கொழுக்கட்டை டிப்ஸ்

கொழுக்கட்டை டிப்ஸ்
Published on
ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி

* விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்வதற்கு பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நன்கு நைசாக அரைத்து, கொஞ்சம் பால்விட்டு நீர்க்க கரைத்துக்கொள்ள வேண்டும். சட்டியில் இரண்டு கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் கரைத்த மாவைவிட்டு அதனை அடுப்பில் வைத்து பத்து நிமிடம் கிளற வேண்டும். பிறகு நன்றாக மூடி வைத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து நன்றாகப் பிசைந்து உருட்டி, தேவையான பூரணம் வைத்து கொழுக்கட்டையை தயார் செய்ய வேண்டும்.

* வெல்லம், பூரணம் சற்று தளர இருந்தால் ஒரு கை அரிசிமாவு போட்டுக் கலந்துவிட்டால் இறுகிவிடும்.

* கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது, தண்ணீருடன் ஒரு கரண்டி பால்விட்டுக் கிளறினால் கொழுக்கட்டை விரிந்துபோகாது.

* கடலைப் பூரணம் அரைக்கும் போது, அதை மசிய அரைக்காமல் ஒன்றிரண்டாக அரைப்பதுடன், அதை சுருள கிளறிய பிறகே ஏலப்பொடி மற்றும் தேங்காய்த்துண்டு கீற்றுபோட்டுக் கொழுக்கட்டை செய்தால் சுவையாக இருக்கும்.

* கொழுக்கட்டையை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கும்போது பாத்திரத்தின் உள்ளே எண்ணெய் தடவி விட்டால், ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

* கடலைப்பருப்பு பூரணம் அரைக்கும்போது ஒரு துண்டு இஞ்சிபோட்டு அரைத்தால் வாய்வு தொல்லை வராது.

* எள்ளு பூரணம் செய்யும்போது எள்ளைப் பொடித்து, வெல்லப்பாகில் சேர்த்து பூரணம் உருட்டினால் வயதானவர்களும் சாப்பிட முடியும்.

* கொழுக்கட்டை செய்யும்போது விரியாமல் இருக்க, ரொம்ப நேரம் வேகவிடக் கூடாது.

* தேங்காய் கொழுக்கட்டை, கடலைப் பருப்பு கொழுக்கட்டைக்கு வித்தியாசம் தெரிய, ஒன்றின் செப்புக்கு நுனியும், இன்னொன்றுக்கு உருட்டியும் வைத்து வேக விடவும்.

* கொழுக்கட்டை மாவு மீதமிருந்தால் கோதுமை மாவுடன் கலந்து, கரைத்து தோசை செய்துவிடலாம். கொழுக்கட்டை கமகமவென மணக்க, மாவு கிளறும் போது ஏலப்பொடி போட்டு செய்ய வேண்டும்.

* கொழுக்கட்டை உருண்டை எலுமிச்சம் பழ அளவு உருட்டி, பூரணம் வைத்தால், சாப்பிட கணிசமாக இருக்கும். ரொம்ப குட்டி குட்டி வேண்டாமே.

* கணபதிக்கு இருபத்தியொரு கொழுக்கட்டைகளைத்தான் நிவேதனம் செய்ய வேண்டும். கூடவோ, குறையவோ கூடாது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com