துப் பதினைந்து குதிரை வீரர்களும் வருகிறார்கள். 

யானையின் அருகில் நின்று இரு கைகளையும் நீட்டுகிறான். அம்மங்கை அப்படியே அவனது கரங்களில் தாவிக் குதிக்கிறாள்.

அவளைத் தாங்கிப் பிடித்த இராஜேந்திரன், அவளைக் கீழே இறக்கிவிட்டு, அதன் பின்னர் திரிபுவனமாதேவியை கைலாகு கொடுத்து இறக்கிவிடுகிறான்.  மாவுத்தன் நிலவுமொழியை இறக்கிவிடுகிறான். 

"இன்று நகரத்திற்குச் செல்லப் போவதில்லையாமே?" என்று வினவுகிறாள் திரிபுவனமாதேவி.

"ஆமாம். இன்று நேரம் சரியில்லையாம். அதனால், அருகிலிருக்கும் ஓடைக்கரையில் கூடாரமடித்துத் தங்க ஏற்பாடு செய்திருக்கிறது. காலை எழுந்து நீராடிவிட்டு நகரத்திற்குச் செல்லலாம்" என்று அறிவிக்கிறான் இராஜேந்திரன்.

"அதுதான் சரி, தந்தையே. காலையில் நீராடிவிட்டுச் சென்றால் உற்சாகமாகவும், தெம்பாகவும் இருக்கும்.  இன்று முழுவதும் யானைப் பயணம் குலுக்கிக் குலுக்கி எடுத்துவிட்டதால், இன்னும் உடம்பு பயணிப்பதுபோல ஆடிக்கொண்டே இருக்கிறது" என்று உடலை நெளித்தவாறு பதிலளிக்கிறாள் அம்மங்கை.

 "அம்மங்கை, இது என்ன கெட்ட பழக்கம்! அனைவரின் முன்னர் உடலை நெளிப்பாயா? அரசகுமாரி மாதிரி நடந்துகொள்!" என்று மெல்லிய குரலில் மகளைக் கண்டிக்கிறாள் திரிபுவனமாதேவி. 

"ஒன்பது வயதுதானே ஆகிறது ராணி இவளுக்கு! அதற்குள்ளேயே ஏன் இப்படிக் கண்டிக்கிறாய்?" என்று சலுகையுடன் மகள் பக்கம் பேசுகிறான் இராஜேந்திரன்.

"இது அந்தப்புரம் அல்ல அரசே! அதுவும் வெளிநாடு! இந்நாட்டு மக்களைப் பொறுத்தவரை இவள் ஒன்பது வயதே ஆன சின்னப்பெண் அல்ல, சோழநாட்டு இளவரசி!  அந்தப் பொறுப்பு உணர்வு அவள் இரத்தத்தில் எப்பொழுதும் ஓடவேண்டும் என்றுதான் உணர்த்துகிறேன். யானை மீதிலிருந்து குரங்கு மாதிரி தாவிக் குதிப்பதும், மற்றவர்கள் முன்னர் உடலை நெளிப்பதும் அரசகுமாரிக்கு அழகே அல்ல.  நாளை உங்கள் மைத்துனரின் பட்டாபிஷேகத்தில் இப்படி நடந்துகொண்டால், உங்கள் தங்கையார் நான்தான் இவளைச் சரியாக வளர்க்கவில்லை என்று குறைப்பட்டுக் கொள்வார்கள்!" என்று அவன் காதில் மட்டுமே விழும் அளவுக்கு மெதுவான குரலில் பதிலளிக்கிறாள் திரிபுவனமாதேவி.

"புரிகிறது தேவி, புரிகிறது" என்ற இராஜேந்திரன், "இன்று இரவுச் சாப்பாட்டின்போது விரலியர் பாட்டும், கூத்தும் நிகழ்த்தப்போகிறார்கள். நாம் அதைக் கண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தண்டநாயகர்களும், மற்றவர்களும் விரும்புகிறார்கள். ஆகவே, இளைப்பாறியவுடன் நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்குப் புறப்பட்டுச் செல்வோம்!" என்று அறிவிக்கிறான்.

பிறகு நிலவுமொழியைச் சுட்டிக்காட்டி, "யாரிந்தப் பெண், புதிதாக இருக்கிறாள்?  இவளைப் பார்க்கும் ஒரோர் முறையும் கேட்கவேண்டும் என நினைத்தும், கேட்க ஒழியாதுபோகிறது" என்று வினவுகிறான்.

 "இவள் பெயர், நிலவுமொழி. தங்கள் தங்கையாருக்குத் துணையாகவும், வேங்கைநாட்டு அரண்மனைப் பணிப்பெண்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கவும் தங்கள் தந்தையார் உங்கள் நண்பரான சிவாச்சாரியரின் ஆலோசனைப்படி அனுப்பி வைத்திருக்கிறார்" என்று திரிபுவன மாதேவியிடமிருந்து பதில் வருகிறது.  

"பொருத்தமான பெயர், முகத்தைப் பொறுத்தவரை!" என்று சிரித்த இராஜேந்திரன், "இப்பெண்ணுக்கு அதிக வயதாகவில்லை. இவளா தமிழ் சொல்லிக்கொடுக்கப் போகிறாள்?" என்று நினைத்துக்கொண்டே நிலவுமொழியின் பக்கம் திரும்புகிறான். 

"கோப்பரகேசரி அரசருக்கு இந்த அடிமையின் வணக்கங்கள்!" என்று அவன் முன் மண்டியிட்டு வணங்குகிறாள் நிலவுமொழி. 

பெயருக்கேற்றபடி அவளது குரலும் மிகவும் தன்மையாக இருக்கிறது. அவளைச் சில கணங்கள் அளவிடுகிறான் இராஜேந்திரன். 

"எழுந்துகொள் பெண்ணே! எமது நண்பர் சிவாச்சாரியார் உன்னை அனுப்பியதாகக் கேள்விப்பட்டோம். அதுபற்றி முழு விவரமும் தெரிந்துகொள்ள யாம் விரும்புகிறோம்!" என்று கனிவுடன் கேட்கிறான்.

பணியாளர்களிடம் பேசும்போதோ அல்லது உத்திரவிடும்போதோ இராஜராஜர் மாதிரி அவனும் பன்மையில் பேசுவது வழக்கம். 

"அரசே! காஞ்சிக்குக் கிழக்கே கடலருகில் உள்ள திருமயிலை கபாலீஸ்வரர் கோவில் ஓதுவாராகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றிவரும் பொன்னம்பல ஓதுவார் அவர்களின் மகள் நான். என் தந்தையார் எனக்குத் தமிழ் இலக்கணம் நன்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். இது தவிர, தேவாரத் திருப்பதிகங்களும் பயிற்பித்திருக்கிறார். என் தந்தைக்கு உதவியாக அங்கு சிறார்களுக்குத் தமிழ்க்கல்வி அளித்து வருகிறேன்.

"நான்கு திங்கள் முன்னர் திரிபுவனச் சக்கரவர்த்திகளின் தமிழ்த்திருப்பணி ஆலோசகரான சிவாச்சாரியார், காஞ்சி வந்து, கபாலீஸ்வர்ரை தரிசிக்க திருமயிலைக்கும் வந்தார். என் தந்தையார் அவரது நண்பராதலால் அப்பொழுது எங்கள் வீட்டிற்கும் வருகை தந்தார். அச்சமயம் நான் சிறார்களுக்கு தமிழ்ப்பாடம் கற்பித்துக் கொண்டிருந்தேன். அதையே உற்றுக் கவனித்த அவர், என் தந்தையாரிடம் வேங்கை நாட்டு அரசியரான தங்கள் தங்கையாருக்குப் பேச்சுத்துணையாகவும், அங்கு இருக்கும் அரண்மனைப் பணிப்பெண்களுக்கு தமிழ் கற்றுத்தரவும் என்னை அனுப்புமாறு பணிப்பித்தார்.

"மேலும், அரச இலச்சினை மோதிரத்தைக் காண்பித்து, அவர் சொன்னதை சோழச் சக்கரவர்த்தி அவர்களின் கட்டளையாகவும் ஏற்றுக்கொள்ளுமாறு இயம்பினார்.  என்னைப் பற்றிய கவலை என் தந்தைக்கு இனிமேலும் இருக்காது என்றும், என்னைப் பற்றிய விவரங்கள் ஒவ்வொரு திங்களும் அவருக்கு அனுப்பப்படும் என்றும் உறுதி அளிக்கவே, அன்று மாலையே என் தந்தையாரின் மனமார்ந்த அனுமதியுடன் நான் சிவாச்சாரியாருடன் பத்து நாட்களில் தஞ்சையை அடைந்தேன்.

"என்னை இரண்டு திங்கள் அரண்மனை அந்தப்புர அலுவல்களைக் கற்று அறிந்துகொள்ளுமாறு பணிப்பித்தார். சிவாச்சாரியார் திரிபுவனச் சக்கரவர்த்திக்கு என்னை அறிமுகம் செய்துவைத்து, வேங்கை நாட்டில் நான் செய்யப்போகும் பணியையும் சக்கரவர்த்திக்கு எடுத்து இயம்பவே, அவரும் அரை நாழிகை என்னுடன் உரையாடிய பின்னர் என்னைக் கனிவுடன் தன் பேத்தி என்றும் இயம்பி, இந்த ஏழைப்பெண்ணின் வாழ்வை சீர்மல்குமாய்ச் செய்துவிட்டார்கள். அது மட்டுமல்லாமல் மூன்று முறை என்னை அழைத்து நான் வேங்கை நாட்டில் செய்யப்போகும் தமிழ்ப்பணி பற்றி நிறைய அறிவுரைகளும் வழங்கினார்கள்."

சில கணம் தன் நல்வினையை மனதுள் எண்ணி உருகிய அவள், மீண்டும், "நான்கு திங்களுக்கு முன் காஞ்சியைக்கூடச் சென்று பார்த்திராத இந்த ஏழைப் பெண்ணுக்கு இப்படிப்பட்ட நல்வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணிக்கூட பார்க்க இயலவில்லை, அரசே!  தரணியே வணங்கி ஒருகணம் கண்ணுற மாட்டோமா என்று ஏங்கும் திரிபுவனச் சக்ரவர்த்தியாரே….!  மற்ற மன்னர்களுக்கு முன் சிங்கமாக விளங்கும் தங்களுடன் இப்பொழுது நான் பேசுவதுகூட கனவா நனவா என்று எனக்கு இன்னும் விளக்கமாகவில்லை!"

பேசும்போது, அவள் கண்களில் பெருகிய நீர் அவளது கண் மையைக் கரைத்துக் கன்னங்களில் கருங்கோடுகளிட்டது.

"குழந்தாய்!  ஒரே நாளில் நீ உன் வீட்டைப் பிரிந்து தமிழ்ப் பணிக்காக வந்தது குறித்து யாம் மிகவும் மகிழ்கின்றோம். பேத்தி என்று சக்கரவர்த்தி அவர்களால் அழைக்கப்பட்ட நீ மிகவும் கொடுத்து வைத்திருக்கிறாய். அதனால் நீ எமது சோழக்குடும்பத்தில் ஒருத்தி ஆகிவிட்டாய். எமது தந்தைக்குப் பேத்தி என்றால் எமக்கும் மகாராணிக்கும் நீ மகளாகிறாய்! அம்மங்கை உன் தங்கை! நீ இனிமேல் பணிப்பெண் உடையணிவதில் எமக்கு விருப்பமில்லை! தேவி, எம் விருப்பத்தை
நீ நிறைவேற்ற வேண்டும்" என்று இராஜேந்திரன் கண்ஜாடை காட்டவே, திரிபுவனமாதேவி தன் கழுத்தில் இருந்த இரத்தினங்கள் பதித்த பொன்மாலை ஒன்றைக் கழட்டி, நிலவுமொழியின் கழுத்தில் அணிவிக்கிறாள்.

நிலவுமொழிக்கு உடல் சிலிர்க்கிறது.

சோழ நாட்டில் அனைவரும் இராஜேந்திரனின் முன்நின்று பேசவும் அஞ்சுவர்.  அதைப் பற்றிக் கேள்விப்பட்டதால் அவள் மனதில் இராஜேந்திரனைப் பற்றி ஒரு அச்சங்கலந்த மரியாதையே இருந்துவந்தது. அவன் முதலில் தன்னுடன் பேசிய தோரணையில் அது அதிகமாகியது. ஆனால் தன் பதிலைக் கேட்டு அவன் காட்டிய பரிவு, அச்சத்தை நீக்கி நன்றியில் திக்குமுக்காடச் செய்கிறது.

அருகில் நின்ற கணக்கரை விளித்த இராஜேந்திரன், "ஆமாத்தியரே, இப்பெண்ணின் தந்தையார் பொன்னம்பல ஓதுவார் காஞ்சிக்கடுத்த திருமயிலைக் கோவிலில் ஓதுவாராகப் பணிபுரிகிறாராம்.  அவருக்கு நமது அன்பளிப்பாக நூறு காணி35 நன்செய் நிலம் அளிக்க யாம் விரும்புவதாக நமது நண்பர் சிவாச்சாரியாருக்கு ஓலை அனுப்பும்.  இரவு நான் உணவு கொள்வதற்கு முன் ஓலை எழுதப்பட்டு எமது இலச்சினை அதில் இடப்பட்டுவிட வேண்டும்.  தஞ்சை திரும்பும் முதல் குதிரை வீரன் மூலம் இச்செய்தி சிவாச்சாரியாருக்குச் செல்லவேண்டும்" என்று ஆணையிடுகிறான்.

இதைக்கேட்ட நிலவுமொழியின் தலை சுழல்கிறது. நூறு காணி நன்செய் நிலமா? அப்படி ஒரு அன்பளிப்புப் பெற நாம் என்ன செய்துவிட்டோம்! இதுதவிர, விலை மதிக்க முடியாத பொன்மணி மாலையை மகாராணியார் கழட்டி நம் கழுத்தில் போட்டிருக்கிறாரே! மேலும் கோப்பரகேசரியான இராஜேந்திரரே தன்னைத் தன் மகள் என்று இத்தனைபேர் முன்னர் சொல்லிவிட்டாரே!

நிலவுமொழி நிலவுக்கே மிதந்து சென்று கொண்டிருக்கிறாள். அவள் தலையை அன்புடன் வருடிக்கொடுத்த இராஜேந்திரன், "ஆமாத்தியரே, இப்பெண்ணுக்கு நல்ல ஆடைகள் உடனே வேண்டும் அதையும் நிறைவேற்றுவீராக!" என்று அடுத்த ஆணையைப் பிறப்பிக்கிறான்.

"பெண்ணே நிலவுமொழி, எமது நண்பரான சிவாச்சாரியார் எப்படி இருக்கிறார்? எமக்கு ஏதாவது சேதி சொல்லி அனுப்பியிருப்பாரே!" என்று வினவுகிறான்.

———————————

[35 காணி என்பது 1.32 ஏக்கர் நிலப்பரப்பாகும்]

தடுமாறுகிறாள், நிலவுமொழி.  சிவாச்சாரியார் என்ன சேதி சொல்லி அனுப்பியிருப்பார் என்று குழம்புகிறாள்.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவள் முகம் மலர்கிறது. "அரசர் பெருமானே! சிவாச்சாரியார் தமிழ்த் திருப்பணிக்காக நாடு முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார் நான் புறப்படும் சமயம், 'வேங்கை நாட்டில் நமது புலி இருக்கிறதா என்று பார்' எனச் சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று என் மதிக்கு எட்டவில்லை. ஒருவேளை இது அவர் தங்களுக்கு அனுப்பிய குறியீட்டுச் சேதியா என்றும் எனக்குத் தெரியவில்லை" என்று தயங்கியவாறே சொல்கிறாள்.

"இது எனக்கு அனுப்பிய சேதிதான்.  நன்று பெண்ணே, நன்று! என்னம்மா மங்கை, ஒன்றுமே பேசாமல் நின்றுவிட்டாய்?" என்று மகளின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளுகிறான்.

"தந்தையாரே! இரண்டு திங்கள் என்னுடன் பணிப்பெண்ணாகப் பயணித்த நிலவுமொழி சிவாச்சாரியார் தேர்ந்தெடுத்து அனுப்பியவளா? இவள் மூலம் சிவாச்சாரியார் தங்களுக்கு சங்கேதமாகச் சேதி வேறு அனுப்பியிருக்கிறாரா? அன்னையார் சொல்லும் வரை இவள் எனது பணிப்பெண்ணாக, எனக்குத் துணையாக வந்திருக்கிறாள் என்றுதான் எண்ணி வந்திருக்கிறேன். இவளோ, அன்னையாரோ, இதுபற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.  இன்னும் வேறு என்னவெல்லாம் நடக்கிறது? எனக்குத் தலை சுற்றுகிறது. அரசு இயங்குவது பற்றி தாங்கள் எனக்கு நிறையக் கற்றுக்கொடுக்க வேண்டும்!" என்று செல்லமாகக் கோபிக்கிறாள்.

"புலிக்குட்டிக்கு வேட்டையாடக் கற்றுக்கொடுக்கவா வேண்டும்? உன் அன்னையைக் கவனித்தால் அந்தக் கலை உனக்குத் தானாகவே வந்துவிடும்" என்று கடகடவென்று சிரிக்கிறான் இராஜேந்திரன்.

எட்டு ஆட்கள் தூக்கி வந்த சிவிகையில் மூன்று பெண்களும் ஏறிக்கொள்கிறார்கள். சிவிகை அவர்கள் இரவு தங்கவிருக்கும் ஓடைக் கரையை நோக்கிச் செல்கிறது.

உள்ளே அமர்ந்திருந்த அம்மங்கை நிலவுமொழியை நோக்குகிறாள். தனது தாயின் பொன்மணி மாலை அவளுக்கு அழகு சேர்ப்பதை வைத்தகண் வாங்காமல் பார்க்கிறாள். நிலவுமொழியின் கருநிறத்திற்கு அந்தப் பொன்மாலைதான் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?! அந்த மாலை அவளுக்கு ஒரு அரச களையையே கொண்டு வருவதை அம்மங்கையால் உணர முடிந்தது.  தந்தை சொல்லியபடி அவள் நல்ல ஆடைகளையும் அணிந்து கொண்டால் அவளையும் ஒரு அரசகுமாரி என்று நினைத்தாலும் நினைத்து விடுவார்கள் என்பதை நினைத்தவுடன் தன்னையும் அறியாமல் "க்ளுக்" என்று சிரித்து விடுகிறாள்.

 "என்ன சிரிப்பு மங்கை?" என்று தாய் வினவியதற்கு, "ஒன்றுமில்லை" என்று தலையை ஆட்டுகிறாள். 

***

தஞ்சை அரண்மனை

பரிதாபி, வைகாசி 5 – மே 10, 1012

"நீர் சொல்வது உண்மைதானா? அமரபுஜங்கன் படை திரட்டத்தான் ஈழம் சென்றிருந்தானா? இப்பொழுது எவ்வளவு தூரம் அவன் முயற்சி உருப்பெற்றிருக்கிறது?" என்று தென்மண்டல ஒற்றர்படைத் தலைவனை வினவுகிறார் இராஜராஜர். 

அவரருகே சிவசங்கர சிவாச்சாரி, தலைமை அமைச்சர், தென்மண்டலப் படைத் தண்டநாயகர் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.

"கிட்டத்தட்ட முப்பதாயிரம் பேர்களைத் திரட்டி இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. மதுரைக் கோட்டைக்குள்ளும் பத்தாயிரம்பேர் இருக்கக்கூடும்!" என்று பதிலளிக்கிறான் ஒற்றர் தலைவன். 

"சோழநாட்டு நாவாய்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, அமரபுஜங்கன் எப்படிச் சிங்களத் தீவிற்குச் சென்று திரும்பிவந்தான்? சிவாச்சாரியார் மதுரைக்குச் சென்று வந்து தனது சந்தேகத்தைத் தெரிவித்த பிறகுதானே நீர் உமது ஒற்றர்களை அனுப்பி இதெல்லாவற்றையும் கண்டறிந்து வந்திருக்கிறீர்! அதுவரை உமது ஒற்றர் படை தூங்கிக் கொண்டா இருந்தது?" இராஜராஜரின் குரலில் புலியின் உறுமல் இருக்கிறது. 

ஒற்றர் படைத் தலைவனின் குலை நடுங்குகிறது. நம்மால் கண்டுபிடிக்க முடியாததை மதுரை சென்ற சிவாச்சாரி ஒரே நாளில் எப்படிக் கண்டுபிடித்தான் என்று எண்ணினால் அவனுக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது.

பாண்டிய அமைச்சரிடம் மதுரைக் கோட்டையைச் சுற்றிப் பார்ப்பதாகச் சொன்னவன் படை வீரர்கள் ஒளிந்து இருப்பதை எப்படி மோப்பம்பிடித்தான்? அமரபுஜங்கன் குற்றாலம் சென்றிருக்கிறான் என்பதையும் அவன் நம்பவில்லை என்றும், அவன் எங்கிருக்கிறான் என்பதைச் சல்லடைபோட்டுத் தேட வேண்டும் என்றும் சிவாச்சாரி சொன்னது ஒற்றர் தலைவன் நினைவுக்கு வருகிறது.

"சக்கரவர்த்தி அவர்களே! அரபுநாட்டுக் கப்பல் போல மாற்றம் செய்த நாவாயில் கொல்லம் வந்திருக்கிறான், பாண்டிய மன்னன். கொல்லத்தில் நமது சுங்கப் பரிசோதனை அதிகாரிகளும் அதை நம்பிவிட்டனர். அராபியன் மாதிரி மாறுவேடத்தில் கொல்லத்தில் இறங்கிய அவன், அதே வேடத்தில் மதுரை வந்து சேர்ந்ததாக ஆங்காங்கு கிடைத்த தகவல்களை இணைத்துப் பார்த்து அறிந்துகொண்டோம். இந்தக் கவனக் குறைவுக்கு நான் முழுப் பொறுப்பும் ஏற்றுக்கொள்கிறேன். சக்கரவர்த்தி அவர்கள் கொடுக்கும் எந்தத் தண்டனையையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக உள்ளேன். தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இல்லாது போன எனக்கு இனி தங்கள் முன்பு நின்று பேசவும் என்ன தகுதி இருக்கிறது?" என்று தழுதழுத்த குரலில் பதில் சொல்கிறான். 

அவனை உறுத்துப் பார்த்த இராஜராஜர், சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார். 

"உமக்கு தண்டனை கொடுப்பது பற்றியும், அது எவ்வாறு இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் எமது கடமை. நீரே எமது பொறுப்பை எடுத்துக்கொண்டு உமக்குத் தண்டனையும் வழங்கிக்கொள்ளத் தீர்மானித்து விட்டீரா?"

அவரது குரல் ஒற்றர் தலைவனை இரண்டாக அறுப்பதுபோல இருக்கிறது. ஏதோ பதில் சொல்லத் தொடங்கிய அவனைக் கையமர்த்திவிட்டு, "தண்ட நாயகரே! நமது கையில் இப்பொழுது எவ்வளவு படைகள் உள்ளன?" என்று வினவுகிறார். 

"சக்கரவர்த்தி அவர்களே! தஞ்சைக் கோட்டையின் காவலுக்காக பெருவீரர் படையினர் ஐயாயிரவர் இருக்கிறார்கள். உறையூரில் மூவாயிரம் குதிரை வீரர்களும், நூற்றைம்பது யானைகளும், பத்தாயிரம் காலாள் படையும், ஆயிரம் வில்லாளிகளும் உள்ளனர். நாகைப்பட்டினத்தில்…" என்று ஆரம்பித்த தண்ட நாயகரை இடைமறித்து, "யாம் கேட்டதின் உள்நோக்கமறியாமல் எனக்கு எண்ணிக்கை காண்பிக்கிறீரே! பாண்டியன்படைக்கு பதில்சொல்ல இப்பொழுது நம்மிடம் படைகள் உள்ளனவா? நம் வீரர்களின் ஆற்றல் எமக்குத் தெரியும். நாற்பதாயிரம் பகைவர் படைகளை எதிர்க்கும் அளவுக்கு நம்மிடம் படைபலம் இருக்கிறதா? அதைச் சொல்லும்." என்று சாடுகிறார் இராஜராஜர். 

பொறுமையிழந்து ராஜராஜர் இப்படிப் பேசியதே இல்லை. அதிலிருந்து அமரபுஜங்கனின் திட்டத்தை அவர் புரிந்துகொண்டிருக்கிறார்; சோழப் படைகள் இக்கட்டான நிலைமையில் இருக்கின்றன என்றும் அவருக்குப் படுகிறது என்பது தண்டநாயகருக்குப் புரிகிறது. தாம் சொல்லப்போகும் பதில் ஒற்றர் தலைவனின் நிலைமைக்குத் தன்னை ஆளாக்கப்போகிறது என்றும் புரிந்துகொள்கிறார். 

"என்னை மன்னிக்கவேண்டும், சக்கரவர்த்தி அவர்களே! தஞ்சைக் கோட்டையின் படைகளை நீக்கி நம்மிடம் மெத்தம் இருபத்தையாயிரம் பேர் இருக்கிறார்கள். மெத்தம் முந்நூறு யானைகள் தேறும்." என்று தணிந்த குரலில் பதில் அளிக்கிறார்.

அந்தச் செய்தி இராஜராஜருக்கு மிகவும் எரிச்சலைத் தந்தாலும், அவருடைய முகத்தில் ஒருவிதமான மாறுதலும் தெரியவில்லை. அவரது பார்வை சிவாச்சாரி பக்கம் மெதுவாகத் திரும்புகிறது. அதைக் கண்ட சிவாச்சாரி மனது இலேசாகப் படபடக்கிறது.

"சிவாச்சாரியாரே! கிட்டத்தட்ட இருபது திங்கள் முன்னால் இராஜேந்திரனிடம் ஒரு புது மாதிரியான படை அமைப்பைப் பற்றிச் சொன்னீர் அல்லவா? ஏதோ சீன நாட்டு அறிஞர் எழுதிய படைநடத்தும் முறை என்றுகூட கூறினீரே!" நிறுத்திவிட்டு அவனையே உற்று நோக்குகிறார். 

"திரிபுவனச் சக்கரவர்த்தியே! நான் விவரித்த படையமைப்பு மூலம் பாண்டியப் படை அனைத்தையும் சிதறி ஓடச்செய்து, அமரபுஜங்கனையும் சிறைப்பிடிக்க இயலும். அதற்கான வலிமை நம்மிடம் இருக்கிறது. நம் படைகளுக்கு ஒத்தாசையாக ஏவுகணைக் கருவிகள் ஐநூறு செய்யவேண்டும். இன்று ஆரம்பித்தால் நூற்றைம்பது தச்சர்களையும், இருநூறு கொல்லர்களையும்கொண்டு இருபது நாட்களில் செய்துவிடலாம்."

"ஏவுகணைக் கருவிகள் இல்லாவிட்டால்?"

"இந்தப் போர் வலுவில்லாத சூதாட்டம்போலத்தான் அமையும் சக்கரவர்த்தியரே!" 

சிவாச்சாரியனுடைய பளிச்சென்ற பதில் அனைவருக்கும் வியப்பைத் தருகிறது. ஒண்ணரை ஆண்டுகளில் அவன் இராஜராஜரிடம் பெற்றுவரும் செல்வாக்கு அனைவருக்கும் வியப்பையும், சிறிது பொறாமையையும் தந்தாலும், அவனது திறமைக்கு அனைவரும் மதிப்புக்கொடுத்தனர். தனது செல்வாக்கை அவன் துளிகூட எவரிடமும் காட்டியதில்லை. அனைவரிடமும் மதிப்புடனும், பணிவுடனுமே பழகி வந்தான். எவரையும் ஓரம்கட்டவும், பதவியைப் பறித்துக்கொள்ளவும் அவன் முற்படவில்லை. அதனால் அனைவரும் அவனை ஒரு இடையூறாகவோ, தமக்குப் போட்டியாகவோ நினைக்கவில்லை. இருப்பினும் தயக்கமில்லாமல் அவன் இப்படிப் பதில்சொல்வதை இராஜராஜர் எப்படி எடுத்துக்கொள்வாரோ என்ற அச்சம் அனைவரின் மனதில் தோன்றத்தான் செய்கிறது. 

"சூதாட்டத்தில் எமக்கு என்றுமே நம்பிக்கை கிடையாது. எதிர்நீச்சல் போடுவது எமக்கு விரும்பிய செயல்தான். அமைச்சரே, தண்டநாயகரே, இன்றே ஏவுகணைக் கருவிகள் செய்வதற்கு வேலைகள் தொடங்கட்டும். சிவாச்சாரியாரே! அவை எப்படி வேலைசெய்யும் என்று அனைவருக்கும் விளக்குவீராக! இன்னும் என்ன வேண்டுமோ, தெரிவியும்!" கணீர் என்ற குரலில் பதிலும், உத்திரவும் பிறக்கிறது இராஜராஜரிடமிருந்து. 

சிவாச்சாரி ஏவுகணைக் கருவியைப் பற்றி விளக்க ஆரம்பிக்கிறான். எளிதான, ஆனால் மிகவும் கொடூரமான கருவி அது. மிகப் பெரிய கவண்கல் எறியும் கருவி மாதிரித்தான் அது இருக்கும் என்று ஆரம்பிக்கும், சிவாச்சாரி. "அந்தக் கருவியில் ஒரு பெரிய கம்பத்தினை, வேறிரு கம்பங்கள் நடுவில் தாங்கி இருக்கும். நடுக்கம்பத்தின் ஒரு பக்கம் பெரிய கல் எடைக்காகக் கட்டப்பட்டிருக்கும். மறு பக்கம் பெரிய தொட்டி இருக்கும். அதில் கற்களையோ, எரியும் தீப்பந்தங்களையோ வைக்கலாம். 

"கீழே இருக்கும் சக்கரத்தில் கட்டப்பட்டு இருக்கும் கயிற்றை இழுத்து நடுக்கம்பத்தில் கட்டிய பெரிய கல்லை உயர்த்தவேண்டும். தொட்டியை நிரப்பியதும், ஒரு பிடியை இழுத்தால் கல் இருக்கும் பக்கம் தாழ்ந்து தொட்டி வேகமாக மேலே வரும். வரும் வேகத்தில் அதிலுள்ளவை கிட்டத்தட்ட அரைக் காதத்திலிருந்து முக்கால் காதம் வரை எறியப்படும். அவை எதிரிப் படையைத் தாக்கும்பொழுது அவர்கள் நிலை குலைவார்கள்" என்று விளக்குகிறான். 

ஒரு திரைச்சீலையில் அதை வரைந்தும் காண்பிக்கிறான். இப்படிப்பட்ட ஏவுகணைக் கருவிகளை36 யவனர்களும், அராபியர்களும் பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவிக்கிறான். தான் இக்கருவியை நேரில் பார்க்காவிட்டாலும், கேள்விப்பட்டதை வைத்து இக்கருவியை சிறிய அளவில் வடிவமைத்ததாகவும், அதையே பெரிதுபடுத்தினால் போரில் பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறான். 

முன்மாதிரியாகச்செய்யப்பட்ட சிறிய கருவி நூறு காலடி தூரம் கணைகளை ஏவும் வல்லமை படைத்தது என்று சோதனைசெய்து அறிந்து கொண்டதாகவும், விருப்பப்பட்டால் அரண்மனையை அடுத்த போர்க்கருவிச் சாலையில் இருக்கும் அந்த மாதிரிக்கருவியை அனைவரும் சென்று பார்க்கலாம் என்றும் தெரிவிக்கிறான். இப்படிப்பட்ட கருவியை நிர்மாணிக்க எப்படி இவன் மூளை வேலைசெய்தது என்று அங்கு இருந்தவர்கள் நினைத்துப் பார்த்துப் பேச்சிழக்கிறார்கள். 

இராஜராஜர் உள்பட அனைவரும் அப்போர்க்கருவியின் மாதிரியையும் அதன் இயக்கத்தையும் சென்று பார்வையிட்டு வந்தவுடன் போர் ஆலோசனை துவங்குகிறது. 

"சக்கரவர்த்தி அவர்களே! இந்தப் போரைத் தாங்கள்தான் முன்னிருந்து நடத்த வேண்டும். தங்கள் அருகில் நான் இருக்க வேண்டும். போரில் வெல்லுவதற்கு இந்த இரண்டும் நடந்தேற வேண்டும்!" 

சிவாச்சாரியனுடைய கடைசி விண்ணப்பம் தண்டநாயகருக்குச் சினத்தை வரவழைக்கிறது. 

"சிவாச்சாரியாரே! நீர் பேசுவது எமது திறமையைக் குறைத்து மதிப்பிடுவதுபோல இருக்கிறது! பாண்டியனுடன் போரிட சக்கரவர்த்திகளும், அவருக்குத் துணையாக நீரும் செல்லவேண்டும் என்றால் தண்டநாயகனான எனக்கு என்னதான் வேலை? இது எமக்குச் சரியாகப் படவில்லை!" குமுறுகிறார், தண்ட நாயகர்.

————————————-

[36 இம்மாதிரிக் கருவிகளை ஐரோப்பியர்கள் பாலிஸ்டா (balista) என்றும், டிரபுசெட் (trebuchet) என்றும் அழைப்பர். சிவாச்சாரி விவரிப்பது இம்மாதிரியான ஏவுகணைக் கருவிகளைப் பற்றித்தான்]

கோபத்தில் மீசை துடிக்கிறது, கண்கள் கோவைப்பழம்போலச் சிவக்கின்றன. இராஜராஜர் இல்லாவிட்டால் வாளை உறுவியிருப்பார்போலத் தெரிகிறது. 

"தண்டநாயகரே, உமது சொல்லில் இருக்கும் நியாயத்தை யாமும் அறிகிறோம். நீர் சற்றுப் பொறுத்திருந்தால் அக்கேள்வி எம்மிடமிருந்தே பிறந்திருக்கும்" என்றவாறு சிவாச்சாரியனை நோக்கிப் புருவங்களை உயர்த்துகிறார் இராஜராஜர். 

மிகவும் பணிவுடன் தண்டநாயகரை நோக்கிக் கைகூப்புகிறான், சிவாச்சாரி. "தண்டநாயகரே! உங்களது திறமையைக் குறைத்து மதிப்பிட எனக்கு எப்படித் துணிவுவரும்? திரிபுவனச் சக்கரவர்த்தி அவர்களால் போற்றப்படும் பழுவேட்டரையர் பரம்பரையில் வந்த தங்களையா நான் அப்படிப் பேசுவேன்! அப்படிப்பட்ட எண்ணத்தை எழுப்பிய என் சொற்களுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்." 

அவனுடைய குரலில் இருந்த மனப்பூர்வமான பணிவு தண்டநாயகரின் சினத்தைச் சிறிது குறைக்கிறது. 

"நான் அப்படிச் சொல்வதற்குக் காரணங்கள் உள்ளன. சக்கரவர்த்தி அனுமதி கொடுத்தால் மேலே தொடருகிறேன்" என்று இராஜராஜர் பக்கம் திரும்புகிறான். 

"மேலே தொடரலாம்," என்பதுபோலத் தலையசைக்கிறார் இராஜராஜர். 

"இந்தச் சீன முறைப் போரில் அடிக்கொரு தடவை மாற்றங்கள் செய்துகொண்டே இருக்கவேண்டும். எதிரியை ஏமாற்றுவதே அதன் முக்கிய அம்சமாகும். அது மட்டுமல்லாமல், பாண்டிய மன்னரையும் நாம் கைது செய்ய வேண்டும். அதற்கு உடனுக்குடன் மின்னல்வேகத்தில் படை நடத்திச் செல்வதை மாற்ற வேண்டும். அப்படிச் செய்ய ஆலோசனைகூறும் நிலையில் நான் இருக்கிறேன்" என்ற சிவாச்சாரி மேலே தொடர்கிறான். 

"தண்டநாயகரே! உங்களுக்கு ஆணை இடும் அதிகாரம் யாருக்குள்ளது? தென்மண்டலச் சோழப் படைகளை நடத்தும் திறமையான தாங்கள் எங்கே, நானெங்கே? ஆகவே, தங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களைச் செய்யக்கூட ஆணையிடும் அதிகாரம் திரிபுவனச் சக்கரவர்த்திகளுக்குத்தான் இருக்கிறது. சக்ரவர்த்திகள் போரை முன்னிருந்து நடத்தவேண்டும் என்று சொன்னதன் காரணம் அதுவே. அவருக்கு ஆலோசகனாகத்தான் நான் போரில் கலந்துகொள்வேன். தண்டநாயகர் நீங்கள்தான், நானல்ல. என்னுடைய உற்சாகத்தில் நான் விளக்கம் தராமல் பேசியதற்கு அனைவரும் என் பிழையைப் பொறுத்து அருள வேண்டும்!" 

சிவாச்சாரி குரலில் இருக்கும் பணிவும், கழிவிரக்கமும் தண்டநாயகரை அமைதிப்படுத்துகிறது. தலைபணிந்து நிற்கும் அவனிடம், "சிவாச்சாரியாரே! நானும் காரணத்தை அறிந்துகொள்ளாமல் சிறிது அவசரப்பட்டு சினத்துடன் பேசிவிட்டேன். நீரும் அதை மனதில் இருந்து நீக்கிவிடுவீராக!" என்கிறார். 

இராஜராஜரின் முகத்தில் இலேசான புன்னகை மலர்கிறது. யார் பேசுவதையும் நொடியில் அலசி ஆராயும் திறன் படைத்த அவருக்கா சிவாச்சாரி சொன்னது விளங்காமல் போய்விடும்! தண்ட நாயகருக்கு அவனே விளக்கம் சொல்லட்டும் என்றுதான் நாடகத்தை நடத்தி, எரிச்சலைத் தணித்தார். 

ஒற்றர் தலைவன் பக்கம் திரும்புகிறார். "நீர் உம்மை மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டீர். நீர் கடந்த இருபது ஆண்டுகளாக சோழநாட்டிற்குத் திறமையாகப் பணி செய்துவந்துள்ளீர். தவறு செய்வது மனித இயல்பு. அதை துணிச்சலுடன் ஒப்புக்கொள்வது உயர்வான குணமாகும். உம்முடைய தொழிலை உற்சாகத்துடன் செய்துவாரும். இதுதான் யாம் உமக்கு அளிக்கும் தண்டனையாகும்" என்று புன்னகை செய்த அவர், "நீர் எமக்கு ஒரு முக்கியமான உதவியைச் செய்யவேண்டும்!" என்கிறார். 

"ஆணையிடுங்கள் சக்கரவர்த்தி அவர்களே!" 

"நம்மிடம் பதினையாயிரம் படைவீரர்களே இருப்பதாகவும், நூற்றைம்பது யானைகளே உள்ளதாகவும், மற்றவர்கள் எல்லாம் இராஜேந்திரனுடன் கீழைச்சாளுக்கிய நாட்டிற்குச் சென்றுவிட்டதாகவும் பாண்டிய ஒற்றர்களுக்குத் தவறான செய்தி கிடைக்கும்படி செய்யவேண்டும். தவிர, நமக்கு பாண்டியன் படை திரட்டியிருப்பது பற்றி ஒன்றுமே தெரியாதவாறும் அவர்களை நம்பச் செய்ய வேண்டும். புரிகிறதா?" பொருட்செறிந்த புன்னகையுடன் ஆணையிடுகிறார். 

"உத்தரவு, சக்கரவர்த்தி அவர்களே!" என்று குழைகிறான் ஒற்றர் தலைவன். 

இராஜராஜர் தலையசைத்ததும் அங்கிருந்து வெளியேறுகிறான். 

சீனப் போர் முறைகளைப் பற்றி விவரிக்கும்படி இராஜராஜர் கேட்டவுடன் அதை விளக்க ஆரம்பிக்கிறான், சிவாச்சாரி. அனைவரின் முகமும் மெல்ல மலர ஆரம்பிக்கிறது. இரண்டு நாழிகைகளில் போர் ஆலோசனை முடிகிறது. இராஜராஜர் தனியாகச் சிந்தனை செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டதால் தண்டநாயகரும், சிவாச்சாரியனும், அமைச்சருடன் வெளியே செல்கிறார்கள். 

"யாழிசைக்கும் பாணர்களை வரச்சொல்!" என்று ஆணையிடுகிறார் இராஜராஜர். 

யாழிசையில் கண்களை மூடிக்கொண்டு தான் கடைசியாக முன்னிருந்து நடத்தப் போகும் போரைப் பற்றி சிந்திக்கிறார் அவர். வெற்றித் திருமகளைத் தழுவ இப்போர் எவ்வளவு கனகச்சிதமாக நடக்க வேண்டும். படைகள் தனித்து இயங்காமல் சதுரங்கப் பொம்மைகளைப்போல இயக்கப்பட வேண்டும், இதுவரை செய்திராத சித்து வேலைகளை எப்படி மின்னல் வேகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று கண்முன் உருவகப்படுத்துகிறார். சோழப்படைகளில் பாதிப்பேர் அழியும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைத்தால்தான் அவருக்கு வருத்தமாக இருக்கிறது. 

சதுரங்கத்தில் பலிகொடுத்து வெல்லும் ஆட்டம்போல (gambit) இறுதி வெற்றிக்காகப் பாண்டியர்களுக்குக் காவு கொடுக்க பலிகடாக்களாக தான் அனுப்பப்போகும் சோழ வீரர்களை நினைத்தால் அவர் இதயம் கனக்கிறது. இந்தவிதமாக இப்போரை நடத்தப்போவது அவருக்குப் பிடிக்காவிட்டாலும், இக்கட்டான இந்நிலையில் சோழநாட்டைக் காப்பாற்ற வேறுவழி தெரியவில்லை. 

சிவாச்சாரியனின் அறிவுக்கூர்மையை எண்ணி வியக்கிறார், இராஜராஜர். அவன் கலந்துகொள்ளப் போகும் முதல் போருக்கு முன்னாலேயே தண்டநாயகரின் மதிப்பைக்கூடத் தன் ஏவுகணைக் கருவியின் வடிவமைப்பால் கவர்ந்துவிட்டானே என்பது அவருக்கு மகிழ்வை அளிக்கிறது. 

சகலகலா வல்லவனாக ஒருத்தனைத் தமக்கு அளித்துவிட்டுப் போன கருவூராருக்கு மனத்தளவில் நன்றி செலுத்துகிறார். 

"பெருவுடையாரே! எனக்குப் பிறகு இந்த சிவாச்சாரியார் நெடுங்காலம் இராஜேந்திரனுக்கு உதவியாக இருக்க அருள் செய்யுங்கள்" என்று எம்பெருமானை வேண்டிக்கொள்கிறார்.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com