தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத அப்பா – மகனின் பாசத்தை மையமாக கொண்டு வெளியாகியுல்ளது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படம்.
விஷால் வெங்கட் டைரக்ட் செய்திருக்கும் இந்த படத்தில் நான்கு கதைகளை ஒரு புள்ளியில் இணைத்து வெற்றி கண்டுள்ளார் டைரக்டர்..அப்பா நாசரை சரியாக புரிந்து கொள்ளாமல் எப்போதும் சண்டையிடும் விஜய் (அசோக் செல்வன் ).. எந்த வேலையும் சரியாக செய்யாமல் எப்படியாவது முன்னேற துடிக்கும் ராஜசேகர் (மணிகண்டன்).. தனது தந்தை சினிமா டைரக்டர் அறிவழகனின்(கே. எஸ். ரவி குமார் ) அடையாளம் இல்லாமல் சினிமாவில் சாதிக்க துடிக்கும் மகன்.. பேஷன் டிசைன் செய்ய ஆசைபடும் மனைவி கயலை (ரித்விக்கா )புரிந்து கொள்ளாமல் அமெரிக்கா கனவுகளோடு யிருக்கும் கணவன்.. என நான்கு வெவ்வேறு பின்புல கதை களங்களும் நாசர் விபத்தில் சிக்கி இறந்த பின்பு ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றது. நாசரின் மரணத்திற்கு காரணம் என்று பழி கே. எஸ் ரவிக்குமாரின் மகன் மீது விழுகிறது.நாசரின் மகன் அசோக் அதை எப்படி எதிர் கொண்டார் என்பதை கூடுதல் எமோஷனல்களுடன் சொல்லி இருக்கிறார் டைரக்டர்.
ரித்விக்கா, மணிகண்டன், கே எஸ் ரவிக்குமார், மணிகண்டன், அபிஹாசன், பிரவீன் ராஜா, நாசர் என பலரும் கன கட்சிதமாக நடித்து உள்ளார்கள். அசோக் செல்வனின் நடிப்பு மிக எதார்த்தமாக உள்ளது.அப்பாவிடம் கோபமாக பேசுவதும், காணாமல் போன பின்பு பறிதவிப்பதும், அப்பா இறந்த பின்பு அழுது ஆர்ப்பாட்டம் செய்வதுஎன வகை வகையாக நடிப்பை வாரி வழங்கியுள்ளார். அசோக்கின் காதலியாக வரும் ரியா நம் வீட்டு பெண் போல நடிப்பில் உணர வைக்கிறார்.
பிரசன்னாவின் பட தொகுப்பு படத்திற்கு பெரிய பலம். ரதன் பின்னணி இசையை சிறப்பாக செய்து இருக்கலாம். வாழும் காலத்தில் நம்மை சுற்றி இருப்பவர்களை சரியாக, குறிப்பாக தந்தையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என சொல்லும் படம் இது. தமிழ் சினிமாவில் நீண்ட இடை வெளிக்கு பின்பு குடும்ப உறவுகளை மையமாக கொண்டு வெளிவந்துள்ள இந்த படத்தை வரவேற்கலாம்.
சில நேரங்களில் சில மனிதர்கள் -தகப்பன்சாமிகளுக்கு சமர்ப்பணம்!