`நமக்கு நாமே` – முதியோர் மந்திரம்

`நமக்கு நாமே` – முதியோர் மந்திரம்
Published on
சந்திப்பு : பத்மினி பட்டாபிராமன்

அக்டோபர் முதல் தேதி, உலக முதியோர் தினமாக அனுசரிக்கப்படுவதையொட்டி சென்னை, இந்திரா நகரில் இயங்கிவரும் இந்தியாவின் முதல் `முதியோர் நல மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை' ஜெரி கேர் (Geri Care)ல் இணைந்திருக்கும் முதியோர் நல மருத்துவர் டாக்டர் கே.அனுபமா அவர்களை அணுகி, சில கேள்விகளை முன்வைத்தோம்.

பொதுவாக, முதியோரின் செயல்பாடுகள் ஒரேமாதிரி இருக்குமா?

இல்லை… சிலர் அன்றாடம் தானே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், சிலர் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். ஆரோக்கியமாக இருந்தாலும், வேண்டு மென்றே படுத்தே இருப்பார்கள். பல் தேய்க்க, குளிக்க மாட்டார்கள், சாப்பிட மாட்டார்கள், மற்றவர்களிடம் பேச மாட்டார்கள், உதவியாளர் இருந்தாலும் அவர்களுக் குப் பணிய மாட்டார்கள். இந்த மாதிரி முதியோரிடம் பேசி, படுத்தே இருந்தால் அவர்களுக்கு வரும் நோய்கள், பெட்சோர் பற்றியெல்லாம் எடுத்துச்சொல்லி, மெல்ல மெல்ல அவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

முதியோரான ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்களா?

நிச்சயமாக இல்லை. இருபாலரிலும் சிலர் எத்தனை வயதானாலும் உற்சாகமாக, மோடிவேடட் ஆக இருப்பார்கள். ஆனால், அனேகம் பேர் விரக்தி மன நிலையில்தான் இருப்பார்கள். "நான் கடவுள்கிட்டே போகணும்" என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

அவர்களை எப்படித் தேற்றுவீர்கள்?

"கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் உங்களுக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். அதை முழுமையாக, நிறைவாக வாழவேண்டும்" என்று சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துவோம்.

`டிமென்ஷியா' வந்த சிலர், வீட்டை விட்டுப் போய், மீண்டும் திரும்பத் தெரியாமல் தொலைந்து விடுகிறார்களே…?

அப்படிப்பட்டவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு யாரிடமும் தனது முகவரியைச் சொல்லத் தெரியாது. வீட்டில் உள்ளவர்கள் எப்போதும் கதவை சாத்தி, அவர்களை கவனமாகக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். சி.சி.டி.வி கேமராக்கள், அலாரம் பொருத்தி கவனிக்கலாம். அவர்களது உடையில் வீட்டு முகவரி, தொலைபேசி எண் இவற்றை டேக் (tag) செய்து வைக்க வேண்டும். `டிமென்ஷியா' வந்த ஒரு முதியவரின் மனைவி, அவரது உடைகளில் பெயரையும் முகவரியையும் எம்பிராய்டரி செய்து வைத்திருந்தார். அவற்றையே அந்த முதியவரும் அணிவார்.

அரசாங்கத் தரப்பிலிருந்து முதியோருக்கு உதவிகள் ஏதும் வருகிறதா?

இந்த கோவிட் சமயத்தில் முதியோருக்குத் தேவையான தடுப்பூசிகள் கிடைப்பதில் அரசு பெருமளவில் உதவியாக இருந்தது. மற்றபடி, எங்களுக்குத் தேவைப்படும்போது அரசாங்கத்தை அணுகுவோம்.

முதியோர் இல்லங்களில் சேர்வதைப் பற்றி, அவர்களின் கருத்து என்ன?

முதியோர் நல மருத்துவராக, நான் நிறைய முதியோர்களைச் சந்திக்கிறேன். பொதுவாக, அனேகம் பேர் மருத்துவமனைகளில் சேர விரும்புவதே இல்லை. "இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே டாக்டர்" என்றுதான் சொல்கிறார்கள். முதியோர் இல்லங்களில் சேர்வதைப் பொறுத்தமட்டில், ஓரளவு நிறைய பணம் கொடுத்து சேரும் இல்லங்களில், சுத்தமான சூழலும், பாதுகாப்பும், நல்ல உணவும் கிடைக்கிறது எனலாம். ஆனால், இப்படிப் பணம் கொடுத்து சேரும் முதியவர்களுக்கு எல்லாவிதமான வசதி, நட்பு, மருத்துவ உதவிகள் இருந்தாலும், குடும்பத்தினர் பற்றிப் பேசும்போது ஒருவிதமான சோர்வு ஏற்படுவது என்னவோ உண்மை. பரிதாபமும்கூட.

முதுமையில் நிறைவான வாழ்க்கையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

முதலில், தன்னைத்தானே சார்ந்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இது முக்கியம். அடுத்த விஷயம், உணவு. வீட்டில் சமைத்த உணவு அவசியம். முடியவில்லையென்றால் இப்போதெல்லாம் வீட்டு உணவு கொடுக்கும் கேட்டரிங் சர்வீஸ் நிறையவே இருக்கிறது. ஆர்டர் செய்யலாம்.

சிறு தானிய உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். 76 வயதான ஒருவர் எனது பேஷண்ட். அவருக்கும் அவரது மனைவிக்கும் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, ஹைபர் டென்ஷன் எல்லாமே உண்டு. அவர்களது உணவில் ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் போன்ற ஸ்டோர் செய்த வகைகள் இருந்தன. அவற்றை மாற்றி, சிறு தானிய உணவுகள் சாப்பிட வைத்தேன்.

இதனால், அவர்களுக்கு அதன் பாதிப்பு குறைந்து விட்டது. தகுந்த கட்டுப்பாடான உணவின் மூலம், முதுமையில் வரும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். நடப்பது மிக மிக அவசியம். எங்கே, எப்படி முடிகிறதோ, அங்கே அப்படி தவறாமல் தினமும் நடக்க வேண்டும். அவரவருக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சி, யோகா செய்ய வேண்டும். அதற்கு வழிகாட்ட நிறைய பேர் இருக்கிறார்கள். நாங்களும் ஆலோசனைகள் தருகிறோம்.

தனிமை உணர்ச்சியை எப்படிப் போக்குவது?

நிறைய பேச வேண்டும். (சண்டையைப் பற்றிச் சொல்லவில்லை) பாட்டு பாடலாம், கேட்கலாம், புத்தகங்கள் படிக்கலாம், எழுத முயற்சி செய்யலாம், கைவேலை செய்யலாம், தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். கூட துணை இல்லை என்றாலும் வெளி ஆட்கள் யாருடனாவது கொஞ்ச நேரம் பேச வேண்டும்.

எப்படியானாலும், `நமக்கு நாமே' என்பது முதுமைக்கு நிச்சயமாகப் பொருந்தும். வரும் காலத்தில் முதுமையை எல்லோருமேதான் எதிர்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றபடி நம் மனத்தையும், உணவுப் பழக்கத்தையும், உடலையும் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com