-ஜிக்கன்னு, திருச்சூர்.
கேரளாவில் ஒவ்வொரு வருடமும் கர்க்கட மாதம் எனப்படும் ஆடி மாதத்தில் கோவில் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் ஒரு மாதத்துக்கு நடத்தப்படுவது வழக்கம்.
கேரள மாநிலம் திருச்சூர் பாலக்காடு எர்ணாகுளம் கோட்டையம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோயில்கள் மற்றும் வளர்ப்பு யானைகள் சுமார் 400 உள்ளன பெரும்பாலும் இங்கு ஆண் யானைகளை வளர்த்து பராமரித்து வருகிறார்கள் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் உற்சவ மூர்த்தியின் திடம்பு ஏந்தி இந்த யானைகள் ஊர்வலம் சென்று விழாவில் கலந்து கொள்ளும். தற்போது மழைக்காலம் மற்றும் குளிர்காலம் வரவுள்ள நிலையில் யானைகளுக்கு ஒரு மாதம் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இந்த புத்துணர்வு முகாமில் யானைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதற்காக ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் ஊட்டச் சத்து உணவுகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும்.
அந்த வகையில் இந்த வருடத்துக்கான இந்த யானைகள் புத்துணர்வு முகாம் நேற்று (ஜூலை 18) திருச்சூர் வடக்குநாதன் சிவன் கோவிலில் தொடங்கியது. துவக்க நாள் நிகழ்ச்சியான ஆனை ஊட்டு நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு – தங்களுக்கு பிடித்த யானைக்கு தம் கைகளால் உணவு வழங்கி மகிழ்ந்தனர்.
இந்த முறை நடக்கும் முகாமின் ஹைலைட் – ஆசியாவிலேயே உயரமான யானையாகக் கருதப்படும் செத்திக் கோட்டு ராமச்சந்திரன் என்ற யானை கலந்து கொள்வதுதான்.இதுதவைர மொத்தம் 53 யானைகள் கலந்து கொண்டுள்ளன. நேற்று ஆனை ஊட்டு நிகழ்ச்சியின் தொடக்கமாக – வயது முதிர்ந்த திருச்சூர் வடக்கு நாதர் கோவில் யானை சந்திரசேகரனுக்கு ஆயுர்வேத மருந்து கலந்த உணவு கொடுத்து துவங்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து யானைகளுக்கும் பொதுமக்கள் உணவும் பழங்களும் கொடுத்தனர் இன்று முதல் ஒரு மாதம் யானைகளுக்கு ஒய்வு மருத்துவ சிகிச்சையும் அளிக்கபட உள்ளது
சரி.. யானைகளுக்கான மெனு என்ன?
யானைகளுக்கான ஆயுர்வேத பரிந்துரைத்த ஆயுர்வேத மருத்துவர் குழுவிடம் கேட்டோம்..
‘’பொதுவாக சாதத்தில் தேங்காயெண்ணையும் மஞ்சள் தூளும் கலந்து கொடுப்போம். அதன்பிற்கு நீர் சத்து நிறைந்த கரும்பு, வெள்ளரிக்காய், அன்னாசி பழம், வாழைப்பழம், தர்பூசணி பழம் ஆகியவை ரெகுலர் உணவாக ஒரு மாத காலம் கொடுக்கப்படும் மேலும் யானைகளுக்குப் பிடித்த தென்னை மட்டை, மற்றும் கூந்தல் பனை போன்றவையும் உண்டு’’ என்றார்கள்.
முதன்முதலாக எப்போது இந்த முகாம் தொடங்கப்பட்டது?
‘’முதன்முதலில் 1982-ல் டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒரு ரயில் வண்டி முழுக்க கேரள யானைகள் ஏற்றி அனுப்பப் பட்டன. ஆனால் டெல்லியின் சீதோஷ்ண நிலை மற்றும் உணவு மாறுபாட்டால், முக்கால்வாசி யானைகள் உடல்நலம் குன்றி திரும்பின. அவற்றுக்கு சிகிச்சையளுக்கும் வகையில் இந்த புத்துணர்வு முகாம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு 40 வருடங்களாக ஆடி மாதத்தில் கேரளாவில் யானைகளுக்கான இந்த புத்துணர்வு முகாம் நடத்தப் படுகிறது’’ என்றனர், திருச்சூர் வடக்குநாதன் கோவில் நிர்வாகம்.
தற்போது இக்கோயிலின் தெற்கு நடையில் வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள யானைகளிக் காண்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.