கே.ஆர்.இராமநாதன்தமிழ்.விஸ்வம் பஸ்ஸை விட்டு இறங்கியபோது பஸ் ஸ்டாண்ட் டீக்கடைகளில் பளபள செம்பு பாய்லர்களின் கீழே கரிக்கங்குகள் மின்னிக் கொண்டிருந்தன. ஒற்றை அடுப்பில் அலுமினியப் பாத்திரத்தில் பால் சூடாக நுரைத்துக் கொண்டிருந்தது. இண்டாலிய கெட்டிலின் மூக்கிலிருந்து நீராவி பெருமூச்சு விட்டபடி இருந்தது. நல்ல வெளிச்ச விடியலுக்கு இன்னும் நேரமிருக்கிறது..'ஒரு டீ! அப்டியே ஒரு வில்ஸ் ஃபில்ட்டர்.""சார். ஒரு ஓரமா நின்னு பிடிங்க! போலீஸ் ஜீப் வரும். பிடிச்சாங்கன்னா இரண்டாயிரம் ரூபா தீட்டிருவாங்க. ஒரு சிகரெட் வித்தா ஒரு ரூபா கெடைக்கும்."கடைக்காரர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. தொங்கிய கயிற்றுப் பிரியிலிருந்து துளிர்த்து மின்னிய நெருப்பை சிகரெட்டில் உறிஞ்சிக்கொண்டு கடைக்குப் பின்னால் நின்று கொண்டேன். நேற்று லலிதா கத்தியது நினைவுக்கு வந்தது."இந்த நேரத்துல அவசியமா? இந்தக் கல்யாணத்துக்குப் போய்த்தான் ஆகணுமா? உங்கப் பொண்ணு கல்யாணத்துக்கும் உங்க பிள்ளை கல்யாணத்துக்கும் எட்டியாவது பார்த்தாரா? அட.. போன்லயாவது விசாரிச்சாரா? தம்பி, தம்பி குடும்பம்னு நீங்க நெனக்கற மாதிரி இத்தனை வருஷத்தில ஒரு தடவையாவது அவர் நெனச்சிருப்பாரா? வந்து ரெண்டு நாளாவது தங்கியிருப்பாரா? தம்பியைப் பத்தி பேசினாலே உடனே உங்களுக்கு கை ஓங்கத் தோணிடுமே!" ஆரம்பித்துவிட்டாள் லலிதா. இனி வீடு கொள்ளாது.அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையை கழியால் குத்தும்போது பீறிட்டடிக்கும் நாற்றமும் அடைசல்களும் போல அவளுக்கு இத்தனை நாள் வாழ்க்கையின் அத்தனை நினைவுக் கசடுகளும் சுழன்றடித்து குமுறிக் குமுறிக் கொண்டுவந்தது. ஆனால் அவள் கத்துவதிலும் நியாயமில்லாமல் இல்லை.விஸ்வம், ரகு, மணி மூவரும் கல்லிடைக் குறிச்சி சாமிநாதனின் ஆண் வாரிசுகள். லட்சுமி ஒரே பெண். மணிதான் கடைக்குட்டி.மணிக்கு லக்னோவில் ஒரு லாரி கம்பெனியில் வேலை. சம்பளமும் வேலையும் அவன் படிப்பைப் போலவே பெரிதாகவும் சொல்லிக்கொள்கிற மாதிரியும் இல்லைதான். ஆனால் எல்லாவற்றிற்கும் ஈடு வைத்தாற்போல யாரையும் தூக்கி எறிந்து பேசும் வாய். சிறகை யும் காலையும் படபடத்துச் சிலுப்பிக்கொண்டு பாயும் சண்டைக்கோழி குணம்.வரிசையாகப் பெண்களிருக்கும் பள்ளிக் கூட வாத்தியார் சிவசு வீட்டில் இரண்டாவது பெண் ராகினியை டைப் ரைட்டிங் ஷார்ட் ஹேண்ட் படிக்கிற காலத்தில் காதலித்து கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டான். தங்கை லட்சுமிக்குக் கல்யாணம் ஆகணும் என்பதைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படாமல் அவசரக் கல்யாணம் செய்து கொண்டதில் அப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார். அதிலிருந்துதான் அவருக்கு தளர்ச்சியும் முதுமையும் ஆரம்பித்தது. அப்போது விஸ்வத்திற்கு மட்டுமே கல்யாண மாகியிருந்தது.குடும்பத்தையே உதறித் தள்ளியது போல வடக்கே போனவன் போனவன்தான். ஆனால் அவ்வப்போது மனைவி ராகினியின் சகோதரிகள் வீட்டு நல்லது கெட்டதுகளுக்கு எதையும் விட்டுவிடாமல் அவனும் சொந்த ஊர்ப் பக்கம் தலைகாட்டுவதாக தகவல்கள் வரும்.வாக்கப்பட்டு வந்தபின் பிறந்த வீட்டைத் துறந்து புகுந்த வீட்டில் வேர் பிடிக்கும் நாற்றுப் பெண்களுக்கு மாற்றாய் மணிதான் அவர்கள் சைடிற்கு முழுவதுமாக வாக்கப்பட்டு போய் விட்டது போலத் தோன்றும் விஸ்வத்திற்கு.ராகினியும் தன் கணவன் மணிக்குச் சற்றும் சளைத்தவளில்லை. தூக்கியெறிந்து பேசுவதில். அவள் சுற்றத்தாரைத் தாங்கிப் பிடிப்பதில் அவள் ஊரின் மண்பெருமை புலப்படாமல் இருக்கவே இருக்காது.தங்கை லட்சுமிக்கு கணவனே கண்கண்ட தெய்வம், புகுந்த வீடே உறைந்திடும் கோயில் என முழுதாய் மாறிப்போனாள். சுமங்கலிப் பிரார்த்தனைக்குக் கூட சாக்குப்போக்குச் சொல்லித் தப்பித்துக்கொள்வாள். அவளுக்குப் புகுந்த வீடே கஜேந்திர மோட்சம்.அம்மா முதலில் சுமங்கலியாகப் போனபின் சில வருடங்களில் கூடவே அப்பாவும் தென்பக்கச் சுவரில் படமான பின், இன்று வரை குடும்பத்தில் சுமங்கலிப் பிரார்த்தனை நடக்கவும் இல்லை. அவரவர்களின் மன முறுக்கல்களில் அந்த எண்ணமும் யாருக்கும் தோன்றியதேயில்லை.மணி ரிடையர்டாகிவிட்டான். பென்சன் ஒன்றும் பெரிதாய் கிடையாது. பி.பி.எஃப். எனக் கொஞ்சம் வரும். ஒரே பெண். அவளுக்கு இருப்பதை வைத்து ஒப்பேற்றி திருமணம் செய்து வைத்துவிட்டு லக்னோவில் வாங்கிய வீட்டையும் விற்றுவிட்டு எப்போதோ கூடுவாஞ்சேரி அருகே வாங்கின மனையில் வீட்டைக் கட்டிக்கொண்டு செட்டிலாகலாம் என இருப்பதாகச் சொல்லியிருந்தான் – அதுகூட திருமண அழைப்பிதழைத் தபாலில் அனுப்பிவிட்டு அது வந்து சேர்ந்ததா என தொலைபேசியில் கேட்டபோதுதான்.தன் மகன்கள் விக்னேஷ், கார்த்திக் இருவருக்கும் திருமணம் முடித்த கையோடு ஏதோ சொல்லிவைத்தது மாதிரி ஒரு கார் விபத்தில் ஆபீஸ் வேலையாய் போனபோது இறந்துபோனான் ரகு. விக்னேஷ் அமெரிக்காவில் பி.ஆர். வாங்க, பேத்தி ஸ்ரேயா அமரிக்கை யாய் பிறந்தாள் அமெரிக் கக் குடியுரிமையுடன். சின்ன வன் கார்த்திக் ஆஸ்திரேலியாவில்.ரகுவின் மனைவி சுவாதிக்கு வீடாறு மாதம் வெளிநாடாறு மாதம் என்றானது. பையன்கள் இருவரும் பாசத்தைப் பொழிந்தார்கள் அம்மாவின் மீது. வீட்டில் ஒரு சி.சி.டி.வி. வைக்காத குறையே தவிர வீடியோகாலில், சாட்டிங்கில் என ஒவ்வொரு மணிநேரத்திற்கும் அப்டேட் ஆனாள் அம்மா, உறங்கும்நேரம் தவிர.பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மணியின் குடும்பப் பிரலாபங்கள் ஓடியபடியே இருக்கும். மணியின் உடன்பிறந்தவர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட உறவுகள் என அனைவருக்குமே மணி, ராகினி, பெண் ஷிவானி பற்றிய ஏதோ ஒரு குறைகூறலோ வலிநிகழ்வோ இருந்தது மணியின் வாழ்க்கைப் பலன்.தங்கை, ரகு குடும்பம், ஊரிலிருக்கும் வயதான மணியின் பெரியப்பா, பெரியம்மா எல்லோருக்குமே திருமணத்திற்கு கொரோனா பயமோ, ஆழ்மன விருப்பு வெறுப்போ தோன்றிவிட்டது. எல்லோருக்குமே மற்றவர் யாரும்கூட போய்விடக்கூடாது என்று தோன்றவும் ஆரம்பித்தது."பெரியப்பா! நீயோ, நீ போய் தாத்தா பாட்டியைக் கூட்டிண்டு வர்றதோ இப்போ ரிஸ்க்னு தோன்றது. எனக்கு அதுதான் இப்போ பெரிய கவலை" என வாட்ஸாப்பில் வருந்தினான் ஆஸ்திரேலிய இளையவன்.முந்தாநாள்வரை விஸ்வமும் அதே மனநிலையில்தான் இருந்தான். திடீரென மனதில் ஏதோ தோன்றப்போய் தலையை மட்டும் காட்டிவிட்டு வந்துவிடலாம் என நினைத்துக்கொண்டு கையில் கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் விஸ்வம்.தளர்வான ஊரடங்கில் பெரியபடாடோபம் இல்லாமல் எளிமையாக இருந்தது கல்யாண மண்டபம். வாசலில் பெரிய ரங்கோலி. வலதுபுறம் பூச்சரங்கள் சுற்றப்பட்ட ஊஞ்சல் பலகை. உட்காருமிடத்தில் புதுக்கோலம். இடதுபுறம் சிறு பிள்ளையார் கம்பிகளுக்குள் இடுங்கி கண்சிமிட்டலுடன் பளீரிட்டார்.சற்றுத் தள்ளி 'ஷிவானி வெட்ஸ் கோபால கிருஷ்ணன் அலைஸ் அத்வைத்' என ஆங்கிலத்தில்.மார்பிள் படிகளின் ஈரம் உணர்ந்தபடி மாஸ்க் முகத்துடன் படியேறினான் விஸ்வம். மண்டபம் தன் பரபரப்பை இன்னும் தொடங்கியிருக்கவில்லை. வலது புறத்தில் ஒரு எவர் சில்வர் கேனில் சிறைப்பட்ட காபி, பேப்பர் கப்புகளில் வழிந்திறங்கி வாய்களுக்குக் கடத்தப்பட ஆயத்தமானது.காலி சேரில் தன் பையை வைத்தான் விஸ்வம். எந்தச் சலுகையும் கேட்கக் கூடாது. பொதுத்தள வசதியில் குளி தெளிகளை முடித்துக்கொள்ள முடிவெடுத்தான்."அண்ணா! வாண்ணா! இப்பதான் வந்தியா?" குரல் கேட்டு திரும்பினால் மணி.மணி ஏற்கெனவே ஒல்லி உடம்புக்காரன். இப்போது இன்னும் கச்சலாகத் தோன்றினான். குளித்துக் கட்டிய பட்டுவஸ்திரத்தில் குறுக்கே கட்டிய அங்கவஸ்திரத்தில் ஏராள மிச்சம் தொங்கியது. விபூதிப் பட்டைகளுக்குப் போட்டியாகத் துருத்தி நின்ற எலும்புகள். கண்கள் இரண்டும் பள்ளத்திற்குள் இருந்தது. கன்னம் வற்றி ஒட்டிப்போயிருந்தது. கையிலும் தோள்பட்டையிலும் நரம்பு புடைத்து ஓடியது."அண்ணா! நாங்க உங்களுக்குப் பண்ணினதுக்கு மத்தவாள்ளாம் வந்துருவா. நீ மட்டும்தான் வரமாட்டேன்னு நெனச்சேன். எல்லாரும் ஏதோ ஒரு சாக்குச் சொல்லி வர்ல. ஆனா திடுதிப்னு வந்து நிப்பாளோன்னு ஏனோ இப்பகூட இன்னமும் தோணிண்டே இருக்கு.""எல்லாரும் பணம் அனுப்பிட்டு சேதி அனுப்பறா. இப்பவும் பாசமா நேர்ல வந்து நின்னுடுவான்னுதான் தோணறது. பணத்துக் காகத்தான் பத்திரிகை அனுப்பியிருக்கேன்னு நெனச்சிருக்க மாட்டானுதான் இப்பவும் மனசு சொல்றது."பேசப் பேச வாசலை நோக்கித் திரும்பியிருந்த அவன் முகத்திலும் கண்ணிலும் தன் உறவுகளைத் தேடும் வேட்கை தீர்க்கமாய் மின்னியது.சுற்றிலும் பார்த்தேன். அவனுடைய பால்ய சிநேகிதர்கள், லக்னோவிலிருந்து சிலர். பெரும்பாலான பிளாஸ்டிக் சேர்கள் காலியாக இருந்தது.தம்பியின் மனைவியும் மகளும் வந்தனர்."வாங்க விசு அண்ணா! பெரியப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணு" என்றாள் எங்கோ முகத்தை வைத்துக்கொண்டபடி."நீங்க நேர்ல வந்ததுதான் எனக்குப் பெரிய ஆசிர்வாதம்" என்று பெரிய மனுஷியாய் நமஸ்கரித்தது குழந்தை.ராகினியின் சொந்தபந்தங்கள் மிகக் கவனமாக விஸ்வத்தின் பார்வையையும் இருப்பையும் தவிர்த்தபடி திருமணப் பணிகளில் தீவிரம் காட்டிக்கொண்டனர். யாருமே மாறிவிடவில்லை – ராகினி குடும்பத்தாருக்கு வாக்கப்பட்டுவிட்ட மணி உட்பட.வாசலைப் பார்த்தபடி இருந்த மணியை பார்த்தான் விஸ்வம்.அந்த வட்டாரத்திலேயே அவனுடைய ரத்த உறவு சம்பந்தப்பட்ட யாருமே இல்லை- விஸ்வத்தைத் தவிர.எல்லா கௌரவர்களும் கௌரவம் பார்த்துப் பார்த்து இதைவிட பழிவாங்கச் சரியான சந்தர்ப்பம் இனி அமையாது என்பது போலத் தங்களின் வருகை மறுப்பு சக்கர வியூகத்தில் மணியை அபிமன்யுவாகச் சிறைப்படுத்தி அம்பெய்திவிட்டனர்."அவள்ளாம் பணம் அனுப்பியிருக்கா நேர்ல வராம. ஆனா அதை எடுத்துச் செல வழிக்க எனக்கு மனசு கூசுதுண்ணா" என்றான். கண்கள் கலங்கியிருந்தது. பட்டு அங்க வஸ்திரத்தால் கண்களைத் துடைத்துக் கொண்டான்."நெனச்சு பாத்தா எனக்கு இது வேணும்னு கூட தோன்றது இப்போ" என்றான் தரையைப் பார்த்தபடி.அவனுக்கு எல்லாருமாய் சேர்ந்து அதிக பட்ச தண்டனை வழங்கிவிட்டார்கள் என்றே தோன்றியது விஸ்வத்திற்கு.பையிலிருந்து கற்றையாய் நோட்டுக்களை எடுத்தான் விஸ்வம்."குழந்தைக்கு நகை ஏதாவது வாங்கலாம்னு நெனச்சேன். கல்யாண செலவிற்கு வச்சுக்கோ மணி! இது பணமில்லடா! என்னால முடிஞ்ச ஆசிர்வாதம்னு நெனச்சுக்கோ!"முதலில் மறுத்தவன், "சரிண்ணா! நீ எனக்கு அப்பா ஸ்தானம். வைதீக சம்பாவனைக்கு வச்சுக்கிறேன்" என்றான்."நான் யாருக்காகவும் வர்ல. உனக்காகத் தான் வந்தேன். முகூர்த்தம் முடிஞ்சதும் உன்கிட்ட ஜாடை காட்டிட்டு கௌம்பிடுவேன். எதிலயாவது என்னை இழுத்துவிடாதே! போ, போய் அடுத்து ஆக வேண்டியதைப் பாரு!" என்றான் விஸ்வம்.கல்யாணக் களைகட்ட ஆரம்பித்தது மண்டபத்தில்.மணியைச் சார்ந்த எல்லாருமே அவனைக் கைவிட்டு விட்டது மண்டபத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது-ஒற்றை விஸ்வத்தைத் தவிர.மணியின் நடவடிக்கைகள் எதுவுமே சரியில்லைதான் இதுவரை. ஆனால் அவனை இந்த முறையில் அணுகுவது அதீதமோ என்று கூட தோன்றியது.விஸ்வமும் எதையும் மறக்க வில்லைதான். ஆனால் இம்முறை மணியை ஒருமுறையேனும் மன்னித்துவிடலாம் எனத் தோன்றியது விஸ்வத்திற்கு.
கே.ஆர்.இராமநாதன்தமிழ்.விஸ்வம் பஸ்ஸை விட்டு இறங்கியபோது பஸ் ஸ்டாண்ட் டீக்கடைகளில் பளபள செம்பு பாய்லர்களின் கீழே கரிக்கங்குகள் மின்னிக் கொண்டிருந்தன. ஒற்றை அடுப்பில் அலுமினியப் பாத்திரத்தில் பால் சூடாக நுரைத்துக் கொண்டிருந்தது. இண்டாலிய கெட்டிலின் மூக்கிலிருந்து நீராவி பெருமூச்சு விட்டபடி இருந்தது. நல்ல வெளிச்ச விடியலுக்கு இன்னும் நேரமிருக்கிறது..'ஒரு டீ! அப்டியே ஒரு வில்ஸ் ஃபில்ட்டர்.""சார். ஒரு ஓரமா நின்னு பிடிங்க! போலீஸ் ஜீப் வரும். பிடிச்சாங்கன்னா இரண்டாயிரம் ரூபா தீட்டிருவாங்க. ஒரு சிகரெட் வித்தா ஒரு ரூபா கெடைக்கும்."கடைக்காரர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. தொங்கிய கயிற்றுப் பிரியிலிருந்து துளிர்த்து மின்னிய நெருப்பை சிகரெட்டில் உறிஞ்சிக்கொண்டு கடைக்குப் பின்னால் நின்று கொண்டேன். நேற்று லலிதா கத்தியது நினைவுக்கு வந்தது."இந்த நேரத்துல அவசியமா? இந்தக் கல்யாணத்துக்குப் போய்த்தான் ஆகணுமா? உங்கப் பொண்ணு கல்யாணத்துக்கும் உங்க பிள்ளை கல்யாணத்துக்கும் எட்டியாவது பார்த்தாரா? அட.. போன்லயாவது விசாரிச்சாரா? தம்பி, தம்பி குடும்பம்னு நீங்க நெனக்கற மாதிரி இத்தனை வருஷத்தில ஒரு தடவையாவது அவர் நெனச்சிருப்பாரா? வந்து ரெண்டு நாளாவது தங்கியிருப்பாரா? தம்பியைப் பத்தி பேசினாலே உடனே உங்களுக்கு கை ஓங்கத் தோணிடுமே!" ஆரம்பித்துவிட்டாள் லலிதா. இனி வீடு கொள்ளாது.அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையை கழியால் குத்தும்போது பீறிட்டடிக்கும் நாற்றமும் அடைசல்களும் போல அவளுக்கு இத்தனை நாள் வாழ்க்கையின் அத்தனை நினைவுக் கசடுகளும் சுழன்றடித்து குமுறிக் குமுறிக் கொண்டுவந்தது. ஆனால் அவள் கத்துவதிலும் நியாயமில்லாமல் இல்லை.விஸ்வம், ரகு, மணி மூவரும் கல்லிடைக் குறிச்சி சாமிநாதனின் ஆண் வாரிசுகள். லட்சுமி ஒரே பெண். மணிதான் கடைக்குட்டி.மணிக்கு லக்னோவில் ஒரு லாரி கம்பெனியில் வேலை. சம்பளமும் வேலையும் அவன் படிப்பைப் போலவே பெரிதாகவும் சொல்லிக்கொள்கிற மாதிரியும் இல்லைதான். ஆனால் எல்லாவற்றிற்கும் ஈடு வைத்தாற்போல யாரையும் தூக்கி எறிந்து பேசும் வாய். சிறகை யும் காலையும் படபடத்துச் சிலுப்பிக்கொண்டு பாயும் சண்டைக்கோழி குணம்.வரிசையாகப் பெண்களிருக்கும் பள்ளிக் கூட வாத்தியார் சிவசு வீட்டில் இரண்டாவது பெண் ராகினியை டைப் ரைட்டிங் ஷார்ட் ஹேண்ட் படிக்கிற காலத்தில் காதலித்து கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டான். தங்கை லட்சுமிக்குக் கல்யாணம் ஆகணும் என்பதைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படாமல் அவசரக் கல்யாணம் செய்து கொண்டதில் அப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார். அதிலிருந்துதான் அவருக்கு தளர்ச்சியும் முதுமையும் ஆரம்பித்தது. அப்போது விஸ்வத்திற்கு மட்டுமே கல்யாண மாகியிருந்தது.குடும்பத்தையே உதறித் தள்ளியது போல வடக்கே போனவன் போனவன்தான். ஆனால் அவ்வப்போது மனைவி ராகினியின் சகோதரிகள் வீட்டு நல்லது கெட்டதுகளுக்கு எதையும் விட்டுவிடாமல் அவனும் சொந்த ஊர்ப் பக்கம் தலைகாட்டுவதாக தகவல்கள் வரும்.வாக்கப்பட்டு வந்தபின் பிறந்த வீட்டைத் துறந்து புகுந்த வீட்டில் வேர் பிடிக்கும் நாற்றுப் பெண்களுக்கு மாற்றாய் மணிதான் அவர்கள் சைடிற்கு முழுவதுமாக வாக்கப்பட்டு போய் விட்டது போலத் தோன்றும் விஸ்வத்திற்கு.ராகினியும் தன் கணவன் மணிக்குச் சற்றும் சளைத்தவளில்லை. தூக்கியெறிந்து பேசுவதில். அவள் சுற்றத்தாரைத் தாங்கிப் பிடிப்பதில் அவள் ஊரின் மண்பெருமை புலப்படாமல் இருக்கவே இருக்காது.தங்கை லட்சுமிக்கு கணவனே கண்கண்ட தெய்வம், புகுந்த வீடே உறைந்திடும் கோயில் என முழுதாய் மாறிப்போனாள். சுமங்கலிப் பிரார்த்தனைக்குக் கூட சாக்குப்போக்குச் சொல்லித் தப்பித்துக்கொள்வாள். அவளுக்குப் புகுந்த வீடே கஜேந்திர மோட்சம்.அம்மா முதலில் சுமங்கலியாகப் போனபின் சில வருடங்களில் கூடவே அப்பாவும் தென்பக்கச் சுவரில் படமான பின், இன்று வரை குடும்பத்தில் சுமங்கலிப் பிரார்த்தனை நடக்கவும் இல்லை. அவரவர்களின் மன முறுக்கல்களில் அந்த எண்ணமும் யாருக்கும் தோன்றியதேயில்லை.மணி ரிடையர்டாகிவிட்டான். பென்சன் ஒன்றும் பெரிதாய் கிடையாது. பி.பி.எஃப். எனக் கொஞ்சம் வரும். ஒரே பெண். அவளுக்கு இருப்பதை வைத்து ஒப்பேற்றி திருமணம் செய்து வைத்துவிட்டு லக்னோவில் வாங்கிய வீட்டையும் விற்றுவிட்டு எப்போதோ கூடுவாஞ்சேரி அருகே வாங்கின மனையில் வீட்டைக் கட்டிக்கொண்டு செட்டிலாகலாம் என இருப்பதாகச் சொல்லியிருந்தான் – அதுகூட திருமண அழைப்பிதழைத் தபாலில் அனுப்பிவிட்டு அது வந்து சேர்ந்ததா என தொலைபேசியில் கேட்டபோதுதான்.தன் மகன்கள் விக்னேஷ், கார்த்திக் இருவருக்கும் திருமணம் முடித்த கையோடு ஏதோ சொல்லிவைத்தது மாதிரி ஒரு கார் விபத்தில் ஆபீஸ் வேலையாய் போனபோது இறந்துபோனான் ரகு. விக்னேஷ் அமெரிக்காவில் பி.ஆர். வாங்க, பேத்தி ஸ்ரேயா அமரிக்கை யாய் பிறந்தாள் அமெரிக் கக் குடியுரிமையுடன். சின்ன வன் கார்த்திக் ஆஸ்திரேலியாவில்.ரகுவின் மனைவி சுவாதிக்கு வீடாறு மாதம் வெளிநாடாறு மாதம் என்றானது. பையன்கள் இருவரும் பாசத்தைப் பொழிந்தார்கள் அம்மாவின் மீது. வீட்டில் ஒரு சி.சி.டி.வி. வைக்காத குறையே தவிர வீடியோகாலில், சாட்டிங்கில் என ஒவ்வொரு மணிநேரத்திற்கும் அப்டேட் ஆனாள் அம்மா, உறங்கும்நேரம் தவிர.பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மணியின் குடும்பப் பிரலாபங்கள் ஓடியபடியே இருக்கும். மணியின் உடன்பிறந்தவர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட உறவுகள் என அனைவருக்குமே மணி, ராகினி, பெண் ஷிவானி பற்றிய ஏதோ ஒரு குறைகூறலோ வலிநிகழ்வோ இருந்தது மணியின் வாழ்க்கைப் பலன்.தங்கை, ரகு குடும்பம், ஊரிலிருக்கும் வயதான மணியின் பெரியப்பா, பெரியம்மா எல்லோருக்குமே திருமணத்திற்கு கொரோனா பயமோ, ஆழ்மன விருப்பு வெறுப்போ தோன்றிவிட்டது. எல்லோருக்குமே மற்றவர் யாரும்கூட போய்விடக்கூடாது என்று தோன்றவும் ஆரம்பித்தது."பெரியப்பா! நீயோ, நீ போய் தாத்தா பாட்டியைக் கூட்டிண்டு வர்றதோ இப்போ ரிஸ்க்னு தோன்றது. எனக்கு அதுதான் இப்போ பெரிய கவலை" என வாட்ஸாப்பில் வருந்தினான் ஆஸ்திரேலிய இளையவன்.முந்தாநாள்வரை விஸ்வமும் அதே மனநிலையில்தான் இருந்தான். திடீரென மனதில் ஏதோ தோன்றப்போய் தலையை மட்டும் காட்டிவிட்டு வந்துவிடலாம் என நினைத்துக்கொண்டு கையில் கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் விஸ்வம்.தளர்வான ஊரடங்கில் பெரியபடாடோபம் இல்லாமல் எளிமையாக இருந்தது கல்யாண மண்டபம். வாசலில் பெரிய ரங்கோலி. வலதுபுறம் பூச்சரங்கள் சுற்றப்பட்ட ஊஞ்சல் பலகை. உட்காருமிடத்தில் புதுக்கோலம். இடதுபுறம் சிறு பிள்ளையார் கம்பிகளுக்குள் இடுங்கி கண்சிமிட்டலுடன் பளீரிட்டார்.சற்றுத் தள்ளி 'ஷிவானி வெட்ஸ் கோபால கிருஷ்ணன் அலைஸ் அத்வைத்' என ஆங்கிலத்தில்.மார்பிள் படிகளின் ஈரம் உணர்ந்தபடி மாஸ்க் முகத்துடன் படியேறினான் விஸ்வம். மண்டபம் தன் பரபரப்பை இன்னும் தொடங்கியிருக்கவில்லை. வலது புறத்தில் ஒரு எவர் சில்வர் கேனில் சிறைப்பட்ட காபி, பேப்பர் கப்புகளில் வழிந்திறங்கி வாய்களுக்குக் கடத்தப்பட ஆயத்தமானது.காலி சேரில் தன் பையை வைத்தான் விஸ்வம். எந்தச் சலுகையும் கேட்கக் கூடாது. பொதுத்தள வசதியில் குளி தெளிகளை முடித்துக்கொள்ள முடிவெடுத்தான்."அண்ணா! வாண்ணா! இப்பதான் வந்தியா?" குரல் கேட்டு திரும்பினால் மணி.மணி ஏற்கெனவே ஒல்லி உடம்புக்காரன். இப்போது இன்னும் கச்சலாகத் தோன்றினான். குளித்துக் கட்டிய பட்டுவஸ்திரத்தில் குறுக்கே கட்டிய அங்கவஸ்திரத்தில் ஏராள மிச்சம் தொங்கியது. விபூதிப் பட்டைகளுக்குப் போட்டியாகத் துருத்தி நின்ற எலும்புகள். கண்கள் இரண்டும் பள்ளத்திற்குள் இருந்தது. கன்னம் வற்றி ஒட்டிப்போயிருந்தது. கையிலும் தோள்பட்டையிலும் நரம்பு புடைத்து ஓடியது."அண்ணா! நாங்க உங்களுக்குப் பண்ணினதுக்கு மத்தவாள்ளாம் வந்துருவா. நீ மட்டும்தான் வரமாட்டேன்னு நெனச்சேன். எல்லாரும் ஏதோ ஒரு சாக்குச் சொல்லி வர்ல. ஆனா திடுதிப்னு வந்து நிப்பாளோன்னு ஏனோ இப்பகூட இன்னமும் தோணிண்டே இருக்கு.""எல்லாரும் பணம் அனுப்பிட்டு சேதி அனுப்பறா. இப்பவும் பாசமா நேர்ல வந்து நின்னுடுவான்னுதான் தோணறது. பணத்துக் காகத்தான் பத்திரிகை அனுப்பியிருக்கேன்னு நெனச்சிருக்க மாட்டானுதான் இப்பவும் மனசு சொல்றது."பேசப் பேச வாசலை நோக்கித் திரும்பியிருந்த அவன் முகத்திலும் கண்ணிலும் தன் உறவுகளைத் தேடும் வேட்கை தீர்க்கமாய் மின்னியது.சுற்றிலும் பார்த்தேன். அவனுடைய பால்ய சிநேகிதர்கள், லக்னோவிலிருந்து சிலர். பெரும்பாலான பிளாஸ்டிக் சேர்கள் காலியாக இருந்தது.தம்பியின் மனைவியும் மகளும் வந்தனர்."வாங்க விசு அண்ணா! பெரியப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணு" என்றாள் எங்கோ முகத்தை வைத்துக்கொண்டபடி."நீங்க நேர்ல வந்ததுதான் எனக்குப் பெரிய ஆசிர்வாதம்" என்று பெரிய மனுஷியாய் நமஸ்கரித்தது குழந்தை.ராகினியின் சொந்தபந்தங்கள் மிகக் கவனமாக விஸ்வத்தின் பார்வையையும் இருப்பையும் தவிர்த்தபடி திருமணப் பணிகளில் தீவிரம் காட்டிக்கொண்டனர். யாருமே மாறிவிடவில்லை – ராகினி குடும்பத்தாருக்கு வாக்கப்பட்டுவிட்ட மணி உட்பட.வாசலைப் பார்த்தபடி இருந்த மணியை பார்த்தான் விஸ்வம்.அந்த வட்டாரத்திலேயே அவனுடைய ரத்த உறவு சம்பந்தப்பட்ட யாருமே இல்லை- விஸ்வத்தைத் தவிர.எல்லா கௌரவர்களும் கௌரவம் பார்த்துப் பார்த்து இதைவிட பழிவாங்கச் சரியான சந்தர்ப்பம் இனி அமையாது என்பது போலத் தங்களின் வருகை மறுப்பு சக்கர வியூகத்தில் மணியை அபிமன்யுவாகச் சிறைப்படுத்தி அம்பெய்திவிட்டனர்."அவள்ளாம் பணம் அனுப்பியிருக்கா நேர்ல வராம. ஆனா அதை எடுத்துச் செல வழிக்க எனக்கு மனசு கூசுதுண்ணா" என்றான். கண்கள் கலங்கியிருந்தது. பட்டு அங்க வஸ்திரத்தால் கண்களைத் துடைத்துக் கொண்டான்."நெனச்சு பாத்தா எனக்கு இது வேணும்னு கூட தோன்றது இப்போ" என்றான் தரையைப் பார்த்தபடி.அவனுக்கு எல்லாருமாய் சேர்ந்து அதிக பட்ச தண்டனை வழங்கிவிட்டார்கள் என்றே தோன்றியது விஸ்வத்திற்கு.பையிலிருந்து கற்றையாய் நோட்டுக்களை எடுத்தான் விஸ்வம்."குழந்தைக்கு நகை ஏதாவது வாங்கலாம்னு நெனச்சேன். கல்யாண செலவிற்கு வச்சுக்கோ மணி! இது பணமில்லடா! என்னால முடிஞ்ச ஆசிர்வாதம்னு நெனச்சுக்கோ!"முதலில் மறுத்தவன், "சரிண்ணா! நீ எனக்கு அப்பா ஸ்தானம். வைதீக சம்பாவனைக்கு வச்சுக்கிறேன்" என்றான்."நான் யாருக்காகவும் வர்ல. உனக்காகத் தான் வந்தேன். முகூர்த்தம் முடிஞ்சதும் உன்கிட்ட ஜாடை காட்டிட்டு கௌம்பிடுவேன். எதிலயாவது என்னை இழுத்துவிடாதே! போ, போய் அடுத்து ஆக வேண்டியதைப் பாரு!" என்றான் விஸ்வம்.கல்யாணக் களைகட்ட ஆரம்பித்தது மண்டபத்தில்.மணியைச் சார்ந்த எல்லாருமே அவனைக் கைவிட்டு விட்டது மண்டபத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது-ஒற்றை விஸ்வத்தைத் தவிர.மணியின் நடவடிக்கைகள் எதுவுமே சரியில்லைதான் இதுவரை. ஆனால் அவனை இந்த முறையில் அணுகுவது அதீதமோ என்று கூட தோன்றியது.விஸ்வமும் எதையும் மறக்க வில்லைதான். ஆனால் இம்முறை மணியை ஒருமுறையேனும் மன்னித்துவிடலாம் எனத் தோன்றியது விஸ்வத்திற்கு.