பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 9

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 9

ஒரு அரிசோனன்

வடபெண்ணை ஆற்றங்கரை, விக்கிரமசிம்மபுரி 

காளயுக்தி, மாசி 13 – பிப்ரவரி 28, 1019 

"சிவராத்திரியுடன் சில்லாப்பு நின்றுவிடும்" என்னும் பழமொழியை உறுதிசெய்வது போலப் பனி பெய்வது நின்றுவிட்டிருக்கிறது. வடபெண்ணை ஆற்றின் தென்கரையில் தொண்டை மண்டலத்தின் வட எல்லையில் அமைந்திருக்கும் விக்கிரமசிம்மபுரி12 தெலுங்கு பேசும் ஆந்திரத்திற்கும், தமிழ்கூறும் மாநிலத்திற்கும் பாலமாகத் திகழ்கிறது. 

"வடவேங்கட முதல் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்" என்று தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் குறித்திருந்தாலும், விக்கிரமசிம்மபுரி வரை தற்பொழுது தமிழ் அறியப்பட்டு வருகிறது. இராஜராஜரின் தமிழ்த்திருப்பணித் துவக்கத்தால் அங்கு சென்ற தமிழாசிரியர்களும், அரசு அலுவலர்களும் தமிழைப் பேசிப் பரப்பி வந்த காரணத்தால் அரசுத் தொடர்புள்ள அனைவருமே அப்பகுதியில் தமிழை அறிந்திருக்கின்றனர். 

உடற் சூடு தீரும் வரை பெண்ணாற்றில் நன்கு நீந்திக் குளித்துவிட்டு, மாலை வழிபாட்டை முடித்துச் சிவாச்சாரி கரையேறுகிறான். ஈராயிரவன் பல்லவராயர் அவனுக்காகக் கரையில் காத்துக்கொண்டிருக்கிறார். 

"என்ன சிவாச்சாரியாரே! வெகுநேரமாக மாலை வழிபாட்டைச் செய்கிறீரே! கதிரவனும் சாய்ந்து விட்டானே! வயிற்றைக் கவனிக்க வேண்டாமா?" என்று தனக்கே உரித்தான வயிற்றுக் கவலையைத் தெரிவிக்கிறார். 

"மனம் சரியாக இல்லை பல்லவராயரே! அதனால்தான் எம்பெருமானிடம் முறையிட்டேன்" எனச் சிவாச்சாரி பதில் கூறுகிறான். 

"உமக்கா மனம் சரியில்லை? அதிசயமாக அல்லவா உள்ளது? கோப்பரகேசரியாரின் மருமகன் நீர். இளம் வயதிலேயே திரிபுவனச் சக்ரவர்த்தியார் உம்மைத் தமது திருப்பணி ஆலோசகராக நியமித்ததோடு, சோழப்பேரரசின் திருமந்திர ஓலைநாயகமாகவும் ஆக்கினார். சோழநாடு முழுவதும் உம்மை மதிக்கின்றனர். அப்படி இருக்கையில் உமக்கு எப்படி மனம் சரியில்லாது இருக்கக்கூடும்?" என்ற பல்லவராயர், "உம்மைவிட மிக வயதானவன் நான். உமக்குப் பெரிய தமையன் என்றெண்ணி என்னிடம் உமது மனக்கவலையைப் பகிர்ந்துகொள்ளும். உமது மனச்சுமையாவது குறையும்" என்று அக்கறையுடன் கேட்கிறார். 

"பதவிகளால் மனம் நிறைந்துவிடாது பல்லவராயரே! அவற்றுடன் பொறுப்புகளும் நிறைய வந்து சேருகின்றன. நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட முக்கியமான ஒரு பொறுப்பை நிறைவேற்ற முற்படும்போது வேறொரு முக்கியப் பொறுப்பை பின்தள்ள வேண்டியிருக்கிறது. அதுவாவது சரி, சற்றுக் காலம் தள்ளியாவது அப்பொறுப்பை நிறைவேற்றலாம். சிலபோது ஒன்றை நிறைவேற்றினால், இன்னொன்று முழுமையடையாது போகும் நிலை வருகிறது. தலையாய அப்பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்ற இயலாதுபோகுமே என்றுதான் மனம் அலட்டிக்கொள்கின்றது. நிறையப் பதவிகளைச் சுமந்துகொண்டு ஒரு பொறுப்பைக்கூட மனநிறைவுடன் முழுமையாகச் செய்ய இயலாது போவதுதான் சுமையாக அழுத்துவதோடு மட்டுமன்றி, மனதினை அரித்தும் எடுக்கிறது" என்று பதில் வருகிறது. 

[12.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர், பதிமூன்றாம் நூற்றாண்டு வரை விக்கிரமசிம்மபுரி என்று அழைக்கப்பட்டது. தொண்டைமண்டலத்தில் எல்லையில் வடபெண்ணை ஆற்றுக்கரையில் இருந்த அவ்வூர் பல்லவர்களாலும், அதற்குப் பிறகு சோழர்களாலும், கடைசியில் தெலுங்குச் சோடர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது.]

"அதென்ன இப்படிச் சொல்கிறீர்? சோழ நாட்டில் அனைவரும் உமது பணியைப் பாராட்டித்தானே பேசுகின்றனர்? எப்பணியைக் கொடுத்தாலும், அதைச் சிறப்பாக நிறைவேற்றுபவர், எவ்வளவு பதவிகளை ஏற்பினும், சிறிதும் தலைக்கனம் அற்றவர், எளிமையான வாழ்க்கை நடத்துபவர், தனக்கென்று சுயநலமாய்ச் செயல்படாது, சோணாட்டுக்காகவும், கோப்பரகேசரியாரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டும் நடப்பவர் என்ற நற்பெயரை ஈட்டியிருக்கிறீரே! அப்படியிருந்தும் பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்ற இயலாது போகுமோ என நீர் வருந்துவதுதான் எனக்குப் புரியவில்லை. நான் போர் வீரன், சிவாச்சாரியாரே! மனதைப் படிக்கும் வித்தை பயிலாதவன். சற்று விளக்கித்தான் சொல்லுமேன்!" பல்லவராயரின் குரல் சிவாச்சாரியின் விளக்கத்தை நம்பாதது போல ஒலிக்கிறது. 

"சில சமயம் உடைத்துப் பேச இயலாது பல்லவராயரே!  உங்களைப் போன்று நானும் போர் வீரனாக இருந்துவிட்டாலோ, அன்றிக் கோவிலில் இறைவனை அர்ச்சிக்கும் சிவாச்சாரிப் பணியாற்றினாலோ, ஒருவேளை அப்படிப்பட்ட நிம்மதி கிட்டியிருக்கலாமோ என்னவோ?  என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொறுப்பும் வெவ்வேறு பக்கம் பிடித்து இழுக்கின்றன. அதனால் என் மனம் ஒவ்வாத செயல்களைச் செய்ய நேரிடுகின்றது. அது போகட்டும், இப்போது என் மனத்தை வாட்டுவது…" என்று சற்று நிறுத்திய சிவாச்சாரி, "என் சொல்லுக்காகச் சேர நாடு சென்ற காடவராயன், அவன் மனைவியான நிலவுமொழி, இவர்களின் கதி என்னாயிற்றோ என்பதுதான்" என்று சிலகணங்கள் நிறுத்திவிட்டுப் பின் தொடர்கிறான். 

"சேர நாட்டிற்குப் படையெடுத்துச் சென்ற இளவரசர் ஆளவந்தானிடமிருந்து தகவல் நேராகக் கோப்பரகேசரியாருக்குச் செல்வதால், அவ்விருவரைப் பற்றிக் கடந்த நான்கு திங்களுக்கு மேலாக எனக்குத் தகவல் வரவில்லை. ஜயங்கொண்ட சோழபுரத்தில் கோவிலின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறு பணித்ததால் அதை மும்முரமாகக் கவனித்து வந்த என்னிடம் திடுதிப்பென்று, 'உடனே வேங்கைநாட்டுக்குச் செல்வீராக! இராஜேந்திர சோழபுரத்தில்13 தண்டூன்றியிருக்கும் நமது படைகளுடன் வடமண்டலத் தண்டநாயகருடன் இணைந்து வெங்கிக்குப் படைகளை நடத்திச்சென்று, வேங்கைநாடு அரியணை நமது கைமீறாமல் பார்த்துக்கொள்வீராக. யாருக்கும், எதற்காகவும் பணிவு காட்ட வேண்டாம். யாம் உமக்குத் தகவல் அனுப்பும் வரை அங்கு இராஜராஜ நரேந்திரனைக் கவனித்துக் கொள்வீராக' என்று அனுப்பிய கோப்பரகேசரியார் உங்களிடம், "காஞ்சியில் உள்ள படைகள் அனைத்தையும் திரட்டிக்கொண்டு விக்கிரமசிம்மபுரி சென்று, மேற்குத் தண்டநாயகரின் படைகள் வரும் வரை காத்திருப்பீராக" என்று சொல்லியதன் பொருள்தான் எனக்கு விளங்கவில்லை. இளவல் இராஜாதிராஜனையும் மதுரைக்கு அனுப்பிவிட்டார். அவரை அதைப்பற்றிக் கேட்டதற்கு…" என்றவன், மேலே எதுவும் சொல்லாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டான். 

"கேட்டதற்குக் கோப்பரகேசரியார் என்ன சொன்னார்?" மேலே சொல்லும்படி பல்லவராயர் அவனைத் தூண்டுவிக்கிறார். 

தேவைக்கும் அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று நாக்கைக் கடித்துக்கொண்ட சிவாச்சாரி, "கோப்பரகேசரியாரைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே பல்லவராயரே! சில சமயம் அவர் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ள எவரால் இயலும்? ஏதோ பெரிய திட்டத்திற்காகத்தான் பின்னல்களைப் போடுகிறார் என எண்ணுகிறேன்" எனக் கூறிச் சமாளிக்கிறான். 

"நான் போர் வீரன்தான், சிவாச்சாரியாரே!  மனோதத்துவம் அறியாதவன்தான். ஆனால், மழுப்புவதை என்னால் அறிந்துகொள்ள இயலும். உமக்குச் சொல்ல விருப்பமில்லாவிடில் மேற்கொண்டு கேட்க மாட்டேன். விடுதி வந்துவிட்டது. நல்ல சாப்பாட்டின் மணம் மூக்கை இதமாக வருடுகின்றது. நன்றாக உணவருந்திவிட்டு உறங்கும். உமது கவலைகள் பறந்துவிடும்" என்று பல்லவராயர் சிரித்தபடி நடக்கிறார். 

'இவரைப் போலக் கவலைப்படாமல் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? போர், அதற்குப்பின் உணவு – இந்த இரண்டைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படாது எப்பொழுதும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்' என்று நினத்த சிவாச்சாரி, "பல்லவராயரே! உங்களைப்போல் இருந்துவிட்டால் கவலை அருகில் வரக்கூட அஞ்சுமே!  அந்தக் கலையை எனக்குக் கற்றுக்கொடுங்கள்!" என்று அவரைப் புகழ்கிறான். 

[13.தற்பொழுதைய விஜயவாடா, சோழர்காலத்தில் (பதினொன்றிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டுவரை) இராஜேந்திர சோழபுரம் என்றும், விசயவாடை என்றும் அழைக்கப்பட்டு வந்தது.]

"சிவாச்சாரியாரே, உம் மனதில் இழையோடும் எண்ணங்களை மறைக்கவல்லவர் நீர்!  ஏதோ உம்மையும் அறியாமல் உள்ளக்கிடப்பை என்னிடம் பகிர்ந்துகொண்டீரா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காகச் சிறிது அதைக் கோடிகாட்டினீரா – நானறியேன். இருப்பினும், உமது கேள்விக்கான பதிலைச் சொல்லிவிடுகிறேன். எந்தப் பொறுப்பைப் பற்றியும் — கவலைப்பட்டு மட்டுமே அதை நிறைவேற்ற இயலுமா? ஆகவே, நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதே கிடையாது. எல்லாவற்றையும் நான் வழிபடும் ஏகாம்பரநாதனிடம் விட்டுவிட்டுச் சக்திக்கு இயன்றபடி முழுமனதுடன் செய்கிறேன். எனது ஒரே கவலை – எனக்குள்ளேயே இருந்துகொண்டு, எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் பசித்தீக்கு எப்பொழுது ஆகுதி செய்வது என்பதுதான்!"  என்று அட்டகாசமாகச் சிரிக்கிறார். 

அவரது சிரிப்பில் கலந்துகொண்ட சிவாச்சாரி அவருடன் நடக்கிறான். விடுதியில் பசியாறிவிட்டுப் படுத்ததும், தனக்கும் இராஜேந்திரனுக்கும் இடையே மூன்று திங்களுக்கு முன் நடந்த விவாதத்தை அவனது மனம் அசைபோடுகிறது… 

… சேர நாட்டுக்கு ஆளவந்தானைப் படையெடுத்துச் செல்லும்படி அனுப்பிவிட்டு, அவனையும் இராஜாதிராஜனையும் இருத்திக்கொண்ட இராஜேந்திரன் பேசத் தொடங்கினான். "சிவாச்சாரியாரே! உம்மிடம் முன்பே சொல்லியுள்ளேன். எனது முப்பாட்டனாருக்கு முப்பாட்டனாரான விஜயாலயசோழர் அடிக்கல் நாட்டிய சோழப் பேரரசை மேலும் விரிவாக்க எனது தந்தையார் மிகப்பெரிய அடித்தளம் எழுப்பினார். அதற்கு மேல் பெரிய ஒரு மாளிகையைக் கட்ட வேண்டும். இல்லாதுபோனால், இந்த இராஜேந்திரன் சாதாரணமான ஓர் அரசனாகி விடுவான். வரலாறு முப்பாட்டனாரையும், தந்தையையும் போற்றுமளவுக்கு என்னைப் போற்றாது. அவர்களுக்குக் கிட்டப்போகும் மரபுப்பெருமை எனக்குக் கிட்டாது.  எனது வழித்தோன்றலான இராஜாதிராஜனுக்கும், அவனது சந்ததியாருக்கும் முன்மாதிரியாக நான் விளங்காது போய்விடுவேன். ஆகையால், நான் கண்டுகொண்டிருக்கும் மாபெரும் கனவை நனவாக்கத் துடிக்கிறேன். எந்தத் தமிழ் மன்னனும் செய்யாத அளவுக்குத் தமிழ்ப் பேரரசை விரிவாக்க விரும்புகிறேன்." 

இருவரும் தன் வேட்கையைப் புரிந்துகொள்கின்றனர் என்பதை அவர்களது முகபாவத்தில் அறிந்த இராஜேந்திரன் உரத்த குரலில் மீண்டும் பேசுகிறான். 

"ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று பாண்டியனையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனச் சேரனையும், மதுரையைத் தீயிட்டுக் கொளுத்திய பத்தினித் தெய்வத்திற்குச் சிலையமைக்க இமயத்திலிருந்து வடபுல மன்னர்தம் தலையில் கல்லேற்றித் தருவித்த சேரன் செங்குட்டுவன் தன்னையும் – காவியங்கள் உயர்த்திப் பரணி பாடுகின்றன.  இப்படிப் பாண்டியரும் சேரரும் புகழ்ந்து பாடப்படும்போழ்து, எந்தச் சோழன் அவர்களுக்கு இணையாகப் பாடப்பட்டிருக்கிறான்? காவிரிக்குக் கரையமைத்த கரிகால் பெருவளத்தான் சோழரும் தமிழகத்திலும், இலங்கையிலும்தானே பெரும்புகழ் ஈட்டினார்? இப்பரந்த பாரத பூமியில் இமயம் வரை சென்று புகழ் பெறவில்லையே!  அதைப் போக்க விரும்புகிறன்." 

இராஜேந்திரனின் பெரிய கருவிழிகள் இன்னும் பெரிதாகின. 

"சிவபெருமான் தலையிலிருந்து, பகீரதனால் பூவுலக்குக் கொணரப்பட்ட கங்கையின் நீரைக் கொணர்ந்து, ஜயங்கொண்ட சோழபுரத்தில் அமைத்துவரும் புதிதாக பெருவுடையார் கோவிலுக்குக் குடமுழுக்கு செய்வித்துச் சோழர்களுக்கு இவ்வையகத்தில் பேரையும் புகழையும் ஈட்ட ஆர்வமாக உள்ளேன். என் தந்தையாருக்கும், கதிரவன் வழிவந்த எனது சோழப் பரம்பரைக்கும்14 ஆற்றக்கூடிய சிறப்பான பணி வேறொன்றுமில்லை!" என்று பெருமிதத்துடன் சொல்லி முடித்தான். 

அவன் கண்கள் பளிச்சிட்டன. தனது திட்டம் நிறைவேறுவதைத் தன் மனக்கண் முன்பு அவனால் காண முடிந்தது. 

சிவாச்சாரி அப்படியே பேச்சிழந்து விட்டான். 

[14.சோழர்கள் தம்மைச் சூரிய வம்சம் என்றும், பாண்டியர் தம்மைச் சந்திர வம்சம் எனவும் சிறப்பித்துக் கொண்டனர்.]

இதற்கு எவ்வளவு பொருட்செலவாகும், எத்தனை ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழப்பர் என அவன் மனம் கணக்குப்போட்டுப் பார்த்தது. இதற்காகச் சோழ நாட்டுச் செல்வம் எவ்வளவு வீணாகும், எத்தனை பெண்கள் கணவரை இழப்பர், அதனால் இராஜராஜரின் தமிழ்த்திருப்பணி எப்படித் தடைபட்டுப் போகும் என்றுதான் அவனுக்குத் தோன்றியது. 

ஆனால், இராஜாதிராஜனோ உடனே துள்ளியெழுந்தான். "ஆணையிடுங்கள் தந்தையே!  எப்போது என்று சொல்லுங்கள். எனது தினவெடுத்த தோள்களால் உங்கள் கனவை நனவாக்குகிறேன். எதிர்ப்பவர்களை என் யானையின் கால்களில் நசுக்கி, எமனுலகுக்கு விருந்தாக அனுப்புகிறேன்!" அவனது குரலில் உற்சாகம் கரை புரண்டது. 

இராஜேந்திரனோ, எவ்வுணர்ச்சியையும் முகத்தில் காட்டாத சிவாச்சாரியை உற்று நோக்கினான். 

"சிவாச்சாரியாரே! நீர் என்ன எண்ணுகிறீர்?"  இராஜேந்திரனிடமிருந்து கேள்வி பிறந்தது. 

"தங்கள் சித்தம், எனது பாக்கியம்" என்று சிவாச்சாரி பணிவுடன் பதிலளித்தான். 

"நீர் எனது ஆணைக்குக் கட்டுப்படுவீர் என்பதை நானறிவேன். என் திட்டத்தைப் பற்றி நீர் என்ன நினைக்கிறீர் என்பதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தும். இது எமது ஆணை!" 

இராஜேந்திரனின் குரலில் சிறிது வெப்பமிருப்பதைச் சிவாச்சாரி உணர்ந்து கொள்கிறான். 

"கோப்பரகேசரியாரே! நான் தங்களது ஓலைநாயகம், தமிழ்த்திருப்பணி ஆலோசகன்.  தங்களுக்குக் கருவூராரால் பணியாளனாக அளிக்கப்பட்டவன், அவ்வளவே!  ஆகவே, என்னை இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டால் என்ன மறுமொழியளிக்க இயலும்? என்னைத் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கலாமா?" என்று இறைஞ்சிக் கேள்விக்குப் பதிலளிக்காமல் தப்பிக்கப் பார்த்தான். 

இராஜேந்திரனோ அவனை விடுவதாக இல்லை. "உமது பேச்சிலும் நியாயம் உள்ளது. எமக்கு இப்பெரிய திட்டத்தைப்பற்றி ஆலோசனை சொல்லவேண்டுமென்றால், உம்மை யாம் அந்நிலையில் இருத்த வேண்டும் அல்லவா? இல்லாவிடில் உமது உள்ளத்திலிருந்து எதுவும் வராது. எனவே…" தன் நெற்றியில் விரல்களால் சிலகணங்கள் தாளமிடுகிறான். முகம் மலர்கிறது. 

"ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறீர். உமது குறை, நீர் தண்டநாயகரோ அல்லது அமைச்சரோ இல்லை என்பதுதானே! இதோ, தருகிறோம் அவ்விரு பதவிகளை! நீர் இனி எமது படைத்தலைவரில் ஒருவராகி அமைச்சரும் ஆவீர். உம்மை எமது பிரம்மராயராக – இராஜேந்திரசோழப் பிரம்மராயர்15 என்னும் பட்டத்துடன் நியமிக்கிறோம்" என்றவன் இராஜாதிராஜனின் பக்கம் திரும்புகிறான். 

"இராஜாதிராஜா, நீ எமது இவ்வாணைக்குச் சாட்சி. ஓலைநாயகமாக இருப்பதால், இவர் தன்னைத்தானே பிரம்மராயராக நியமித்ததாகச் செப்பேட்டில் பதிவு செய்ய உரிமையில்லை. அதலால், உனக்கு ஓலைநாயகப் பதவியைத் தாற்காலிகமாக அளிக்கிறோம். இவரை இராஜேந்திரசோழப் பிரம்மராயராக நியமித்திருக்கிறோம் எனப் பதிவு செய்வாயாக!" என்று முழங்கினான். சிவாச்சாரி செய்வதறியாது திகைத்து நின்றான். 

'ம்...  தயக்கமின்றி இனி அமைச்சனாகவும், தண்டநாயகனாகவும் எமக்கு மறுமொழி அளிப்பீராக!" இராஜேந்திரனின் சொற்கள் சிவாச்சாரியைக் கிடுக்கிப் பிடியாக இறுக்கின. 

[15.நரக்கன் கிருஷ்ணன் ராமன் என்ற அந்தணரை இராஜேந்திர சோழன் தனது படைத்தலைவராக நியமித்து இராஜேந்திரசோழ பிரம்மராயன் என்ற பட்டத்தை அளித்தான்.  1.  Cholas, by K.A.  Neelakanta Sastri, University of Madras, 1935.  2.  Krishnan Raman, Wikipedia, ]

"சொல்கிறேன், கோப்பரகேசரியாரே! முதலில் ஒரு அமைச்சனாக எனது மறுமொழி இருக்கும்.  பாதித் தொண்டைநாடும், பாதிப் பாண்டிநாடும் உள்ளடங்கிய சோழ நாட்டின் செல்வாக்கையும் ஆற்றலையும் – தமிழகத்துடன் கருநாட்டிலும், ஆந்திரத்திலும், இலங்கையில் பொலனருவை வரையும் தங்கள் தந்தையார் விரிவுபடுத்தினார். தாங்களோ, இலங்கை முழுவதிலும் புலிக்கொடியைப் பறக்கச் செய்து, நக்காவரம், இலட்சத் தீவுகள் இவற்றிலும் சோழநாட்டின் செல்வாக்கைப் பரப்பியுள்ளீர்கள். 

"இச்செல்வாக்கை நிலைநிறுத்துவதே தங்கள் முதலான நோக்கமாக இருத்தல் வேண்டும்.  புதுத் தலைநகரை நிர்மாணிக்கும் இந்நேரத்தில் வடபாரதத்துக்குப் படையெடுத்துச் செல்வது நம்நாட்டுச் செல்வத்தைக் குறைப்பதோடு, சோழ வீரர்களுக்கு உயிர்ச்சேதத்தையும் விளைவிக்கும். குடமுழுக்குக்குக் கங்கைநீர் வேண்டுமென்றால், காசி அரசருக்குப் பரிசுகள் அனுப்பி திரிவேணி சங்கமத்திலிருந்தே நிறையக் கங்கை நீரைக் கொணரலாம். காசிக்குச் சென்று திரும்பிய அந்தணர் பலர் சோணாட்டில் உளர். அவர்களைத் தக்க துணையுடன் தங்கள் சார்பாக அனுப்பினால், மிகக் குறைந்த செலவில் இதைச் சாதித்துவிடலாம்" இதைச் சொல்லிவிட்டு இராஜேந்திரனின் முகத்தை நோக்கினான். 

மேலே தொடரச் சொல்வது போலத் தலையை அசைத்தான் இராஜேந்திரன். அவன் முகம் கற்சிலையாக இருந்தது. 

"இப்பொழுது பிரம்மராயனாகவும், தமிழ்த்திருப்பணி ஆலோசகனுமாகப் பகருகின்றேன்.  நமது கவனத்தை ஈழத்தின் பக்கம் அதிகமாகச் செலுத்த வேண்டும். நம் நாட்டுக்குத் தொல்லை கொடுக்க நினைப்போருக்கு அது அடைக்கலமளிக்கும் இடமாகப் பரிமளித்து வருகின்றது. மகிந்தனின் மகன் கசாபன் இன்னும் மலைகளில் ஒளிந்து வாழ்ந்து வருகிறான்.  அவனைப் பிடித்தழித்து, தமிழை அங்கு பரப்பித் தமிழராட்சி அங்கு நிலைபெறச் செய்ய வேண்டும். தமிழ் அங்கு பேசப்படாத வரை அங்கிருக்கும் தமிழருக்கு என்றும் உயிர் மீது அச்சம் இருந்துகொண்டேதான் இருக்கும். சேர நாட்டுக்குச் செல்லவிருக்கும் தங்கள் மகனுக்குத் துணையாகச் செல்ல விரும்புகிறேன். பாண்டிநாட்டுக்குச் செல்லவிருக்கும் இளவரசருக்குத் துணைநிற்கப் படை வேண்டும். 

"கருநாட்டின் வட எல்லையான துங்கபத்திரையும், அது கலக்கும் கிருஷ்ணாவும் நமது பேரரசுக்கு இயற்கை அரணாக அமைந்துள்ளன. வேங்கைநாடோ கிருஷ்ணாவுக்கும் கோதாவரிக்கும் நடுவில் மட்டுமல்லாது, அதற்கு வடக்கிலும் எல்லைகொண்டிருக்கிறது.  அவ்வாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடும்போது, நம்மால் அதைக் கடந்து செல்ல இயலாது என்பதை அறிந்த மேலைச்சளுக்கியர் வேங்கைநாட்டின் மீது படையெடுக்காமலிருக்க நமது படைகளை அங்கு நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கிறது. மேலும், குந்தவி தேவியாரின் கணவர் விமலாதித்தர் காலமடைந்ததால், தற்பொழுது வேங்கைநாட்டின் நிலை மோசமாகி வருகிறது.  விமலாதித்தரின் இளைய தாரத்தின் மகன் விஜயாதித்தனுடன் சேர்ந்துகொண்டு, மேலைச்சளுக்கியர் அங்கு அரிசுரிமைப் பிரச்னையைக் கொணர முயற்சி செய்கிறார்கள்.  ஆகவே…" என்ற சிவாச்சாரியை இராஜேந்திரன் கையமர்த்தி நிறுத்தினான். 

"இதையெல்லாம் யாமும் யோசித்துத்தான் பார்த்தோம். அதனால்தான் உம்மை வேங்கைநாட்டுக்கு அனுப்பத் தீர்மானித்திருக்கிறோம். உடனே வேங்கைநாட்டுக்குச் செல்வீராக! இராஜேந்திர சோழபுரத்தில் தண்டூன்றியிருக்கும் நமது படைகளுடன் வடமண்டலத் தண்டநாயகருடன் இணைந்து வெங்கிக்குப் படைகளை நடத்திச் சென்று, வேங்கைநாடு அரியணை நமது கைமீறாமல் பார்த்துக்கொள்வீராக. யாருக்கும், எதற்காகவும் பணிவுகாட்ட வேண்டாம்.  யாம் உமக்குத் தகவல் அனுப்பும் வரை அங்கு இராஜராஜ நரேந்திரனைக் கவனித்துக் கொள்வீராக! நீர் வேங்கைநாடு கிளம்புவதற்கு முன் பெருவுடையாரின் கற்றளிப்பணியை விரைவுபடுத்தத் திட்டம்தீட்டி எமக்குத் தருவீராக!" என்று அழுத்தம் திருத்தமாகத் தன் ஆணைகளைப் பிறப்பித்தான். 

சிவாச்சாரி அதிர்ந்துபோனான். இருக்கும் இரண்டு பதவிகள் போதாதென்று மேலும் முக்கியமான இரு பதவிகளைக் கொடுத்து, வேங்கைநாட்டின் அரியணையைக் காத்து வரும்படி தன்னை ஏன் அங்கு அனுப்புகிறான் என்று புரியாமல் தவித்தான். அங்கு இராஜாதிராஜனையோ, இராஜேந்திரதேவனையோ அனுப்பாது தன்னை அனுப்ப முடிவெடுத்தது அவனைக் குழப்பியது. தன் மனதில் பட்டதைக் கேட்டறிந்தவன், அதுபற்றி என்ன முடிவெடுக்கப்போகிறானோ? 

"தங்கள் ஆணையைச் சிரமேற்கொள்வேன் கோப்பரகேசரியாரே!  என் மனதிலுள்ளதை உங்களிடம் ஒளிக்காது கூறினேன். அதுபற்றித் தங்கள் கருத்தை…" என்றவனை இடைமறித்த இராஜேந்திரன், "சிவாச்… இல்லையில்லை, பிரம்மராயரே! அமைச்சராகத் திருப்பணி ஆலோசகராகத் தண்டநாயகராக உமது கருத்தைச் சொல்வதுடன் உமது கடமை முடிந்தது.  முடிவெடிப்பது எமது உரிமை. அதற்கான காரணத்தை உமக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை" என்று வெடுக்கென்று சொன்னான். அவன் குரலில் குறும்பு தாண்டவமாடுகிறதா...? 

"அரசராய் மறுமொழி அளிக்க வேண்டாம். நண்பராக...?" எனச் சிவாச்சாரி இழுத்தான். 

இவர்களின் உரையாடலின் முழுப்பொருளை இராஜாதிராஜன் அறியாவிடினும், தன் தந்தை மனதில் ஏதோ திட்டத்தைத் தீட்டிவிட்டார், அதைப் பற்றிச் சிவாச்சாரியின் கருத்தை அறிய மட்டுமே விரும்புகிறார் என்றும், தன் திட்டமென்ன என்பதைத் தகுந்த காலம் வரும் வரை ரகசியமாகவே வைத்திருப்பார் என்றும் அறிந்துகொண்டான். 

"நண்பனாகத்தான் உமது கருத்தைக் கேட்டேன். பிரம்மாதிராயர் பதவியைப் பெறாமல் வாயைத் திறக்கமாட்டேனென்று பிடிவாதமல்லவா பிடித்தீர்?  இப்பொழுது மட்டும்…" எனச் சிரித்த இராஜேந்திரன், "சொல்கிறேன்… சொல்கிறேன். "நீர் இன்றும் என் தந்தையார் உயிருடன் இருப்பதாகவே நினைத்து, அவரது தமிழ்த்திருப்பணி ஆலோசகராகவும், ஓலைநாயகமாகவும் செயலாற்றி வருகிறீர். உம்மைத் தந்தையாரின் நிழலிலிருந்து எனது நிழலுக்கு மாற்றத்தான் செயல்பட்டு வருகிறேன். ஆயினும் அது மிகவும் கடினமாகத்தான் உள்ளது. 

"நண்பனால் மட்டுமே துணிவாகத் தன் கருத்தை – மாறுபட்ட கருத்தை அரசனுக்குச் சொல்ல முடியும்.  நீர் என்றும் எனது நண்பர் என்பதால்தான் கடினமான அரசு விவகாரங்களில் அடிக்கடி மாறுபட்ட கோணமுள்ள கருத்துகளை உம்மிடம் கேட்க விரும்புகிறேன். உமது கருத்துக்கு அதிக மதிப்புக் கொடுத்து, நானே அதை விரும்பிக் கேட்டாலும், அரசனாக இருப்பதால், உமது எல்லாக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலையும் இருக்கும். பல்வேறு காரணங்களால் உமக்கு விளக்கம் கொடுக்க வேண்டாம் என்ற முடிவையும் எடுக்க நேரிடுகிறது." 

தன் விளக்கத்தை ஒரு கணம் நிறுத்திய இராஜேந்திரன், சிவாச்சாரியின் முகத்தில் ஏற்பட்ட மிக லேசான மாற்றத்தை கவனிக்கத் தவறவில்லை. மனதிற்குள் புன்னகைத்தவாறே தன் விளக்கத்தைத் தொடர்ந்தான். 

"உமது நெஞ்சில் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டிருக்கிறது என்றும் நானறிவேன். அதைத் தகுந்த சமயத்தில் அறிந்து, அஞ்சனமும் இடுவேன். இப்பொழுது அதற்கு இயலாத சூழ்நிலை என்று மட்டும் அறிந்துகொள்வீராக. உம்மிடம் இராஜாதிராஜன் அறிவுரையும், ஆலோசனையும் கேட்டுக்கொள்ளும் நிலையில் இருப்பதால்தான், அவனெதிரில் இந்த உரையாடலை நடத்தினேன். ஆளவந்தானுக்குச் சேர நாட்டுத் தாக்குதலுக்குத் தகுந்த ஆலோசனை சொல்லி அனுப்புவீராக. இராஜாதிராஜனுடன் சில தனிப்பட்ட விஷயங்களைப் பேச வேண்டியுள்ளது" என்று அனுப்பி விட்டான்… 

… உறக்கம் மெல்லச் சிவாச்சாரியை – இல்லை, இராஜேந்திரசோழ பிரம்மராயனைத் தழுவிக் கொள்கிறது. 

தம்பிரான் இல்லு, திருசிவப்பேரூர் 

காளயுக்தி, மாசி 23 – மார்ச் 8, 1018 

சீப்புச்சீப்பாய்த் தொங்கும் வாழைக்குலையைப் பார்க்கிறாள் நிலவுமொழி. ஒருவிதத்தில் பார்த்தால், அந்த வாழை மரமும் தானும் ஒன்றுதான் என்று அவளுக்குத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட உணர்வு அடிக்கடி தனக்குத் தோன்றுவது ஏன் என்று அவளுக்குப் புரியவில்லை.  வயிற்றில் குழந்தை உதைப்பது அவளுக்குத் தெரிகிறது. தாய்மையை உணர்த்தும் அந்நிகழ்ச்சியால் பெருமிதமடைகிறாள். 

சந்திரை அவளருகில் வருகிறாள். "அக்கா!" இப்பொழுதெல்லாம் 'சேச்சி' என்றழைக்காமல், 'அக்கா' என்றே அழைக்கிறாள். "எந்தா வலிய சிந்தன?" சேர நாட்டில் 'ஐ' என முடியும் சொற்களை, 'அ'வில் முடிப்பது வழக்கம். 

"ஒன்றுமில்லை சந்திரை. அந்த வாழை மரத்தைப் பார்த்தாயா?" 

"அதைத்தான் பிரதி திவசமும் ஞான் நோக்குன்னதானு. எந்தா விசேஷமானு?" 

"அதைப்பார்த்தால் நானே அந்த வாழை மரமாகியது போலத் தோன்றுகிறது. ஏன் அப்படித் தோன்றுகிறதோ தெரியவில்லை." 

"எனிக்கும் அதோட விசேஷம் மனசிலாகல அக்கா. அம்மயை விளிச்சுக் கேட்கும். அம்ம, அம்ம!  இவிட கொறச்சு வரும்!" என்று அங்கு தூணில் சாய்ந்து கண்மூடி ஏதோ சிந்திக்கும் தன் தாய் இந்துமதி தம்புராட்டியை சந்திரை உரக்க அழைக்கிறாள். 

கண்களைத் திறக்காமலேயே, "எந்தா சேதி, மோளே? எனிக்குக் களப்பா இருக்கு" என்று சொல்கிறாள் தம்புராட்டி. 

"அம்ம, நிலா அக்கா தான் வாழ மரமா ஆயிட்டதாப் பறஞ்சதானு. எனிக்கு மனசுலாகல்லா.  நிங்ஙளுக்கு மனசிலாயோ?" என்று வினவுகிறாள். 

அவள் சொல்வது தனக்குப் புரியாததால் அலுப்புடன் ஏதோ சொல்லியவாறே எழுந்து வருகிறாள் தம்புராட்டி. 

"எந்தா நிலா? எந்தா சேதி? எனிக்கு ஒன்னும் மனசிலாகல்லா" எனப் பரிவுடன் விசாரிக்கிறாள். 

தம்புராட்டி தன்னருகில் வந்து நின்றதை உணர்ந்த நிலவுமொழி திடுக்கிடுகிறாள். அதுகூடத் தெரியாதவாறு ஏதோ சிந்தனையில் மூழ்கியிருப்பவள் நினைவுக்கு வருகிறாள். 

தனது உணர்வுக்கு விளக்கம் கேட்கவே, சந்திரை அவளது தாயை அழைத்ததாகச் சொல்லவும், அவளுக்கு வெட்கமாகிப் போய்விடுகிறது. தன் உணர்வைத் தம்புராட்டிக்கு விளக்குகிறாள். 

அவளிடம், "எந்த வாழமரமானு?" என்று விசாரிக்கிறாள் தம்புராட்டி. ஏனெனில், அங்கு பத்துப் பதினைந்து வாழை மரங்கள் உள்ளன. 

நிலவுமொழி குலை தள்ளியிருக்கும் வாழை மரத்தைச் சுட்டுகிறாள். அதைக் கண்ணுற்றதும் தம்புராட்டியின் புருவங்கள் சுருங்கி, நெற்றிக்கோடுகள் ஏறி இறங்குகின்றன. 

சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு, "அது ஒண்ணுமில்லா. நீ இப்போழ் ஒரு சிசுவ வயிற்றில சுமக்குன்னதானு. அது காரணம், குலையுள்ள வாழ மரத்த நோக்கினப்போழ் ஆ மரமும் தானும் ஒண்ணுன்னு நீ நினைக்குன்னதானு. கொறச்சு நேரம் நீ இவிட இரு. ஞான் இதோ வரும்" என்று விடுவிடென்று சென்று விடுகிறாள். 

அவள் அப்படி அவசரமாகச் சென்றதற்குக் காரணம் புரியாமல் இருவரும் குழம்புகின்றனர். 

வேகமாக இல்லின் வாயிலை அடைந்த தம்புராட்டி, "அடோ, இவிட வா" என அங்கு வேலை செய்துகொண்டிருக்கும் தோட்டக்காரனை விளிக்கிறாள். 

உடனே தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து இடுப்பில் கட்டிக்கொண்டு, "எந்தா, தம்புராட்டி?" என்று வினவியபடி அவளருகே வருகிறான். 

அவனிடம் தணிந்த குரலில் பரபரப்புடன் தம்புராட்டி ஏதோ கூறுகிறாள். தோட்டக்காரன் தலையைப் பலமாக ஆட்டுகிறான். 

"இந்தா காசு.  சீக்ரம் தம்புரானிட சம்சாரிச்சு, வடக்குநாதன் கோவிலுக்குப் போய், நம்பூதிரிமாருகிட்ட விஷயத்தைப் பறஞ்சு, பரிகாரம் கேட்டு வந்துக்கோ. போய்க்கோ, போய்க்கோ" என்று விரட்டுகிராள். 

தோட்டக்காரன் ஓட்டமும், நடையுமாக விரைகிறான். 

பெருமூச்சு விட்டபடி அங்கிருந்த வேப்பமரத்து நிழலில் அமர்கிறாள் தம்புராட்டி. மனதிற்குள், 'வடக்குநாதா, நீதான் ஆ பெண்குட்டிய ரக்ஷிக்கணும். நல்லபடி சிசு ஜனனிக்கணும், ஆ பெண்குட்டி தீர்க்காயுசா இருக்கணும்' என்று வேண்டிக்கொள்கிறாள். 

குதிரைக் குளம்பொலிகள் அருகில் வருவது கேட்கிறது. 

"இதெந்தா? இவிட ஆரானு குதிரல வருன்னது?" என்று தனக்குள் கேட்டுக்கொண்டு கைகளை ஊன்றி மெதுவாக எழுந்திருக்கிறாள். அதற்குள் பத்துப் பதினைந்து குதிரைகள் அவள் இல்லின் வாயிலில் வந்து நிற்கின்றன. 

தாடி மீசையுடன் இருக்கும் ஒருவன் பழுப்புக் குதிரையிலிருந்து இறங்குகிறான். அவனுக்கு அருகிலிருக்கும் வெள்ளைக் குதிரையில் அமர்ந்திருப்பது ஒரு சோழ அரசன் என்று தம்புராட்டி புரிந்துகொள்கிறாள் – காரணம், அவனது மணிமுடி, சோழர்களுக்கான உடைவாள், அரசருக்கான மிடுக்கு; அத்துடன் மற்றொரு குதிரையில் புலிக்கொடியைப் பிடித்தவாறு விறைப்பாக அமர்ந்திருக்கும் சோழ வீரன். 

இன்னொரு வீரன் அவளது தோட்டக்காரனை நெட்டித்தள்ளியபடி வருகிறான். மற்றொரு வீரனுடன் சோமசுந்தரத் தம்பிரானும் வருகிறார். அவருடைய ஆள்காரர்களைக் கயிற்றால் கட்டி சில வீரர்கள் இழுத்துவருகின்றனர். அதைப் பார்த்த தம்புராட்டிக்கு வயிற்றைப் பிசைகிறது. 

இந்த அரவத்தைக் கேட்டுப் பெண் பிள்ளைகள் இல்லிலிருந்து வெளிவந்து என்னவென்று அறிந்துகொள்ள முற்படுகின்றனர். அவர்களைக் கையசைவாலும், கண்களாலும், தலையை ஆட்டியும் உள்ளே போகப் பணிக்கிறாள் தம்புராட்டி.  உடனே அனைவரும் உட்செல்கின்றனர். 

ஆனால், புலிக்கொடியைக் கண்டதும் நிலவுமொழி சந்திரையின் கையைப் பிடித்துக்கொண்டு குதிரை வீரர்களை நோக்கி மெல்ல நடக்கிறாள். 

நிலவுமொழியைக் கண்டதும் தாடி மீசையுடன் இருக்கும் வீரனின் முகம் மலர்கிறது. 

"நிலா! நலமாக இருக்கிறாயா?" என்றபடி அருகில் வருகிறான். அவன் காடவன் என்று இனம் கண்டுகொண்ட நிலவுமொழி மகிழ்ச்சிப் பரவசத்துடன் அவனருகில் சென்று விம்முகிறாள். 

"இப்படி இளைத்துப் போய்விட்டீர்களே!" என்று மேலும் விம்முகிறாள். 

தம்புராட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை. 

'நிலவுமொழியின் பர்த்தா எப்படிப் பெரிய சோழராஜாவுடன் இங்கு வந்திருக்கிறான்?   சோழ வீரர்களைப் பார்த்தால் போரிட்டு வந்திருப்பதுபோலத் தோன்றுகிறது. அண்ணனின் ஆள்காரர்களைக் கயிற்றால் பிணைத்திருப்பதைப் பார்த்தால் விபரீதமாகவும் இருக்கிறதே' என்று கலக்கமுறுகிறாள். 

அங்கு காடவன் இருப்பதும், தன் தமையன் முகத்தில் கலவரமில்லாதிருப்பதும் சிறிது நிம்மதியைத் தருகிறது. 

சோமசுந்தரத் தம்பிரான், "இந்துமதி, ஈ ராஜா சோழச் சக்ரவர்த்தியோட மோன் மனுகுலகேசரி ராஜகுமாரரானு. ஈ சக்ரவர்த்தி மோன் நம்மட இல்லுக்கு விஜயிச்சது நம்மட ஜன்ம பாக்யமானு.  நமஸ்காரம் செய்துக்கோ!" என்று உரத்த குரலில் வந்திருப்பது யார் என்று கோடிகாட்டுகிறார். 

உடனே, "வரும் ராஜாமாருங்க சோமசுந்தரத் தம்புரான் இல்லுக்கு வரும். ஸுஸ்வாகதம். இவிட நிங்ஙள் தாமசிச்சு ஊணுகழிக்கணும், வரும் வரும்!" என்று பற்களெல்லாம் தெரிய சிரிப்புடன் வரவேற்கிறாள் தம்புராட்டி. 

காடவன் குதிரையில் அமர்ந்திருக்கும் ஆளவந்தானைப் பார்த்துத் தலையசைக்கிறான்.  ஆளவந்தான் லாவகமாகக் குதிரையிலிருந்து கீழிறங்குகிறான். 

காடவனை விட மூன்றங்குலமே உயரமாக இருப்பினும், தலையிலிருக்கும் மகுடம் அவனை மிகவும் உயரமாகக் காட்டுகிறது. 

அவன் இறங்கியதும் குதிரை கனைக்கிறது. அதை இதமாகத் தட்டிக்கொடுத்துவிட்டு, மற்ற வீரர்களைப் பார்த்துக் கண்ணசைக்கிறான். 

அனைவரும் தத்தம் குதிரையிலிருந்து கீழிறங்குகிறார்கள். 

சோமசுந்தரத் தம்புரான் குழைந்து குழைந்து ஆளவந்தானை வரவேற்கிறார். வாயிலைத் தாண்டி முற்றத்திற்குள் நுழைகின்றனர். 

இதுவரை சேரநாட்டுப் பெரிய 'இல்'களைக் கண்டிராத ஆளவந்தான் கண்களால் அவ்வீட்டை அளவிடுகிறான். வீட்டிலிருக்கும் அத்தனை பெண்களும் அவன் கண்ணில் படாது ஒளிகின்றனர். அவன் கண்ணில் தென்படும் மூன்று பெண்கள் தம்புராட்டி, நிலவுமொழி, சந்திரை இவர்கள்தான். 

"நிங்ஙள் ஈ மனையில இருக்காம்" என்று மனையைப் பணிவுடன் சுட்டிக்காட்டுகிறாள் தம்புராட்டி. 

இல்லுக்குள் நுழைந்ததிலிருந்து சோமசுந்தரத் தம்புரான் பேசவே இல்லையே, தம்புராட்டியே பேசிக்கொண்டிருக்கிறாளே என்றெண்ணியவாறு மனையில் அமர்கிறான் ஆளவந்தான். 

என்ன நடக்கிறது என்று கண்களால் வினவுகிறாள் நிலவுமொழி. சற்று பொறுக்குமாறு காடவன் கண்ஜாடை காட்டுகிறான். 

அனைவருக்கும் வெள்ளிச் செம்பில் இளநீர் பருகக் கொடுக்கப்படுகிறது. 

"எங்களுடன் வந்திருக்கும் ஆயிரம் வீரர்களுக்கு உணவு வேண்டும்!" என்று தொடங்குகிறான் ஆளவந்தான். 

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com