மேற்கு வங்க இடைத் தேர்தல்: பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

மேற்கு வங்க இடைத் தேர்தல்: பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து மம்தா பானர்ஜி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இடைத் தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. இதன்படி, 'பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக அத்தொகுதி எம்.எல்.ஏ-வும் அம்மாநில வேளாண்துறை  அமைச்சருமான சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியைக் கடந்த மே மாதம் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பவானிபூரில் மம்தாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இம்மாதம் 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com