விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்: பெங்களூருவில் 144 தடை உத்தரவு!

விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்: பெங்களூருவில் 144 தடை உத்தரவு!

கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த விவகாரம் தொடர்பாக அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.  இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பெங்களூருவில் போலீசார் 144 தடையுத்தரவு பிற்ப்பித்துள்ளனர்.

கர்நாடகாவில் சில நாட்களுக்கு முன் ஹிஜாப் அணிந்து தனியாக வந்த முஸ்கான் என்ற இஸ்லாமிய மாணவியை காவி துண்டு அணிந்த இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு அச்சுறுத்தினர். பதிலுக்கு அந்த மாணவியும் அல்லாஹு அக்பர் என கர்ஜித்தார். இந்த வீடியோ தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன.

அதேபோல அன்றைய தினமே கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவர் தேசியக்கொடியை கீழிறக்கி காவிக் கொடியை ஏற்றினார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதையடுத்து மாணவிகள் ஹிஜாப் அணிந்த விவகாரம் காரணமாக கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளிலும் பதற்ற நிலை உருவானது. இதன் காரணமாக மேல்நிலைப் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு மூன்று நாட்கள் விடுமுறையை அறிவித்தது.

இருப்பினும் தட்சிண கன்னடா, உடுப்பி, பாகல்கோட்டை, குடகு, சிவமொக்கா ஆகிய பகுதிகளிலும் போராட்டம் வலுத்துள்ளது. உடுப்பியில் இந்து, இஸ்லாமிய மாணவர்கள் தனித்தனியாக நடத்திய போராட்டத்தில் மோதல் ஏற்பட்டு கல்வீச்சு தாக்கல் நிகழ்ந்தது. இதன் காரணமாக சிவமொக்கா, தாவனகெரே உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல மண்டியா, மைசூருவிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

19 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் முன்பு போராட்டம் வெடித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாதம்.22-ம் தேதி வரை பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்களை சுற்றி 144 தடை உத்தரவை அமல்படுத்தியிருக்கிறது மாநகர காவல் துறை. இதையடுத்து கல்வி நிறுவனங்களை சுற்றியுள்ள 200 மீட்டர் தூரத்திற்கு யாரும் கூடவோ போராட்டம் நடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com