உக்ரைனில் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில்,
கச்சா எண்ணெய் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்து 110 டாலரை தொட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடுகள் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது;
இந்தியா உள்ளிட்ட 31 நாடுகளை உறுப்பினராக கொண்ட சர்வதேச எரிசக்தி முகமையில் 150 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் அவசர கால சேமிப்பாக உள்ளது. இதில் 6 கோடி பீப்பாய்கள் மட்டும் வெளியே எடுக்கப்பட உள்ளது. 3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை சேமிப்பிலிருந்து எடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் அவசர கால தேவைக்காக 3 கோடியே 90 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை 3 இடங்களில் நிலவறைக்குள் சேமித்து வைத்துள்ளது. இது 8 முதல் 9 நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையே உக்ரைன் போர் மேலும் தீவிரமடைந்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக வரும் ஏப்ரல் மாதத்தில் கூடுதல் கச்சா எண்ணெய்யை மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து வாங்க பாரத் பெட்ரோலியம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.