போர் ஊற்றி எழுதிய காதல் காவியம் ‘சீதா ராமம்’! 

போர் ஊற்றி எழுதிய காதல் காவியம் ‘சீதா ராமம்’! 

–லதானந்த் 

நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம், ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

வைஜயந்தி மூவிஸ் சார்பில், தயாரிப்பாளர் சி.அஸ்வினி தத் வழங்கும் 'சீதா ராமம்' படத்தை ஸ்வப்னா சினிமா எனும் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பை லைகா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. 

நடிகர் சுமந்த், "தெலுங்குத் திரை உலகில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாலும், 'சீதா ராமம்' படத்தில்தான் முதல் முதலாக அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் ஹனு ராகவபுடி கதையை விவரித்ததும், பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

60 காலகட்டத்திய காஷ்மீர் பின்னணியில் ராணுவ வீரர்களின் காதலைக் கவித்துவத்துடன் இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். இயக்குநர் கதையை விவரித்ததும்,அவருடைய கற்பனையை நினைவாக்க மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன்.துல்கர் சல்மான் போன்ற இளம் திறமையாளருடன் பங்களிப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது"  என்றார். 

நடிகை மிருணாள் தாகூர் பேசுகையில், "சீதா ராமம் படத்தில் சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளில் நடனமாடியிருக்கிறேன். காஷ்மீரில் அதிகக் குளிரில்  கடினமாக உழைத்து, இந்த நாட்டியமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அனைத்து இளம் நடிகைகளும் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் இது. துல்கர் சல்மான் போன்ற ரசிகைகள் அதிகம் கொண்டாடும் நடிகருடன் இணைந்து நடித்திருப்பது மறக்க இயலாதது" என்றார். 

நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், "நான் இதற்கு முன்னர் நிறையக் காதல் கதைகளில் நடித்திருந்தாலும், இதுபோன்ற வித்தியாசமான காதல் கதையில் நடித்ததில்லை. கதை நடக்கும் காலகட்டம், கதைக் களம், கதாபாத்திரப் பின்னணி எனப் பல அம்சங்கள் சிறப்பாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அதிலும் காதலை கடிதம் மூலம் வெளிப்படுத்தும் 1960 காலகட்டத்திய அனுபவங்கள் மிகச் சிறப்பாக 'சீதா ராமம்' படத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

தற்போதுள்ள தலைமுறைக்குக் கடித இலக்கியம்,  கடிதம் எழுதுவது என்பதே புரியாத விஷயம். படத்தில் இடம் பிடித்திருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களும் சிறப்பானவை. 'சீதா ராமம்' தமிழ் பதிப்பிலும் நானே பின்னணி பேசி இருக்கிறேன். " என்றார். 

இதனிடையே 'போரூற்றி எழுதிய காதல் கவிதை' எனும் துணைத் தலைப்புடன் வெளியாகவிருக்கும் இந்த 'சீதா ராமம்' படத்தை, தெலுங்கின் முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்க, பி. எஸ். வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com