O2  படத்தின் ஒளிப்பதிவில் சாதனை!

O2  படத்தின் ஒளிப்பதிவில் சாதனை!

-லதானந்த்

வாலான கதைக் களத்தை சாமர்த்தியமாகப் படமாக்கியிருக்கிறார்  'O2' படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்!

வெங்கட் பிரபுவின் 'மன்மதலீலை' படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து, கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், தனது அடுத்த படமான 'O2' மூலம் மீண்டும் தம்மைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'O2' திரைப்படம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

மண்சரிவில் சிக்கிக்கொள்ளும் பேருந்து ஒன்று முழுமையாக மண்ணுக்குள் புதைந்துவிட, அதனுள் இருக்கும் பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டார்களா இல்லையா, என்பது தான் 'O2' படத்தின் கதை. மிக வித்தியாசமான அதே சமயம் சவாலான இந்த கதைக் களத்திற்கு மிக நேர்த்தியாகத் திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் அமைத்திருந்தாலும், அவற்றைத் திரையில் மிகத் தத்ரூபமாக கொண்டு வந்து படம் பார்ப்பவர்களையும் பதற வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்.

படத்தில் நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு நடப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்கிறார்கள் படம் பார்த்தவர்கள். முக்கியக் காரணம் படத்தின் தரமான ஒளிப்பதிவு!

ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் படத்தைப் பற்றிச் சொல்லும்போது, "இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் என் நண்பர். அவர் இந்த கதையை என்னிடம் 2019 ஆம் ஆண்டு சொன்ன போதே நான் கதையோடு பயணிக்க தொடங்கி விட்டேன். ரசிகர்கள் நம்பும் வகையில் காட்சிகள் இருக்க வேண்டும், அப்போது தான் படம் ரசிகர்களிடம் சென்றடையும் என்பதை முன்பே முடிவு செய்ததோடு, அதை எப்படி சாத்தியமாக்குவது என்பதையும் சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். பிறகு படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதை அறிந்தவுடன், எனது பணியைத் தீவிரப்படுத்தத் தொடங்கினேன்.

பேருந்து மற்றும் மண் சரிவு காட்சிகளுக்கான செட் அமைக்கப்பட்டுப் படமாக்கப்பட்டாலும், படம் பார்ப்பவர்களுக்கு செட் என்பது தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். பேருந்தில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களின் பதற்றம் ரசிகர்களும் வர வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது.  எனவே படப்பிடிப்பு தொடங்குவதற்கு 2 வருடங்கள் முன்னமே இப்படத்திற்காக நான் பணியாற்றத் தொடங்கி விட்டேன். ஒவ்வொரு காட்சியையும் இப்படித்தான் படமாக்கவேண்டும் என்று முடிவு செய்து அதைச் சரியான முறையில் திட்டமிட்டதும் சிறப்பான ஒளிப்பதிவுக்கு ஒரு காரணம்.

நயன்தாரா மேடம் போன்ற ஒரு பெரிய நடிகையை வைத்துக்கொண்டு பணியாற்றும்போது நேரத்தை வீணடிக்க கூடாது, தயாரிப்பாளர் திட்டமிட்ட நாட்களுக்குள் படத்தை முடிக்க வேண்டும், ஒளிப்பதிவும்  தரமாக இருக்க வேண்டும் என்ற பல சவால்கள் இருந்தன. அவற்றைச் சரியான முறையில் சமாளித்தேன்.

படம் முழுவதும் கேமராவைத் தோளில் வைத்துத்தான் காட்சிகளைப் படமாக்கினேன். இது ரொம்ப சிரமமான விஷயம் என்றாலும் படத்திற்கு அதுதான் மிக முக்கியம். உயிருக்காகப் போராடும் ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்த வேண்டும் என்பதும், ஒரு பயணியின் பதற்றமான சூழ்நிலை மற்றும் பயம் போன்ற உணர்வுகளை மிகச் சரியாக ரசிகர்களிடம் சேர்க்கவேண்டும் என்பதற்காகவும் கடுமையாக உழைத்தேன்.

படத்தை பார்த்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, 'படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்' என்று சொன்னதுதான் எனக்கு கிடைத்த முதல் பாராட்டு.

நயன்தாரா மேடம் படப்பிடிப்பின் போது, இந்த கதைக் களத்தையும் அதைப் படமாக்குவதில் இருக்கும் சிக்கல்களையும் மிகச் சரியாகப் புரிந்துக்கொண்டு ஒத்துழைப்பதுக் கொடுத்ததும் மறக்க முடியாதது.  ஒவ்வொரு காட்சியிலும் நடித்து முடித்ததும் என்னிடம்  'ஒகேவா தமிழ்?' என்று கேட்டது என்னால் மறக்க முடியாது. எனது இந்த சிறப்பான பணிக்கு அவருடைய ஒத்துழைப்பும் ஒரு காரணம்" என்று சொல்லி முடித்தார், ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com