நாட்டின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று காலை டெல்லியில் நடந்தது. இந்த விழாவில் இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ரஜினிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் தன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சவுந்தர்யா, மருமகன் தனுஷ் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வந்திருந்தார்.
இந்த தேசிய திரைப்பட விருதுகள் விழாவில், 2019-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான மரைக்கர் திரைப்படம் வென்றது.சிறந்த தமிழ் படத்திற்கான விருது அசுரன் படத்துக்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது 'அசுரன்' படத்திற்காக தனுஷூக்கு கிடைத்தது. சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த குழந்தை நட்சத்திரமாக நாக விஷால், சிறந்த இசையமைப்பாளராக டி.இமான் ஆகியோர் பெற்றனர். சிறப்பு ஜூரி விருதை 'ஒத்த செருப்பு' படத்தை இயக்கிய பார்த்திபன் பெற்றார்.
இநத விருது வழங்கும் விழாவில், தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் பேசியதாவது:
இந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கும், என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும் நன்றி. தாதா சாகேப் பால்கே விருதை எனது குருவான இயக்குனர் பாலச்சந்தருக்கு சமர்பிக்கிறேன்.
-இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.