பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 3

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 3

ஒரு அரிசோனன்

தஞ்சை அரண்மனை

ராட்சச, பங்குனி 10 – மார்ச் 24, 1016

கிட்டத்தட்ட முப்பத்தைந்திலிருந்து நாற்பது பேர் அரச ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்திருக்கின்றனர். இராஜேந்திரனுக்கு இருபுறமும் அவனது மைந்தர்கள் இராஜாதிராஜனும், இராஜேந்திரதேவனும் அமர்ந்திருக்கிறார்கள். இராஜாதிராஜனுக்கு அருகில் இருக்கும் இருக்கைகளில் சிவாச்சாரியும், அவனுக்கு அடுத்தபடியாக ஈராயிரவன் பல்லவராயரும் அமர்ந்திருக்கிறார்கள்.

இராஜேந்திரதேவனுக்கு அடுத்த மூன்று இருக்கைகளில் சோழப் பேரரசின் தலைமை அமைச்சரும், வடபுல, தென்புல அமைச்சர்களும் இருக்கிறார்கள். அவர்களுடன் ஆளவந்தானும் அமர்ந்திருக்கிறான். இன்னும் கடற்படைத் தலைவர்கள், தண்டநாயகர்கள், ஒற்றர் தலைவர்கள், துணை அமைச்சர்கள், நிதியாளர்கள், என்று பல பேர் குழுமியிருக்கிறார்கள்.

மண்டபத்தைத் தாண்டி, உள்ளே நடக்கும் பேச்சுவார்த்தைகளின் ஒலி கேட்காத தூரத்தில், வீரர்கள் சுற்றிலும் காவலுக்கு நிற்கிறார்கள். இராஜேந்திரன் அரியணை ஏறிய பின் முதல்முதலாக சோழப் பேரரசின் முக்கியமான அரசு அதிகாரிகளைக் கூட்டி நடந்தும் கலந்துரையாடல் இது. சோழப்பேரரசின் திருமந்திர ஓலைநாயகம் என்ற முறையில் சிவாச்சாரி எழுந்து நின்று கலந்துரையாடல் ஆரம்பமாவதை அறிவிக்கிறான்.

"கோப்பரகேசரியாரின் ஆணைக்கிணங்க அனுப்பப்பட்ட ஓலைக்கிணங்க இங்கு வந்து குழுமியிருக்கும் சோணாட்டின் தூண்களான உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.  கோப்பரகேசரியாரின் ஆணைப்படி இக்கலந்துரையாடல் துவங்குகிறது."

சிவாச்சாரி தனது இருக்கையில் அமர்ந்துகொள்கிறான். ஆலோசனை மண்டபமே அமைதியாகி விடுகிறது. அனைவரும் இராஜேந்திரனின் முகத்தையே உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.

தனது மீசையை நீவிவிட்டுக்கொள்கிறான் இராஜேந்திரன். பிறகு மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் மீதும் தனது பார்வையைச் சிலகணங்கள் நிலைநிறுத்துகிறான். அவன் இம்மாதிரி அனைவரையும் கண்டுகொள்ளப் பல நிமிடங்கள் ஆகின்றன. அவனது பார்வை தங்கள் மேல் விழுகிறது என்பதை அறிய ஆரம்பித்த உடனேயே அனைவரும் தங்கள் மன ஓட்டத்தைக் கூடக் கட்டுப்படுத்தி, தங்கள் பார்வையை அவன் மீது நிலைநிறுத்துகின்றனர்.

இராஜேந்திரனுடைய தனித்திறமையைக் கண்கூடாக அறிகிறான் சிவாச்சாரி. இராஜராஜரைவிட அவன் எந்தவிதத்தில் மாறுபடுகிறான் என்பதை அவன் அனைவரின் மீது செலுத்தும் கண்ணோட்டம் அவனுக்குத் தெரிவிக்கிறது.

தான் பேசப்போகும் ஒவ்வொரு சொல்லிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதைச் சொல்லாமலேயே தெரிவிக்கும் அவனது திறமை அவனது கோப்பரகேசரி என்ற பட்டத்தை நிரூபிக்கிறது. இராஜராஜருக்கு எந்தவிதத்திலும் அவன் சளைத்தவனாக இருக்க மாட்டான், சோழப் பேரரசை மிகவும் உன்னத நிலைக்கு அவன் கொண்டுவருவான் என்று அவன் உள்மனம் தெரிவிக்கிறது.

தொண்டையை இலேசாகச் செருமிக் கொள்கிறான் இராஜேந்திரன். உடனே மண்டபத்தில் இருக்கும் அனைவருமே மகுடியில் கட்டுண்ட நாகமாக மாறுகிறார்கள்.

"எமது அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் சோழ நாட்டின் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதை உணர்ந்து கொண்டிருப்பீர்கள். நமது பேரரசிற்குச் சிறந்த அடித்தளத்தை அரச கேசரியான எனது தந்தையார் அமைத்துக் கொடுத்து பெருவுடையாரின் அடி சேர்ந்தார்கள். மும்முடிச் சோழனாக, திரிபுவனச் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தார். ஈழத்தின் மூன்றில் இரண்டு பகுதியைத் தனது குடைக் கீழ் கொணர்ந்தார். அவர் நம்மை விட்டுச் சென்றுவிட்டாலும், அவரது கனவை நாம் தொடர்ந்து நனவாக்க வேண்டும். அவருடைய பணியைத் தொடர்வது – அவர் அமைத்த அடித்தளத்தின் மேல் பெரிய கட்டடத்தை நிறுவுவதே ஆகும்.  அதற்கு உங்களின் ஒத்துழைப்பை நாடியே உங்களை அழைத்துள்ளேன்."

தனது பேச்சை நிறுத்தி அனைவரையும் நோக்குகிறான் இராஜேந்திரன். இந்தத் தடவை ஒவ்வொருவராக நோக்காமல் பொதுவாக மண்டபத்தில் இருக்கும் அனைவரையும் நோக்குகிறான்.

"கரிகால் பெருவளத்தான் பூம்புகாரையும், உறையூறையும் தலைநகராகக் கொண்டு சோழர் புகழைப் பரப்பினர். அதுமட்டுமல்லாது, அடிக்கடி வெள்ளத்தில் முழுகடித்து வந்த காவிரியிடமிருந்து சோழ நாட்டை மீட்க அதற்குக் கரையமைக்கத் தீர்மானித்தார். அத்தோடு நிற்காமல், பருவ காலத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, அந்த நீரைத் தேக்கி, கால்வாய்கள் மூலம் பாசனம் செய்து செந்நெல் விளைவிக்கவும் முடிவெடுத்தார்.

"அதை நிறைவேற்ற, இலங்கையிலிருந்து பல்லாயிரக் கணக்கானோரை அடிமைசெய்து கொணர்ந்து காவிரிக்குக் கரையமைத்தார். கொணர்ந்த அடிமைகளின் தலை மீது கல்லேற்றி ஆற்றின் குறுக்கே கல்லணையையும் நிறுவினார். காட்டாறாகக் கட்டற்றுத் திரிந்த காவிரியை அடக்கி, அவளது நீரைக் கட்டுப்படுத்தி, காடுகளைக் கழனியாக்கி, நம் நாட்டைச் செழிப்பாக்கி, பயிர் வளர்க்கும் பொன்னியாக மாற்றினார். அதனால் சோணாடு சோறுடைத்து என்ற பெருமொழியையும் நம்நாட்டுக்குக் கிடைக்கச் செய்தார்.

"ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விரு திருநகர்களும் சோழர்களின் பெருமையை இவ்வுலகுக்குப் பறைசாற்றியிருக்கின்றன. இப்படிப்பட்ட மணியான திருநகர்களில் ஒன்றான பூம்புகாரை, கடலன்னை பொறாமையால் எடுத்து விழுங்கி விட்டாள். கலியின் தூதர்களான களப்பிரர்களால் தமிழகமே இருண்டது. சோழ நாட்டின் புகழும் மங்கியது.

"விடிவு வராதா என்று ஏங்கிய சோழ அன்னையின் புலம்பலுக்கு அருமருந்தாக – நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எமது மூதாதையரான விஜயாலய சோழர் முத்தரையர்களின் ஊரான தஞ்சையைத் தமதாக்கிக் கொண்டார். சோழர் புகழை மீண்டும் தழைக்கச்செய்த அவரது காலத்திலிருந்து தஞ்சை சோணாட்டின் தலைநகராகச் சிறந்து விளங்கி வருகிறது. பெருவுடையாருக்கு மிகப்பெரிய கற்றளி அமைத்து அதை மேலும் சிறப்பித்தார் எனது தந்தையார். இருப்பினும் சோணாட்டிற்கு தலைநகராக விளங்கியது புகாரோ, கோழியூரான உறையூரோ அல்ல. தஞ்சை என்பது நாமறிந்ததே!"

இதுவரை இனிமையாக இருந்த இராஜேந்திரனின் பேச்சு தஞ்சையைப் பற்றித் திரும்பியதும், அனைவரின் முகங்களிலும் குளிர்ந்த நீரை விசிறியடிப்பதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. தஞ்சை முத்தரையர்களின் ஊர் என்பதும், சோழர்கள் தங்கள் அரசை விரிவு படுத்தியபோது அது அவர்கள் ஆட்சிக்குக் கீழ் வந்ததும், இராஜராஜர் தஞ்சையைச் சோழநாட்டின் தலைநகராக்கியதும் அனைவரும் அறிந்ததே!  இருப்பினும் அனைவரும் மறந்து வரும் அதை இராஜேந்திரன் ஏன் நினைவுபடுத்துகிறான்!

"சோழ நாட்டுக்கு மையமாகத் தஞ்சை இருந்தபோது அதைத் தலைநகராகச் செய்தது தந்தையாரின் மதியூகமே. இப்பொழுது சோழ நாட்டின் எல்லை பறந்து விரிந்திருக்கிறது.  இயற்கை அரணாகக் காவிரியும், கொள்ளிடமும் விளங்கியது போக, அவை உள்நாட்டு நீர்ப் போக்காக ஆகியதுதான் கண்கூடு. தொண்டை மண்டலமும், கொங்குநாடும், கீழ்ச் சேர நாடும், பாண்டிநாடும் சோழப் பேரரசின் நேர் ஆட்சிக்குக் கீழ் வந்திருப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிதான்.  எனவே, இந்தப் புது நிலங்களுக்கு நடுநாயகமாகவும், நமது வட எல்லைகளை விரைவில் அடையவும் ஏதுவாக இருக்கும் இடத்தில் சோழப் பேரரசின் புதிய தலைநகராக நிர்மாணிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது."

அந்த மண்டபத்தில் 'ஆ!' என்ற பேரொலி எழுகிறது. இராஜராஜர் கோலோச்சிய தஞ்சையை விடுத்து இன்னொரு தலைநகரா!?

"உங்கள் கருத்துகளைச் செவிமடுக்க ஆவலாக உள்ளோம்.  முதலில் நமது முத்தரையர் பரம்பரைச் செல்வர் தமது கருத்தைத் தெரிவிக்கட்டும்!"

மெல்ல எழுகிறார் வயதான முத்தரையர். இராஜராஜருடன் களம் பல கண்டவர் அவர்.  அவரை விட வயதில் மூத்தவர். தங்கள் முன்னோர்களின் நகரமான தஞ்சை சோழர் வசம் சென்றாலும், சோழர்கள் தங்களைச் சிறந்த பதவிகளில் அமர்த்திச் சீரும் சிறப்புமாக நடத்தி வருவதும், தங்கள் குலப் பெண்களை மணவினை செய்துகொள்வதும் அவர்களை சோழர்களில் ஒருவராகவே ஆக்கி வந்திருக்கிறது. அப்படியிருக்கையில், இராஜேந்திரன் திடுமென்று தஞ்சை முத்தரையர்கள் ஊர் என்று குறிப்பிட்டது அவர் இதயத்தைக் கனக்கச் செய்கிறது.

"கோப்பரகேசரியாரே!" தான் தூக்கி வளர்த்து, மதுராந்தகா என்று வாய் நிறைய அழைத்து வந்த இராஜேந்திரனை அரச மரியாதையுடன் அழைப்பதும் அவருக்கு என்னவோ போலத்தான் இருக்கிறது.

"தாங்கள் எங்கு வேண்டுமானாலும் சோழப் பேரரசின் புதுத் தலைநகரை நிர்மாணிக்கலாம்.  அதற்காக எக்காரணங்களையும் ஏற்றுக்கொள்வேன், ஒன்றைத் தவிர. முத்தரையர்கள் என்றும் சோழர்களின் நண்பர்கள். தஞ்சை தங்களது ஊராகும். எனவே, அது சோழர்களது ஊர் அல்ல என்று சொல்வது என் மனதை மிகவும் புண்படுத்திக் கிழிப்பதாக அமைந்திருக்கிறது!" அவரது குரல் தழுதழுக்கிறது. அப்படியே மெதுவாக இருக்கையில் அமர்ந்துகொள்கிறார் அவர்.

"முத்தரையர் பெருமானே! நான் சொன்னது தங்கள் மனதைப் புண்படுத்துவதற்காக அல்ல.  அப்படி அமைந்திருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். தங்கள் முன்னோர்கள் தஞ்சையை எங்களுக்குச் சீதனமாக அளித்திருக்கிறார்கள். அதற்காக என்றென்றும் சோணாடு தங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. தந்தையார் கற்றளி அளித்துச் சிறப்பித்ததைப் போல யாமும் தஞ்சைக்கு திருச்சுற்று மாளிகை அளித்துச் சிறப்பளிக்க இருக்கிறோம். அதற்காக ஓலைநாயகத்தை திட்டம் தீட்டி நிறைவேற்றவும் பணிக்கிறோம். அது மட்டுமல்ல, தஞ்சைக் காவலராக இனிமேல் ஒரு முத்தரையர் குலக்கொழுந்தே இருந்து வருவார் என்று ஆணையும் பிறப்பிக்கிறோம்" முத்தரையரின் மறுப்புக்கு சமாதானமளிக்கிறான் இராஜேந்திரன்.  ஒருவாறு சமாதானமடைகிறார் முத்தரையர்.

முத்தரையரே விட்டுக்கொடுத்துவிட்டார் என்பது போலப் பட்டதும் வடபுல அமைச்சர் கையை உயர்த்துகிறார்.

அவர் பக்கம் திரும்பிய இராஜேந்திரன், "சொல்லுங்கள் அமைச்சரே!  உங்களது எண்ணத்தையும் அவையாருக்கு அறிவியுங்கள்!" என்கிறான்.

"அரசே!  புதிய தலைநகரை எங்கு அமைப்பதாகத் தங்கள் விருப்பம்?" என்று கேள்வியைத் தொடுக்கிறார்.

"அமைச்சரே எமது விருப்பம் இருக்கட்டும், தங்கள் விருப்பம் என்னவோ?"

"காஞ்சி…" என்று இழுக்கிறார்.

கடற்படைத் தண்டநாயகர் கை உயர்கிறது.

அவரைப் பேசச் சொல்வது போலக் கையை உயர்த்துகிறான் இராஜேந்திரன்.

"அரசே! இப்பொழுது சோழப் பேரரசு ஒரு சிறந்த கடலோடும் அரசாகி வருகிறது. எனவே, கடற்கரையில் புதிய தலைநகரை அமைப்பதே சாலச் சிறந்ததாகும். திருமயிலை ஒரு சிறந்த இடம் என்று இந்தப் பேரவைக்குச் சொல்ல விரும்புகிறேன்" என்கிறார்.

பலரும் பலவிதமான இடங்களை அறிவிக்கிறார்கள். இராஜேந்திரனின் முகத்தில் சிறிய புன்னகை மலர்கிறது. யாரும் அவன் மனதில் உள்ளதை அறிவிக்கவில்லை.

ஈராயிரவன் பல்லவராயரும், சிவாச்சாரியும் வாயைத் திறக்காமல் அமர்ந்திருக்கிறார்கள்.  அவர்கள் கருத்தையும் தெரிந்துகொள்ள விரும்பிய இராஜேந்திரன், "பல்லவராயரும், ஓலைநாயகமும் அமைதியாக அமர்ந்திருப்பதின் காரணத்தை இந்த அவைக்குத் தெரிவிக்கலாமே!" என்று புன்னகைக்கிறான்.

"கோப்பரகேசரியாரே!  என் மனதில் சோழ நாட்டுக்கு ஒரு புதிய தலைநகர் வேண்டும் என்று தோன்றவில்லை!" என்று பளிச்சென்று அறிவிக்கிறான் சிவாச்சாரி.

"காரணம் என்னவோ?" இராஜேந்திரனிடமிருந்து கேள்வி பிறக்கிறது.

"தலைநகரைத் தஞ்சையிலிருந்து மாற்றவேண்டும் என்று எனக்குப்படவில்லை.  வேறொன்றுமில்லை. மற்றபடி கோப்பரகேசரியாரின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவன் நான்!"

இப்பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் மன்னன் விரும்புகிறான் என்று அறிந்து, அதற்குத் தகுந்தபடி, தங்களுக்குத் தோன்றிய ஒரு ஊரின் பெயரை அறிவித்தார்கள்.

முத்தரையர்கூட தஞ்சை சோழர்களின் சொந்த ஊர் அல்ல என்று சொன்னாதற்குத்தான் வருந்தினாரே தவிர, இராஜேந்திரன் விருப்பத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை.

அப்படியிருக்க, இராஜேந்திரனின் மருமகனாக இருந்தும், அவனது விருப்பத்தை ஆதரிக்காமல் சிவாச்சாரி பேசியது அனைவருக்கும் மலைப்பாகத்தான் இருக்கிறது. இதனால் அவன் எதிர்காலம் எப்படிப் பாதிக்கப்படுமோ என்ற கேள்விதான் அனைவரின் மனதிலும் பெரிதாக எழுந்து நிற்கிறது.

பெரிதாகச் சிரிக்கிறான் இராஜேந்திரன்.

"இறுதியில் தஞ்சைக்கு ஆதரவாக ஒரு குரல் எழும்பியிருக்கிறது! முத்தரையர் சார்பாக சோழப் பேரரசின் தலைநகராக தஞ்சையே இருக்கட்டும் என்று ஓலைநாயகம் அறிவிக்கிறார் என்று எடுத்துக் கொள்வோமாக!" என்றபடி ஈராயிரவன் பல்லவராயரை நோக்கி, "நீர்தான் பாக்கி இருக்கிறீர். உமது கருத்தைச் சொல்வீராக!" என்று அவரை உற்று நோக்குகிறான்.

"அரசே! அனைவரும் ஒரு ஊரையோ, நகரையோ சோழப் பேரரசின் புதிய தலைநகராக அறிவிக்கும்படி குரல் கொடுத்தார்கள். காஞ்சி பல்லவர்களின் தலைநகரம் – என் சொந்த ஊராக இருந்தாலும்கூட, திருமயிலை சிவனாரின் திருத்தலம். கடலில் சீற்றம் அங்கு அதிகமாகவே உள்ளது. மல்லையின் கீழ்ப்பகுதியைக் கடல்கொண்டதும் நாமறிந்ததே. எனவே, பெரிய நகரை மயிலையில் எழுப்புவது பூம்புகாரின் நிலைமை அதற்கு வரலாம் என்பதைத் தெரிந்துகொண்டே செய்வதற்கு இணையாகும். கடற்கரையில் துறைமுகங்களைக் கட்ட வேண்டும், தலைநகரை எழுப்பக்கூடாது என்பது எனது கருத்து. எதிரிகளின் கடற்படைத் தாக்குதலிருந்து தவிர்த்துக்கொள்ள அது உதவும்.

"எனவே, உள்நாட்டில் தலைநகர் இருப்பதே சாலச் சிறந்தது. அதுவும், புதிதாக, அடிமட்டத்திலிருந்து அதை எழுப்புவதே முறையாகும். பலவிதமான பாதுகாப்புகளுடனும், இக்காலம் மட்டுமல்லாது; எதிர்காலத்திற்கும் சிறப்புடையதாகவும், சோழர் பெருமையை நிலைநிறுத்தும் புகழுடையதாகவும் அதை அமைக்க வேண்டும். ஆகவே, அது எங்கு இருக்க வேண்டும் என்பதையும் தாங்களே அறிவிக்க வேண்டும் என்றே இந்தப் பேரவைக்கு நான் முன்மொழிகிறேன்!" என்று அமர்ந்து கொள்கிறார் பல்லவராயர்.

தனது மன்னனின் விருப்பம் என்ன என அவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்தவராயிற்றே!

"பல்லவராயரே! உம்முடைய மற்றும் திருமந்திர ஓலைநாயகரின் பதில்களைக் கேட்டால் நீங்கள் இருவரும் எமக்கு அறிவிக்காமல் பதவி மாற்றம் செய்துகொண்டாற்போலத் தோன்றுகிறது. அவர் தண்டநாயகர்கள் போலச் சுருக்கமாகத் தன் கருத்தைச் சொன்னார். நீர் ஓலைநாயகரைப் போல் நன்கு விளக்கம் செய்து உமது கருத்தை வலியுறுத்தினீர். உமது விளக்கம் எமக்கு மிகவும் சரியான ஒன்றாகத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு இடத்தையும் நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டோம். அந்த இடத்தையும் அரசு கையாக்கம் செய்ய ஆணையும் அப்பொழுது பிறப்பித்தோம். அந்த இடம் கொள்ளிடத்திற்கு வடபாங்கில் அமைந்திருக்கிறது. அங்கே புதிய தலைநகரை உருவாக்குவோம்.

"நீரும், திருமந்திர ஓலைநாயகமும் சேர்ந்து நகரை வடிவமைக்கும் பணியில் ஈடுபடுவீர்களாக.  இன்னும் மூன்று திங்களில் திட்டம் எம்முன் வரவேண்டும். அத்தலைநகருக்கு இப்பொழுது ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற பெயரை யாம் அளிக்கிறோம். அது மட்டுமல்ல, பெருவுடையாருக்கு அங்கு மற்றுமொரு கற்றளியையும் அமைக்கவிருக்கிறோம் என்று இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது மரபுப் பெருமையை, சோழர்களின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றும் வகையில் அது அமைந்திருக்கும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நாம் எதிர்நோக்குகிறோம்" உற்சாகமாகப் பேசிக்கொண்டே செல்கிறான் இராஜேந்திரன். அவையே அவன் பேச்சில் கட்டுண்டு போகிறது.

அவன் பேசப்பேச சிவாச்சாரியனுக்கு அவனது தொலைநோக்கு நன்கு புரிகிறது. தனது தந்தையை விடப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவத் துடிக்கிறான் இராஜேந்திரன் என்று அவனுக்குப் புலனாகிறது.

மேலும், தனக்கென்று ஒரு தனிப் புகழையும், வரலாற்றில் தனி இடத்தையும் தேடத் துடிக்கிறான் என்றும் அவன் அறிந்துகொள்கிறான். இராஜராஜரிடம் இருந்த செல்வாக்கு தனக்கு இராஜேந்திரனிடம் இருக்குமா அல்லது தனது உண்மையான பதிலால் அது குறைந்துபோகுமா என்றும் அவனால் அப்பொழுது தீர்மானிக்க இயலவில்லை.

ஆனால் குருநாதர் கருவூரார், "சிவனே, எப்பொழுதும் தாமரை இலை மீது இருக்கும் நீர்த்துளியைப் போல இருந்து பழகு. அரசர்களுடன் இருப்பது நெருப்புடன் பழகுவது போலத்தான். எதற்கும் உன்னைத் தயார்செய்து கொள். புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகவே எடுத்துக்கொள்" என்று சொன்ன அறிவுரையை நினைவில் நிறுத்துகிறான்.

***

ஏகாம்பரநாதர் திருக்கோவில், காஞ்சி

நள, சித்திரை 14 – ஏப்ரல் 29, 1016

சுற்றுப் பிராகாரத்தில் நிலவுமொழியும் அவளது தந்தையும் சுற்றி வருகின்றனர். ஏகாம்பரநாதர் கோவிலில் சந்திக்கும்படி சிவாச்சாரியனிடமிருந்து சேதி வந்ததால் அவர்கள் திருமயிலையிலிருந்து இரண்டு நாழிகை முன்னர்தான் வந்து சேர்ந்திருந்தனர். சிவாச்சாரியைச் சந்திப்பதற்கு முன் ஏகாம்பரநாதரைத் தரிசித்துவிட்டு, பிராகாரத்தைச் சுற்றி வருகிறார்கள். இருவர் மனதிலும் ஏதேதோ எண்ண ஓட்டங்கள் – நிலவுமொழிக்கு இன்று ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டிருக்கிறது.

"எனக்குக் காலை வலிக்கிறதம்மா. களைப்பாகவும் இருக்கிறது.  சிறிது நேரம் இந்த மண்டபத்தில் அமர்ந்துகொள்வோம்" என்று தந்தை சொன்னதும், நிலவுமொழி அருகிலிருந்த மண்டபத்தை நோக்கி நடக்கிறாள்.

ஒரு காலைத் தொங்கப் போட்டுக் கொண்டபடி மண்டபத்தில் அமர்ந்து தூணில் சாய்ந்துகொள்கிறார் அவளது தந்தை. அவரருகில் அமருகிறாள் நிலவுமொழி.

மயிலைக்கு வராமல் காஞ்சிக்குத் தங்களை சிவாச்சாரியார் வரவழைத்ததின் நோக்கம் என்ன என்று அவள் மனது அவளை அரித்துப் பிடுங்குகிறது. அவள் தந்தை அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏன், என்ற கேள்வியே கேட்காமல் அவளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

"உஸ்" என்று மூச்சைப் பெரிதாக விட்டுக்கொண்டே துணியால் விசிறிக் கொள்கிறார். சித்திரை பிறந்து பதினான்கு நாட்களே ஆகியிருந்தாலும் வெய்யில் உச்சியைப் பிளக்க ஆரம்பித்திருக்கிறது. இப்பொழுது அவளது தந்தைக்கு அடிக்கடி களைப்பு வருகிறது. ஐம்பது வயதுகூட ஆகவில்லை. ஆனாலும், மிகவும் தளர்ந்து போயிருக்கிறார். தனக்குத் திருமணம் ஆகவில்லையே என்ற கவலையில் ஏற்பட்ட தளர்வா அல்லது அவரது குடும்பத்தார் அனைவருக்கும் வரும் இளமுதுமையா என்று அவளுக்குப் புரியவில்லை.

அவளது குடும்பத்தில் யாருமே ஐம்பத்தைந்து வயதைத் தாண்டியதில்லை. அவளது தாய் இருபத்தைந்து வயதிலேயே இறந்துவிட்டாளாம். அதிலிருந்து அவளது தந்தைதான் மறுமணம் செய்து கொள்ளாமல் அவளை வளர்த்து வருகிறார். அவளுக்கு முன்னால் பிறந்தவர்கள்கூட ஐந்து வயதைத் தாண்டுமுன்னரே இறைவனடி சேர்ந்துவிட்டார்களாம். மூன்று வயது நிறையும் முன்னரே சென்றுவிட்ட தாயின் முகம்கூட அவளுக்கு நினைவிலில்லை. ஆகவே, தன் தந்தையின் அவசரம் அவளுக்குப் புரிகிறது. அதை எண்ணிப் பார்த்தால் அவளுக்கு இதயம் கனக்கிறது.

"ஏகாம்பரநாதா, என் தந்தை நெடுங்காலம் நோய் நொடியில்லாமல் வாழ அருள்செய், அப்பனே!" என்று மனதிற்குள் வேண்டிக்கொள்கிறாள்.

வாயைத் திறந்து, "தந்தையே, சிவாச்சாரியார் நம்மை எங்கு சந்திப்பதாகச் சொன்னார்? எப்பொழுது சந்திப்பதாகச் சொன்னார்? இரண்டு நாழிகை கழிந்தால் கதிரவன் சாய்ந்து விடுவான். இரவை எங்கு கழிப்போம்?  நமக்கோ காஞ்சியில் எவரையுமே தெரியாது.  நீங்களோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் அமர்ந்திருக்கிறீர்களே?" என்று வினவுகிறாள்.

"அப்பாடி, என்ன வெய்யில்… என்ன வெய்யில்?" என்று அலுத்துக்கொண்ட அவளது தந்தை, "நிலா, ஏனம்மா நீ உன் மனதை அலட்டிக்கொள்கிறாய்?  சிவாச்சாரியருக்கு ஆயிரம் கண்கள் உள்ளன. சோழ சாம்ராஜ்ஜியத்தின் திருமந்திர ஓலைநாயகமான அவர் நம்மை இரவில் தனியாகத் தவிக்க விட்டுவிடுவாரா? தகுந்த காரணம் இல்லாமலா நம்மை இங்கு வரவழைத்திருக்கிறார்? அவருடன் பழையாறையில் இருந்திருக்கிறாயே! அவரைப் பற்றி உன்னால் புரிந்துகொள்ள இயலவில்லையா? அவருக்கு முக்கியமான பணிகள் ஆயிரம் இருக்கும். அதில்தானே அவர் முதலில் கவனம்செலுத்துவார்? நாம் அதற்குப் பின்னர்தானே?  எனவே, வருவதில் தாமதம் ஏற்பட்டால் அதைப் பெரிதுபடுத்தாமல் காத்திருப்பதுதான் நமக்கு நல்லது" என்று பதில் சொல்கிறார்.

அதைக் கேட்டு அவளுக்கு எரிச்சலாக வருகிறது. சிறிது நேரம் சென்று தன் மனதில் தோன்றுவதை சொல்லலாம் என்று திரும்பினால், அவளது தந்தை கண்களை மூடித் தூணில் சாய்ந்திருப்பதைப் பார்க்கிறாள். அவரைப் பார்த்தால் அவளுக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவரது நிம்மதியைக் கெடுக்க வேண்டாம் என்று எதிரில் இருக்கும் தூணில் சாய்ந்துகொள்கிறாள். களைப்பில் அவளது கண்களும் மூடிக்கொள்கின்றன.

ஒரு நாழிகை கழிகிறது. அருகில் யாரோ நிற்பது போன்ற உணர்வு தோன்றவே, திடுக்கிட்டு கண்களைத் திறக்கிறாள். அவளருகில் தலைப்பாகை அணிந்த கோவில் அதிகாரி ஒருவர் கையில் தண்டுடன் நின்றுகொண்டிருக்கிறார். அவள் கண்களைத் திறந்ததைக் கண்டதும் அவர் முகத்தில் புன்னகை மலர்கிறது.

"விழித்துவிட்டாயா அம்மா? பயணக் களைப்பு மிகவும் அதிகமா? ஏனம்மா, திருமயிலை பொன்னம்பல ஓதுவாரின் மகள் நிலவுமொழிதானே நீ?" என்று கனிவான குரலில் வினவுகிறார்.

வியப்பில் பெரிதாகின்றன அவளது விழிகள். எவ்வளவு நேரம் தங்கள் உறக்கத்தைக் கலைக்காமல் தாங்கள் கண் விழிப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாரோ இவர்?  நிலவுமொழிக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. சட்டென்று எழுந்து தலையைக் குனிந்துகொள்கிறாள்.

"மன்னிக்க வேண்டும். தாங்கள் வந்து நிற்பதையும் அறியாமல் அயர்ந்து உறங்கிவிட்டோம்.  நான் நிலவுமொழிதான். இவர்தான் எனது தந்தை பொன்னம்பல ஓதுவார். எவ்வளவு நேரமாகத் தாங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள்? எங்களை எழுப்பியிருக்கலாமே!" மன்னிப்புக் கேட்கும் குரலில் இறைஞ்சுகிறாள்.

"அதனாலென்ன அம்மா.  நான் வந்து அதிக நேரம் ஆகவில்லை. நன்கு உறங்குபவர்களை எழுப்பினால் ஆயுள் குறைந்துவிடும் என்று ஒரு மரபுச் சொல் உண்டு. அதனால்தான் நீயே கண் விழிக்கட்டும் என்று காத்திருந்தேன். உன்னைப் பார்த்தால் காமாட்சி அம்மன் மாதிரி இருக்கிறது. நீ பல்லாண்டு நன்றாக வாழவேண்டும் அம்மா!" என்று ஆசி வழங்கியவாறு அவளுக்குப் பதிலளிக்கிறார்.

இதற்கிடையில் பேச்சுச் சத்தம் கேட்டுக் கண் விழிக்கிறார் நிலவுமொழியின் தந்தை. காவல் அதிகாரியைக் கண்டதும் பரபரப்புடன் எழுந்து நின்று வணங்குகிறார்.

"ஐயா, வணக்கம். அடியேன் பெயர் பொன்னம்பல ஓதுவார். திருமயிலைக் கோவிலில் அரச கட்டளைப்படி தினமும் தேவாரம் ஓதி வருகிறேன். இவள் என் மகள் நிலவுமொழி" என்று அறிமுகம் செய்துகொள்கிறார்.

கனிவுடன் முறுவலிக்கிறார் கோவில் அதிகாரி. "தெரியும்.  தங்கள் மகள் முன்னமே அதைச் சொல்லிவிட்டாள். களைப்பு மிகுதியால் கண்ணயர்ந்து விட்டீர்கள்போல இருக்கிறது. உங்களை அழைத்துச்சென்று வசதியாகத் தங்கவைக்கும்படி திருமந்திர ஓலைநாயகத்திடமிருந்து செய்தி வந்திருக்கிறது. என்னுடன் கோவில் விடுதிக்கு வாருங்கள்.  நீராடி, மாலைப் பூசையைக் கண்டு, ஏகாம்பரநாதரை வழிபட்டு இரவு கோவில் விடுதியிலேயே பசியாறி, அருகிலிருக்கும் வீட்டில் இரவைக் கழிக்கலாம். காலையில் ஓலைநாயகம் உங்களைச் சந்திப்பார். இன்று முக்கியமான அரசுப்பணி ஒன்று அவரை நிறுத்தி வைத்திருக்கிறது. தங்களுக்கு எது வேண்டுமானாலும், விடுதிக் காவலன் சோமசுந்தரனைக் கேளுங்கள். எல்லா வசதிகளையும் அவன் செய்துத் தருவான்" என்று நடக்க ஆரம்பிக்கிறார். இருவரும் அவரைப் பின்தொடர்கிறார்கள்.

நிலவுமொழிக்கு ஏதோ கனவு போல இருக்கிறது. ஏகாம்பரநாதர் கோவிலின் அதிகாரி தாங்கள் உறங்கி விழிக்கும் வரை அருகில் காத்திருந்ததும், அவர் தங்களை அடையாளம் கண்டுகொண்டதும், சிவாச்சாரியார் தாங்கள் தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்ததும் அவளுக்கு வியப்பாகவே இருக்கிறது. அப்படியென்றால் அவர்களை அவர் கண்காணித்துக் கொண்டுதானே இருந்திருக்க வேண்டும்? எது எப்படியிருந்தாலும், தனது தந்தைக்கு சிவாச்சாரியரின் சொற்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை எப்படிப் பிறந்தது?  ஒருவேளை இறைவன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவருக்கு மனிதர்கள் மீதும் நம்பிக்கை வைப்பது எளிதாக இருக்கிறதோ என்னவோ? பழையாறை மாளிகையிலும், தஞ்சையிலும் தங்கியிருந்த தனக்கு சிவாச்சாரியார் மீது ஏன் அப்படிப்பட்ட நம்பிக்கை பிறக்கவில்லை? ஒருவேளை அறிவு முதிர்ச்சியின்மை என்பது இதுதானோ? இருபது வயதிற்கும் மேலான தனக்கு இன்னுமா அறிவு முதிர்ச்சி வரவில்லை என்று நினைத்துப் பார்க்கிறாள்.

என்ன இருந்தாலும் சிவாச்சாரியரைத் தான் சந்திக்கப்போகிறோம் என்பது அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவரது சந்திப்பு தன் வாழ்வில் மீண்டும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்றும் அவளது உள்ளுணர்வு கூறிக்கொண்டே இருக்கிறது.

விடுதிக் காவலன் இரவில் அவர்களை கோவில் வீடு ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறான். வீடு சிறிதாக இருந்தாலும், மிகவும் தூய்மையாக இருக்கிறது. அவர்கள் உறங்குவதற்காக புதிய பாய்களும் தலையணைகளும் சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மூலையில் பானையில் விளாமிச்சவேர் ஊறும் குடிநீர் நிரம்பி இருக்கிறது. கூடத்தில் ஒரு நிலைக் கண்ணாடி – தூங்கா விளக்கு முற்றத்திற்கருகில் தொங்குகிறது.

"அய்யா, கொல்லையில் கிணறு இருக்கிறது. காலையில் நீராட கிணற்று நீரை உபயோகித்துக் கொள்ளுங்கள். கூடையில் பழங்கள் இருக்கின்றன. வேண்டிய அளவு சாப்பிடுங்கள். விடிந்து மூன்று நாழிகைக்குள் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன். உள்ளே அறையில் இருக்கும் பெட்டியில் நீங்கள் அணிந்துகொள்ள மாற்று உடைகள் இருக்கின்றன. அவற்றை அணிந்து வரும்படி ஓலைநாயகம் தெரிவித்திருக்கிறார். கதவைத் தாளிட்டுக்கொண்டு உறங்குங்கள்.  நான் திண்ணையில் உறங்கிக் கொண்டிருப்பேன். உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும், என்னைக் கூப்பிடுங்கள். வருகிறேன்" என்று கிளம்புகிறான் கோவில் காவலன்.

பிறையில் எரிந்து கொண்டிருக்கும் கைவிளக்கை எடுத்து அறைக் கதவைத் திறக்கிறாள் நிலவுமொழி. உள்ளே ஒரு மூலையில் பெரிய மரப்பெட்டி இருக்கிறது. அதன் அருகில் இருந்த முக்காலியின் மேல் ஒரு பேழை இருக்கிறது. அதை மெல்லத் திறந்து பார்த்தவள் அதிர்ச்சியில் தந்தையை விளிக்கிறாள்.  "இங்கே வந்து பாருங்கள் அப்பா!"

"என்னம்மா, ஏதாவது பூச்சி பொட்டு இருக்கிறதா? இரு, கூட்டுமாரை எடுத்து வருகிறேன்" என்று அவரிடமிருந்து பதில் வருகிறது.

"கூட்டுமாருக்கு அவசியமில்லை. இங்கே வந்துதான் பாருங்களேன்!" என்ற அவள் குரலில் இருந்த அவசரத்தைப் புரிந்து கொண்டு அறைக்குள் நுழைகிறார்.

நிலவுமொழியின் ஒரு கையில் நான்கைந்து தங்கச் சங்கிலிகள் தொங்குகின்றன. இன்னொரு கையில் வைரங்கள் பதித்த பத்து வளையல்கள் இருக்கின்றன. மரப்பெட்டியின் மீது வைத்திருக்கும் விளக்கு வெளியில் அவை பளபளக்கின்றன.

அவற்றைப் பார்த்து பொன்னம்பல ஓதுவார் அப்படியே பேச்சிழந்து நின்றுவிடுகிறார். மகளையும், அவள் கைகளில் உள்ள ஆபரணங்களையும் மாறிமாறிப் பார்க்கிறார். அவரது கண்கள் திறந்திருக்கும் பேழையில் படிகிறது. அதில் மேலும் பல நகைகள் உள்ளன. அவையும் நல்ல மணிகள் பதித்த நகைகளாகவே இருக்கின்றன. அவையும் விளக்கு வெளிச்சத்தில் தகதகவென்று மின்னுகின்றன. எப்படி அவை வந்தன என்று வினவுகிறார்.

"தெரியவில்லை.  நான் பேழையைத் திறந்து பார்த்தேன். பேழை முழுவதும் நகைகளாகவே இருக்கின்றன" என்று தன் கையில் உள்ள நகைகளையும், வளையல்களையும் பேழைக்குள் வைத்து மூடுகிறாள். பிறகு மரப்பெட்டியைத் திறக்கிறாள்.

பெட்டியின் உள்ளே கண்ணைப் பறிக்கும் சீனப்பட்டாடைகள் இருக்கின்றன. வண்ண நூல் வேலைப்பாடு செய்த மார்புக் கச்சைகளும், கீழாடைகளும், மேலாடைகளும், தலைப்பாகையும், சரிகை வேஷ்டிகளும் உள்ளன.

"இதென்ன குழப்பமாக இருக்கிறது! கோவில் காவலன் மாற்று உடைகள் என்றுதானே சொன்னான்? இது அரச குடும்பத்தினர் அணிந்துகொள்ளும் உடைகளாகவும், நகைகளாகவும் அல்லவா இருக்கின்றன! நான் வெளியே சென்று கோவில் காவலனை அழைத்து வருகிறேன்.  ஏதோ மாறி வந்துவிட்டது என்று நினைக்கிறேன்" என்றபடி அவளையும் அழைத்துக்கொண்டு வாசலுக்கு வருகிறார் ஓதுவார்.

அவர்கள் காலடிச் சத்தத்தைக் கேட்டவுடன் திண்ணையில் படுத்திருந்த விடுதிக் காவலன் எழுந்திருந்து, "என்ன வேணும்?" என்று விசாரிக்கிறான்.

"மாற்று உடைகள் பெட்டியில் இருக்குன்னு சொன்னியேப்பா. ஆனா, ஏதோ அரச குடும்பத்து உடைகள்தாம்ப்பா இருக்கு. தவிர ஒரு பேழையில் நிறைய அரச ஆபரணங்களும் இருக்குப்பா.  ஏதோ தவறு நடந்துபோயிருக்கோ என்னவோப்பா" என்று பதற்றமான குரலில் கேட்கிறார் ஓதுவார்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. சரியாகத்தான் இருக்கணும்.  ஓலைநாயகம் அய்யாதான் கொடுத்தனுப்பிச்சாரு. ஓதுவாரும், அவுங்க பொண்ணும் வருவாங்க, அவங்க நாளைக்கு அந்த உடைங்களைப் போட்டுக்கிணு வரணும்னு தகவல் சொல்லு. அதுலே இருக்கறது எல்லாம் அவுங்களுக்குத்தான்னும் சேதி அனுப்பியிருந்தாரு. ஒங்களுக்கு ஏதோ ஓலை வேற வச்சுருக்கறதாவும் சொல்லியிருந்தாரே பார்த்தீங்களா? இருட்டுலே எங்கேயாவது இருக்கும் பாருங்க. எல்லாம் உங்களுக்குத்தான். உங்கள கண்ணுல வச்சுக் காப்பாத்தத்தான் நான் திண்ணைலே படுத்துக்கிட்டு இருக்கேன். கவலையே படாதீங்க.  நல்லாப் படுத்துத் தூங்குங்க.  நாளைக்குப் பார்க்கலாம்."

திரும்பப் படுத்துக் கொண்டு விடுகிறான் கோவில் காவலன். அவன் தொண்டை மண்டல ஒற்றர் தலைவன் என்பதும், கோவில் அதிகாரி அவன் கீழ் பணியாற்றும் காஞ்சிப் பகுதி ஒற்றர்களில் ஒருவர் என்பதும் அரச இரகசியம்.

பேழைக்கு அடியில் இருந்த ஓலையில் அந்த நகைகளும், உடைகளும் அவர்களுக்கு அருள்மொழிநங்கையின் பரிசு என்று எழுதியிருக்கிறது. இரவு முழுவதும் நிலவுமொழிக்கு உறக்கமே வரவில்லை. மறுநாள் இந்த உடைகளை அணிந்து கொண்டு எங்கு செல்லப்போகிறோம், என்ன அதிசயம் காத்திருக்கிறது என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு மலைப்பாகவே இருக்கிறது.

ஆனால், அவளது தந்தையோ நிம்மதியாக மெல்லிய இழையாகக் குறட்டை விட்டவண்ணம் உறங்கிக் கொண்டிருக்கிறார். விடியுமா விடியுமா என்று தன்னையும் அறியாமல் உறங்கியவளைத் தட்டி எழுப்புகிறார் அவளது தந்தை.

வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்த நிலவுமொழி, கொல்லைக் கதவைத் திறந்து பின்புறம் சென்று நீராடி விட்டு வருகிறாள். அவள் திரும்பி வரும்பொழுது ஒரு மூதாட்டி அவளது தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்.

நிலவுமொழியைப் பார்த்தவுடன் தனது காவி படிந்த பற்கள் தெரிய புன்னகைக்கிறாள். என்ன என்பது போல கண்களாலேயே தந்தையை வினவுகிறாள் நிலவுமொழி.

"இவர்கள் உன்னை அலங்கரிக்க வந்திருக்கிறார்கள். சிவாச்சாரியார் இவர்களை அனுப்பி வைத்தாராம்."

"வாம்மா கண்ணு. எம்புட்டு அழகா இருக்கே! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு!" என்று அவள் முகத்தைத் தடவி திருஷ்டி நெறிக்கிறாள் அந்த மூதாட்டி.

தான் கொண்டு வந்த ஒரு சிறிய பெட்டியுடன் நிலவு மொழியை அறைக்குள் அழைத்துச் சென்று நன்கு அலங்கரித்து விடுகிறாள். அவள் பெட்டியில்தான் எத்தனை விதமான அழகு சாதனங்கள் – இதுவரை நிலவுமொழி அப்படிப்பட்ட சாதனங்களைப் பார்த்ததே இல்லை.

அவளுக்கு நன்றாகச் சீவிச் சிங்காரித்து, கண்ணில் மைதீட்டி, புருவங்களில் ஜவ்வாது கூட்டி, கூந்தலில் சாம்பிராணிப் புகையேற்றி, வளைத்துச் சுற்றி அவளது நீண்ட கூந்தலைக் கொண்டையாக முடிகிறாள். நகைப் பேழையைத் திறந்து ஆபரணங்களை எடுக்கிறாள்.  முடிந்த கொண்டையில் கல் பதித்த தங்கச் சங்கிலியைக் கட்டிவிடுகிறாள். நெற்றிச் சுட்டி, மூக்குத்திகள், காதுக் குழைகள் எல்லாவற்றையும் அணிவிக்கிறாள்.

அந்த மூதாட்டி தன் வேலையை முடித்து விட்டு கூடத்தில் இருந்த நிலைக்கண்ணாடி முன்பு தன்னை நிறுத்தியதும், அதில் தெரிந்தது தான்தான் என்று நிலவுமொழியால் நம்பவே முடியவில்லை.

அவளைக் கண்டு அவளது தந்தையும் பிரமித்துப் போய்விடுகிறார். அவரும் ஒரு அரசு அதிகாரி மாதிரியே காட்சியளிக்கிறார். கோவில் காவலன் அவருக்கு மாற்று உடைகளை அணிவித்திருக்கிறான்.

ஒரு சிவிகை வாயிலில் வந்து நிற்கிறது. மூதாட்டி நிலவுமொழியை அதில் அமரும்படி சுட்டிக் காட்டுகிறாள். அதன் திரையை விலக்கிப் பார்த்த நிலவுமொழி திடுக்கிடுகிறாள். சிவிகையின் உள்ளே சிரித்தவாறு அமர்ந்திருக்கிறாள் அருள்மொழிநங்கை.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com