விக்ரம் – தீமைக்கு தீ இடுபவன்!

விக்ரம் – தீமைக்கு தீ இடுபவன்!

-ராகவ் குமார்.

போதை பொருள் கடத்தல், தேடும் காவல் துறை, உடந்தையாக இருக்கும் அதிகாரிகள்,என நாம் பார்த்த பல படங்களின் 'ஒன் லைன் ஸ்டோரி" தான் விக்ரம்! 

ஆனால் திரைக் கதையை நகரத்தும் விதத்திலும், கதை சொல்லும் பாணியிலும், கமலுடன் கைகோர்த்து ஹாலிவுட் தரத்தில் அசத்தியிருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.           

படம் தொடங்கி சில நிமிடங்களில் கர்ணா  (கமல்) உட்பட சில பிரமுகர்கள் கொல்ல படுகிறார்கள். இந்த கொலை பின்னணியை விசாரிக்க காவல் துறையால் பகத் பாஸில் ஏஜென்ட்டாக நியமிக்க படுகிறார். கொலை செய்யப்பட்ட நபர்களின் பின்னணியை விசாரிக்கும்போது கர்ணாவை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கின்றன. ஒரு கட்டத்தில் இது எல்லாம் கர்ணா நடத்தும் நாடகம் என்பதும் அவரின் உண்மையான பெயர் விக்ரம் என்று தெரிய வருகிறது. அதன் பின்பு விக்ரம் யார்? ஏன் இப்படி செய்தார் என்ற காரணம் விரிகிறது.      

பல இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் நமது கண்களை திரையில் இருந்து எடுக்க முடியாத வகையில் காட்சிகள் அமைத்திருப்பது ஆச்சரிய அனுபவம். கமல் சில ஆண்டுகளுக்கு பின்பு நடிக்க வந்திருப்பதால் ரசிகர்களின்  எதிபார்ப்பு எகிறியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை கமல் நன்றாகவே பூர்த்தி செய்திருக்கிறார்.கமல் ஆக்ஷன் காட்சிகளில் இன்னமும் இளமையாகவும் பேரனுக்கு உருகும்போது இன்னமும் பக்குவமாகவும்  தெரிகிறார்

பகத் சைலன்ட் ஆக வந்து கண்களிலேயே மிரட்டுகிறார்.விஜய் சேதுபதி தங்கப் பல் தெரிய கொடூரமாக வில்லத்தனம் செய்கிறார். தமிழ் சினிமா வில் அடுத்த தலைமுறைக்கான வில்லன் உருவாகி வருகிறார். அனிருத்தின் இசை, பாடல் காட்சிகளை விட கதை நகர்வதற்கு உதவுகிறது. படத்தின் பல காட்சிகள் இரவு நேரத்தில் நடப்பதால் கேமரா இன்னொரு ஹீரோவை போல செயல்பட்டுள்ளது.   

சூர்யா ஒரு  காட்சியில்  வந்தாலும் ஸ்கோர் செய்கிறார்.விக்ரம் 3- ல் சூர்யா ஹீரோவா? வில்லனா? என ஒரு சஸ்பென்ஸுடன் படத்தை முடித்து உள்ளார்கள். முழுவதும் இளைய தலைமுறை கலைஞர்களுடன் கை கோர்த்து ஒரு மாஸ் ரசிகர்களை ஈர்த்ததற்கு கமலை பாராட்டலாம்.  

விக்ரம்நாம் நினைத்து பார்க்க முடியாதவன்..:தீமைக்கு தீ இடுபவன்! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com