நாடு முழுவதும் நேற்று (26ம் தேதி) குடியரசு தின விழா கொண்டாடப் பட்டது. அதையொட்டி, கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், கேரள துறைமுகங்கள், தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத்துறை அமைச்சர் அகமது தேவர்கோவில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அப்போது தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேசியக் கொடி கீழே இறக்கப்பட்டு, சரி செய்து மீண்டும் நேராக ஏற்றப்பட்டது.
தொடர்ந்து அங்கு நடந்த போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இதற்கிடையில், தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, தேசியக்கொடி ஏன் தலைகீழாக கட்டப்பட்டது என்பது குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி மற்றும் எஸ்பிக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.